> குருத்து: எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி

January 1, 2023

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி


ஜென்னி வான் வெஸ்ட் பாலன் 1814 ஆம் ஆண்டு பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். ஜெர்மன் மொழி இலக்கியத்தில் வல்லுநர். யூத குடும்பத்தில் பிறந்த காரல்மார்க்சை காதலித்தார். நான்கு ஆண்டுகள் வயது குறைந்தவரான மார்க்சை சிறு வயதிலிருந்தே காதலிக்க தொடங்கி விட்டார். ஆறு ஆண்டுகள் காத்திருந்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.


வறுமையில் வாழ்க்கை நகர்ந்தாலும் மார்க்சுடன் இருப்பதே பெரிய மகிழ்ச்சி எனக் கருதினார். மார்க்சு எழுதியவைகளை படித்துப் பார்த்து யோசனை தருவது, சொன்னபடி எழுதி செப்பனிடப்பட்ட எழுத்துக்களை திருத்தமாக படி எடுத்து காரல் மார்க்சுக்கு தருவது, குடும்பத்தை கவனிப்பதுமாய் இருந்தார்.

மார்க்சின் எழுத்து ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்தியது. நாட்டை விட்டு வெளியேற சொன்னார்கள். வெளியேறினார். அவரை பிரியாது ஜென்னியும் குழந்தைகளுடன் உடன் செல்வார். மொத்தம் ஏழு குழந்தைகள். அதில் நான்கு குழந்தைகள் இறந்துபோயின. குழந்தையை புதைக்க கூட பணம் இல்லாமல், ஒரு அறையில் குழந்தையின் உடலை வைத்துவிட்டு, மறு அறையில் மற்ற குழந்தைகளுடன் அழுதுகொண்டிருந்தனர். எட்டு வயது மகனாகிய எட்கர் இறந்தது அவர்கள் இருவரையும் கடுமையாக உலுக்கியது.

”எனது மிகவும் சந்தோஷமான நாட்கள் மார்க்ஸ் எழுதும்பொழுது உதவிய நாட்களே!” ஜென்னி அந்த அளவிற்கு மார்க்சை விரும்பினார். வறுமை வாட்டிய பொழுதிலும், தனது இறுதிநாள் வரை மார்க்சுடன் ஜென்னி உடனிருந்தார்.

ஆசிரியர்: ஜென்னி மார்க்ஸ்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
பக்கங்கள்: 60
விலை: ரூ.40.00

0 பின்னூட்டங்கள்: