> குருத்து: வாசிப்பை நேசிப்போம் விழா! வாசிப்பவர்களை உற்சாகப்படுத்தும் விழா!

January 9, 2023

வாசிப்பை நேசிப்போம் விழா! வாசிப்பவர்களை உற்சாகப்படுத்தும் விழா!



முகநூலில் வாசிப்பதை உற்சாகப்படுத்துவதற்கு தமிழில் சில குழுக்கள் இயங்கி வருகின்றன. அதில் 57 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட ”வாசிப்பை நேசிப்போம்” குழு உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் குழு.


நமது குழுவில் கடந்த வருடம் அந்த குழுவில் மாரத்தான் போட்டி, எழுத்தாளர் கொண்டாட்டம், 30நாள் வாசிப்பு போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளில் இணைந்து வெற்றிகரமாக இலக்கை எட்டியவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னையில் தக்கார் பாபா அரங்கில் நடைபெற்றது.

ஆண்டு முழுவதும் குறைந்தப்பட்சம் 30 புத்தகங்களை படித்து, விமர்சனமாக, அறிமுகப்படுத்தும் விதமாக எழுதுவது தான் மாரத்தான் போட்டி. நானும் அந்த ஒரு போட்டியில் மட்டும் இணைந்திருந்தேன். துவக்க மாதங்களில் எல்லாம் மெல்ல வாசிக்க ஆரம்பித்து, நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்களிலும் அடித்துப் பிடித்து இலக்கையும் எட்டியிருந்தேன்.

பரிசுகள் வழங்கப்பட்டன. எல்லாரும் சுருக்கமாகவும், தெளிவாகவும் தங்களுடைய சின்ன சின்ன அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். சொற்களின் வலிமை தெரிந்ததினால் இருக்கலாம்.

”நான் வாங்குகிற புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லமுடியாது. அம்மா திட்டுவார். ஆகையால், அலுவலகத்தில் தான் அடுக்கி வைத்திருக்கிறேன்” என்றார் ஒரு இளைஞர்.

”தினமும் இரண்டு பக்கங்கள் வாசிக்க துவங்கினேன். இன்றைக்கு ஒரு நாளைக்கு 80, 90 பக்கங்கள் படிக்கிறேன்” என்றார் ஒரு இன்னொரு இளைஞர்.

“பள்ளியில் பிள்ளைகளில் தேர்வுத் தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தலை சுத்திப் போகிறார்கள். நாம் படிப்பது மட்டும் போதாது! அடுத்த தலைமுறைகளையும் படிக்க வைக்க முயல்வேண்டும்” என்றார் ஒரு ஆசியர்.

”பொது வேலை ஒன்றில் இருப்பதால், வாசிப்பதற்கென்று எனக்கு இலக்கு இருக்கிறது. படிக்கும் மக்களோடு நானும் சேர்ந்துகொள்வதால், நானும் நிறைய படிக்கிறேன். 57 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட குழுவை பராமரிப்பது பெரிய விசயம். குழு நிர்வாகிகள் பெரிய பொறுப்பை விருப்பார்வத்துடன் செயல்படுத்துகிறார்கள். அவர்களுக்கு நன்றி” சொன்னேன் நான்.

இப்படி பல பல அனுபவங்களை நெகிழ்வோடும், மகிழ்வோடும் பலரும் பகிர்ந்துகொண்டார்கள்.

குழுவின் நிர்வாகி கதிர் பேசினார். “வாசிக்க நினைத்தேன். குழு துவங்கினேன். எல்லோருடனும் நானும் படித்தேன். பல எழுத்தாளர்களைப் படிக்க நினைத்தேன்.”எழுத்தாளர் கொண்டாட்டம் ” துவங்கினேன். எல்லோரும் படித்தார்கள். நானும் படித்தேன். என்னைப் போலவே குழுவின் மீது அக்கறை கொண்டவர்களும் உடன் பயணிப்பதால், அவர்கள் பல வேலைகளை பிரித்து செய்வதால். என் வேலையின் சுமையை குறைக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் prasancbe tamirabaran, Gomathi sankar. இனி அடுத்து என்ன செய்வது என்பதை என்னை விட ஆர்வமுடன் சொல்பவர்கள் அவர்கள். பெரும்பாலானவர்கள் சொன்னதை செய்கிறார்கள்.

எந்தப் போட்டி நடத்த நினைத்தாலும், இந்த போட்டி வெற்றி பெறுமா என சின்ன சந்தேகம் வரும். ஆனால் கருணாமூர்த்தி (இந்த ஆண்டில் 417 புத்தகங்கள் படித்து எழுதியவர்) போன்றவர்கள் இருக்கும் வரை எந்த கவலையும் இல்லை. அவர் அந்த போட்டியையும் அருமையாக முன்னெடுத்து செல்கிறார். பின்னாலேயே பலரையும் ஆர்வமாக பின்தொடர வைத்துவிடுகிறார். அவர் இருக்கும் வரை எந்த போட்டியையும் தைரியமாய் நடத்தலாம். கவலையில்லை.

சென்னையில் புத்தாண்டை ஒட்டி புத்தக திருவிழா நடத்துகிறார்கள். அதனால் பரிசளிப்பு விழாவையும் இங்கு நடத்துகிறோம். தூரம் அதிகம் என்பதால், தென் பகுதியில் இருந்து... பலரால் வர இயலவில்லை. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடக்கும் பொழுது, நமது குழு உறுப்பினர்களை அங்கு சந்திக்கும் ஏற்பாட்டை செய்யலாம் என யோசித்து வருகிறோம்.

இனி காணொளி வாயிலாக புத்தக விமர்சனம் செய்யலாம் என கொண்டு வரலாம் என பரிசீலிக்கிறோம். வாசிப்புக்கு பிறகு இனி வரலாற்று வழி பயணம் மேற்கொள்ளலாம் என யோசித்து வருகிறேன். முதலில் தமிழ்நாட்டிற்குள் சுற்றுவோம். பிறகு பிற மாநிலங்கள் என நகரலாம். எத்தனைப் பேர் இணைந்து கொள்கிறீர்களோ, இணைந்து கொள்ளுங்கள். நம்ம நிறைய செலவு செய்யப்போவதில்லை. அவரவர் காசு தான். இந்த ஆண்டு இதை நடைமுறைப்படுத்தலாம்” என இன்னும் பல விசயங்களை தொட்டுப் பேசினார்.

மொத்த நிகழ்ச்சியையும் Priyadharshini Gopal உயிர்ப்புடன் ஒருங்கிணைத்தார். எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் சொன்னார். எல்லோரையும் அழைக்கும் பொழுதும், பேசுவதற்கு உற்சாகப்படுத்தும் பொழுதும் அவ்வளவு அன்பும், உற்சாகமும் இருந்தது.

உள்ளே நுழைந்ததும் கமர்கட்டு மிட்டாய், கொஞ்ச நேரத்தில் டைரி மில்க் சாக்லெட், பிஸ்கெட், தேநீர் என எல்லாமும் சுவையாக இருந்தன. நிகழ்வு முடிந்ததும், அரிசி சோறும் , சாம்பார், வத்தல் குழம்பு, ரசம் என ஒரு அருமையான சாப்பாடு. (தக்கார் பாபா அரங்கில் அசைவத்திற்கு அனுமதியில்லை என எழுதிப் போட்டிருந்தார்கள். (பாவிகள் 🙂 )

”சொல்லில் பிடித்தது செயல்” என்பார் தோழர் லெனின். நாம் வாசிப்பது எழுத்துகளைத் தான். ஒரு மனிதனின் சராசரி வாழ்வை யூடர்ன் போட்டு சரியான பாதையில் திருப்பி விடுவதற்கு சில சொற்கள் போதுமானவை. அதை தொடர் வாசிப்பில் நம் வாசகர்கள் கண்டடைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: