> குருத்து: காடோடி – நாவல்

January 1, 2023

காடோடி – நாவல்


மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பரை சந்திக்கும் பொழுது, இந்த நாவலைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். கையோடு இரவல் வாங்கி படித்துவிட்டேன். அழுத்தமான பதிவு.

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் போர்னியா மழைக்காடுகள் பசுமையாய் இருந்திருக்கின்றன. ஒரு வெட்டுமர முகாமில் வேலை செய்தபோது நிகழ்ந்த அந்த காட்டையே அழிப்பை கண்ணெதிரே பார்த்து, அதை நமக்கு தந்துள்ளார்.

அவதார் படத்தில் அந்த பெரிய மரம் சாயும் பொழுது, அந்த பண்டோரா பழங்குடி மக்களின் ஓலம் நம்மை உலுக்கும். இந்த காட்டில் லட்சகணக்கான மரங்கள் அப்படி சாய்க்கப்பட்டன என படிக்க படிக்க பதறுகிறது.

”காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது” என அவன் காட்டை வென்றான் நாவலில் வரும் பாத்திரம் சொல்லும். இந்த காட்டில் எத்தனை விதவிதமான மரங்கள், பூக்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் பற்றி பல குறிப்புகளையும், அதன் மருத்துவ குண நலன்கள் பற்றியும் போகிற போக்கில் நிறைய சொல்லி செல்கிறார். ஓமர், யோகன்னா, பிலீயவ், ஜோஸ் என நினைவில் நிற்கும் பாத்திரங்கள்.

மரம் என்றால், அது இலைகள் அல்ல, பூக்கள் அல்ல, காய்கள் அல்ல, கனிகளும் அல்ல, ஏன் அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர் டாலர் டாலர் மட்டுமே! என ஓரிடத்தில் வரும். டாலருக்காக இப்படி எத்தனையோ காடுகளை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள். அதனால் வரும் பருவ மாற்றத்தினாலேயே உலகம் ஏகப்பட்ட பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. உலகை சிதைக்கும் கார்ப்பரேட்டுகளை எதிர்த்து போரிடாமல் எதையும் காப்பாற்ற முடியாது.

ஆசிரியர் : நக்கீரன்
வெளியீடு : காடோடி பதிப்பகம்
பக்கங்கள் 312
விலை : ரூ. 300

0 பின்னூட்டங்கள்: