> குருத்து: மூன்றாம்பிறை - நடிகர் மம்முட்டியின் வாழ்க்கை அனுபவங்கள்

January 24, 2023

மூன்றாம்பிறை - நடிகர் மம்முட்டியின் வாழ்க்கை அனுபவங்கள்


தன் வாழ்வில் எதிர்கொண்ட சில மனிதர்களை, சில சம்பவங்களை சொல்லி, அதன் மூலம் தான் என்ன கற்றுக்கொண்டேன், என்ன உணர்ந்தேன், சமூகம் எப்படியிருக்கிறது என்பதை எளிமையாக சொல்லி செல்கிறார் மம்முட்டி.


தன்னை தன் மூத்த மகனாக நினைத்து பேசிய எதைச்சையாய் சந்தித்த ஒரு தாயின் மனநிலையை புரிந்துகொண்டு தன் தாய், தந்தையின் மனநிலையை புரிந்துகொண்டு தன் தவறைத் திருத்திக்கொள்கிறார்.

ஒரு இரவில் வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது…மம்முட்டியை யாரென தெரியாமலேயே ஒரு முதியவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டு இருக்கும் தன் பேத்தியை காப்பாற்ற உதவ கோருகிறார். மம்முட்டி உதவுகிறார். மருத்துவமனைக்குள் உள்ளே நுழையும் பொழுது… கசங்கிய இரண்டு ரூபாயை கையில் கொடுத்துவிட்டு செல்கிறார்.

காட்சியின் இயல்புக்காக உண்மையில் காடுகளில் வாழும் பழங்குடி மக்களை அழைத்து வந்து ஒரு விருந்து உண்ணும் காட்சியை படமாக்குகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் படம் பார்த்ததில்லை. ஸ்டார்ட். கட். என்பதெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை. வைத்தால் சாப்பிடுகிறார்கள். இல்லையெனில் ”தீர்ந்துவிட்டதா” என கேள்வி கேட்கிறார்கள். மம்முட்டியின் அருகில் அமர்ந்திருந்த பழங்குடி சார்ந்தவர், சாப்பிட்டுக்கொண்டிருந்த மம்முட்டியின் இலையில் அவியல் இல்லையென பார்க்கிறார். கொஞ்சமும் யோசிக்காமல்… தன் இலையில் இருந்ததை அவருக்கு எடுத்து வைக்கிறார். சாதி, மதம், ஏற்றத்தாழ்வு என ஏகப்பட்ட கோளாறுகளுடன் வாழ்ந்துவரும் நம்மிடையே சாத்தியமா? என கேட்கிறார்.

பெரிய நடிகன் என்ற பந்தா இல்லாமல்... தன் எண்ணங்களை, உணர்வுகளை மலையாள மண்ணின் தன்மைக்கேற்றவாறு எளிமையாக பேசுகிறார். எதைச் சொன்னாலும், பொதுவாக குறை சொல்லாமல், அந்த தவறுக்கான பரிசீலனையை தன்னிலிருந்து துவங்கி எழுதியிருப்பது சிறப்பு.

பொதுவாக ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை பொதுவெளியில் சொல்வது எப்பொழுதுமே குறைவு தான். அப்படி நல்லமுறையில் ஒரு படைப்பாக கொண்டு வந்துவிட்டால் அந்த புத்தகம் எப்பொழுதுமே சிறந்துவிளங்கும்.

பொதுவாக நடிகர்கள் இப்படி எழுதுவது குறைவு. தமிழில் விகடன் போன்ற பத்திரிக்கைகள் ஆசிரியர் குழுவில் இருப்பவரில் ஒருவர் நடிகர்களிடம் விவாதித்து அதனை செழுமைப்படுத்தி எழுதி வெளியிடுவார்கள். இந்த வடிவத்தில்…உள்ளடக்கத்திலும், எழுதிய வடிவத்திலும், படித்ததில் மிகவும் பிடித்தது நடிகர் பிரகாஷ்ராஜின் ”சொல்லாததும் உண்மை.”

மம்முட்டி 2002 காலக்கட்டத்தில் ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கைக்காக வாரம் வாரம் தொடர்ந்து எழுதியதை “காழ்ச்சப்பாடு” (Perspective) என்ற தலைப்பில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதை தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மலையாளத்திலிருந்து வந்த புத்தகம் என்கிற உணர்வு வராமல், தமிழிலேயே எழுதப்பட்டது போல மொழிபெயர்ப்பை சிறப்பாக செய்திருக்கிறார். ”மூன்றாம்பிறை” என அதற்கு ஒரு நல்ல தலைப்பையும் கொடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தாராளமாய் சொல்லலாம்.

புத்தக காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இரண்டு மாலை வேளையில் படித்து முடித்துவிட்டேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

ஆசிரியர் : மம்முட்டி
தமிழில் : கே.வி. ஷைலஜா
வெளியீடு : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 128
விலை : ரூ. 150

0 பின்னூட்டங்கள்: