> குருத்து: காந்தி கொலை வழக்கு

January 1, 2023

காந்தி கொலை வழக்கு


நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினர். மற்ற இந்துத்துவ அமைப்புகளில் நெருக்கமாக இருந்துள்ளான். திருமணம் செய்துகொள்ளவில்லை. (அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற விதி இருந்தது. பின்னாட்களில் ஊழியர்கள் மேல் பாலியல் பிரச்சனைகள் எழுந்ததால், திருமணம் செய்துகொள்ளலாம் என விதியை திருத்தினார்கள்.)


சாவர்க்கரின் ஆசியில் மராத்தி மொழியில் “அக்ரணி” (முன்னோடி) என ஒரு இதழை நடத்தியுள்ளான். அந்த காலக்கட்டத்திலும் வதந்தி, அவதூறு செய்திகளை பரப்பவே, அரசு தடை செய்துள்ளது. உடனே “இந்து ராஷ்டிரா” என புதிய இதழை துவங்கியுள்ளான்.

கோட்சே போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகள் என்ன செய்தாலும் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு பெறமுடியவில்லை என்பது பெரிய மன உளைச்சலாகவே இருந்துள்ளது. இந்தியாவில் காங்கிரசுக்கும், காந்திக்கும் உள்ள செல்வாக்கு பெரிய எரிச்சலை கொடுத்திருக்கிறது. இரண்டாம் உலக்ப்போர் நடந்த சமயம், சாவர்க்கர் பிரிட்டிசாரிடம் நல்ல பெயர் எடுக்க தனது இந்துத்துவ விசுவாசிகளை பிரிட்டிஷ் படையில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து… பிரிட்டிஷ் வெளியேற இருக்கும் சூழ்நிலையில், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பிரச்சனை துவங்கியிருக்கிறது. ஜின்னாவை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. பாகிஸ்தான் வேண்டும் என உறுதியாய் இருந்திருக்கிறார்.

கலவரங்கள் வெடிக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் இந்துக்கள் வருகிறார்கள். இங்கிருக்கும் முசுலீம்கள் பாகிஸ்தானுக்கு நகர்கிறார்கள். இந்துத்துவ ஆட்கள் பெரிய கலவரத்தை நடத்துகிறார்கள். காந்தி தனது உண்ணாவிரதத்தினால் அமைதிப்படுத்த முயல்கிறார்.

ஏற்கனவே காந்தியின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள். 1944லிலேயே ஒருமுறை நாதுராம் கோட்சே கத்தியோடு தாக்க போய் பிடிபட்டு, காந்தி கோட்சே மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என சொன்னதால் தப்பித்துள்ளார்.

இந்தமுறை கொன்றே தீரவேண்டும் என தமது ஒத்த கருத்து ஆட்களை திரட்டி, இந்த்துவ ஆதரவு முதலாளிகளிடம் போய் நன்கொடைகளை திரட்டி மக்கர் செய்யும் துப்பாக்கிகள் இரண்டை தேத்தி, வெடிகுண்டுகளை வாங்கி, மும்பையிலிருந்து தில்லி வந்து காந்தி கொல்லப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு காந்தி தங்கியிருந்த பிர்லா இல்லத்திற்கு வந்து… கத்துக்குட்டித் தனமாக ஒரு தாக்குதலை நடத்தில் கோட்சேவின் ஒரு ஆள் சிக்கவும் செய்திருக்கிறான். மற்றவர்கள் சுதாரித்து தப்பிவிட்டார்கள்.

பிடிபட்ட ஆள் சொன்னதை வைத்தே போலீசு தீவிரமாக விசாரித்து இருந்தால், கோட்சே கும்பலை பிடித்திருக்கலாம். மந்தமாகவும், அலட்சியமாகவும் கையாண்டிருக்கிறார்கள். கடந்த முறை செய்த சொதப்பலை இனி செய்யக்கூடாது என முடிவெடுத்து, ஒற்றை ஆளாய் காந்தியை கொல்ல கோட்சே முடிவெடுக்கிறான். குவாலியருக்கு போய் அங்கு இந்துத்துவ பிரமுகர் டாக்டர் பார்ச்சூரைப் பார்த்து விசயத்தை சொல்லி, ஒரு தரமான இத்தாலி துப்பாக்கியை வாங்குகிறான். தன்னுடன் இரண்டு பேருடன் மீண்டும் தில்லி வந்தடைகிறான்.

பிர்லா இல்லத்தில் பிரார்த்தனைக்கு வருபவர்களை யாரையும் சோதனை இடக்கூடாது என்பதில் காந்தி பிடிவாதமாக இருந்திருக்கிறார். தனக்கு பாதுகாப்பும் வேண்டாம் என சொல்லியிருக்கிறார். நெருக்கடியான நிலை, தன் உயிருக்கும் ஆபத்து என்பது காந்திக்கு தெரிந்தும் இருக்கிறது. ஆனால் கொன்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலையில் தான் இருந்திருக்கிறார்.

கோட்சே உள்ளே போகிறான். அன்றைக்கு சர்தார் வல்லபாய் படேல் தனக்கும் நேருவுக்கும் உள்ள முரண்பாட்டை காந்தியிடம் விவாதிக்க வந்திருக்கிறார். மதியம் துவங்கிய பேச்சு மாலை வரை நீளுகிறது. இருவரும் தங்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றாக செயல்படவேண்டும் என காந்தி வலியுறுத்துகிறார்.

ஐந்து மணிக்கு வழக்கமான பிரார்த்தனை. தாமதம் செய்வது காந்திக்கு அறவே பிடிப்பதில்லை. வேகமாக 5.10க்கு குறுக்கு வழியில் போகிறார். எதிரே வந்த கோட்சே சுடுகிறான். மூன்று குண்டுகள். காந்தி கொல்லப்படுகிறார். கோட்சே தப்பிக்க முயற்சி செய்யவில்லை.

முசுலீம் ஒருவன் கொன்றுவிட்டான் என வதந்தி பரப்பியிருக்கிறார்கள். பிறகு இநது ஆள் என அறிவித்திருக்கிறார்கள்.

கோட்சேவுக்கும், கூட்டாளி ஆப்தேவுக்கும் தூக்குத்தண்டனை. மற்ற துணை நின்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள்.

கோட்சேவின் பிறப்பு, வளர்ப்பு, கொல்ல முடிவு. ஆயுதம் சேகரிப்பு, தாக்குதல் திட்டம், இந்தியாவின் அன்றைய அரசியல் சூழ்நிலை, கொலை, பிறகு விசாரணை என பல அம்சங்களையும் பறவை பார்வையில் ஆசிரியர் சொக்கன் எழுதியுள்ளார். நாவல் வடிவத்தில் எழுதியிருப்பது. படிக்க வசதியாய் இருக்கிறது. இப்படி எழுதுவது உண்மையிலேயே சிரமம். நிறைய படிக்கவேண்டும். சரி பார்க்கவேண்டும்.

தொழில்முறை எழுத்தாளர் போல ஆசிரியர் எழுதுகிறார். ஆகையால் அரசியல் ரீதியில் ஆழமாக எழுதிய சில புத்தகங்கள் படித்து இன்னொருமுறை விரிவாக எழுத முயல்கிறேன்.

ஆசிரியர் : என். சொக்கன்
பக்கங்கள் : 256
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

0 பின்னூட்டங்கள்: