> குருத்து: வாசிப்பது எப்படி?

January 3, 2023

வாசிப்பது எப்படி?


கடந்த ஆண்டு பிக்பாசை கமல் வரும் சனி ஞாயிறுகளில் மட்டும் கவனித்து வந்தேன். கமல் ஒரு வாரம் இந்தப் புத்தகத்தை கவனப்படுத்தியிருந்தார். அப்பொழுதே வாங்கிப் படித்து பாதியில் நிறுத்தியிருந்தேன். வேறு திசை மாறி போனதில் மறந்துவிட்டேன். இப்பொழுது வேறு ஒன்றை தேடும்பொழுது இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. எடுத்து முடித்துவிட்டேன்.

படிப்பதினால் என்ன பயன் என்பதை பல்வேறு கோணங்களில், கோபித்து, சாந்தமாகி என பல்வேறு உணர்ச்சி நிலைகளிலும் எழுதியிருந்தார். ”பதின்பருவத்திற்கான வாசக வழிகாட்டி” என கொடுத்திருந்தார். இந்தப் புத்தகம் அவர்களுக்காக என சொன்னாலும், படித்து முடித்தப்பின் இந்தப் புத்தகம் அவர்களால் படிக்கமுடியுமா என கேட்டுக்கொண்ட பொழுது இல்லை என்று மட்டும் என் மனதில் பட்டது.

சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் சில புரிதல்களை உருவாக்கும். இளம் பருவத்தினரிடம் கொண்டு செல்வதற்கு ஒரு உத்வேகத்தைத் தரும் என சொல்வேன்.

நம் ஊரில் நடுத்தர வர்க்கம் அரசு பள்ளிகளை விட்டு நகர்ந்து, இங்கிலீஷ், இந்தி வழி படித்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றிலுமே தெளிவில்லாமல் இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே பள்ளியில் படித்த என் நண்பனின் நண்பனுக்கு ”தாய்” நாவலை அவனால் படிக்க முடியவில்லை. நான் வாசித்து காண்பித்தது நினைவுக்கு வருகிறது.

போன தலைமுறை தான் எழுத்தை வாசிக்கிற தலைமுறையாக இருக்கிறது. இப்போதைய தலைமுறை காட்சி வழி தலைமுறையாக இருக்கிறது. எங்கள் வீட்டில் என் பொண்ணுக்கு படிப்பதற்கு உற்சாகப்படுத்தினோம். ஆனாலும் காட்சி வழியாக அதாவது எங்களோடு சர்வதேச அளவில் பல்வேறு மொழிப்படங்களை பார்க்க கற்றுக்கொண்டாள். படிப்பது அவளுக்கு உவப்பாக இல்லை.

என்ன உற்பத்தி முறை சமூகத்தில் நிலவுகிறதோ, அது தான் பண்பாடாகவும் மக்களிடத்தில் படிகிறது. நிலவுவது முதலாளித்துவ உற்பத்தி முறை கூட அல்ல! நிதி மூலதன ஆதிக்க கும்பல்கள் தான் உலகை வழிநடத்துகிறார்கள். அதனால் தான் பொருளாதாரம், அரசியல், பண்பாடு துறைகளில் எல்லா விழுமியங்களையும் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள். அதை சரி செய்ய முயலாமல், நாம் வெறுமனே கவலைப்படுவது என்பது வெறும் புலம்பலாக தான் முடியும். இது தான் என் புரிதல்.

இன்னும் கொஞ்சம் விரிவாக படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு கட்டுரையை பின்னூட்டத்தில் பரிந்துரைக்கிறேன். படித்துப் பாருங்கள்.

கடந்த ஆண்டு அபிலாஷ் சந்திரன் எழுதிய ”ஏன் வாசிக்கவேண்டும்?” என்ற புத்தகம் இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சி என எடுத்துக்கொள்ளலாம். இந்த புத்தகத்தை வாசித்தவர்கள் அடுத்து அந்தப் புத்தகத்தை படிக்க பரிந்துரை செய்கிறேன்.

நண்பர் ஒருவர் சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். கமல் பரிந்துரைத்தாகவும் சொன்னார். இந்த பிக்பாசிலுமா சொன்னார் என கேட்டதற்கு, “இது தாங்க நம்ம டக்கு” என்றார். :)


- ஆசிரியர் செல்வேந்திரன்

விலை ரூ. 100



0 பின்னூட்டங்கள்: