> குருத்து: ஆயிஷா - குறுநாவல்

January 1, 2023

ஆயிஷா - குறுநாவல்

 


சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறை படிக்கும் பொழுது எவ்வளவு உள்ளம் வெதும்பியதோ இத்தனை வருடங்களுக்கு பிறகு படிக்கும் பொழுதும் அவ்வளவு உள்ளம் வெதும்புகிறது. அருமையான நாவல்.


அறிவியல் கேள்விகளால் துளைத்தெடுக்கும் ஆயிஷாவும், மரத்துப்போன நிலையில் இருந்தாலும், ஒரு மாணவியிடமிருந்து வந்த கேள்விகளால், தலையை சிலுப்பிக்கொண்டு தன்னை உடனடியாக மாற்றம் செய்துகொண்ட அந்த ஆசிரியரும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

ஆயிஷா நம் குழந்தைகளின் அறிவியல் தாகத்தின் ஒரு தேவதை வடிவம். அவளை வதைப்பதும், வாட்டுவதும் நமக்கு நாமே சாட்டை எடுத்து அடித்துக்கொள்வது தான்!

கடந்த பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். இந்த கல்விமுறை கோளாறானது என்பதை சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பல்கலை கழக துணைவேந்தர்கள் என பல கல்வியாளர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் ஏன் தொடர்ச்சியாய் கடைப்பிடிக்கிறார்கள் என தொடர்ந்து தேடலின் விளைவாக… அதற்கும் பதில் கிடைத்தது.

பிரிட்டிசார் ஆதிக்கத்தில் இருந்த பொழுது, எல்லா வேலைகளையும் பிரிட்டிசாரை வைத்து வேலை வாங்க முடியாது. இந்தியர்களையும் வேலைக்கு அமர்த்தியே ஆகவேண்டும். சரியான அறிவியல் கல்வி என்பது சுதந்திர உணர்வை கிளறக்கூடியது. கல்வி தரவேண்டும். ஆனால் அடிமை சிந்தனையோடு இருக்கவேண்டும் என்ற சதித்திட்டத்தின் விளைவாக உருவாகியதே ”மெக்காலே” கல்வி முறை.

சுதந்திரத்திற்கு முன்பு இதை அமுல்படுத்தினார்கள். புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் ”சுதந்திரம்” கிடைத்த பிறகும் ஏன் இந்த கல்விமுறையை இந்த அரசு நீடிக்க வைக்கிறது என்பது முக்கியமான கேள்வி அல்லவா! இது குறித்து மொத்த சமூகமும் சிந்திக்கும் பொழுது இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆயிஷா பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திருப்பது ஆரோக்கியமான விசயம். அதே போல கல்வி சார்ந்து அக்கறை கொண்ட சமூக இயக்கங்கள் இதை மலிவு விலையில் அச்சடித்து மக்களிடம் சேர்த்தது ஆரோக்கிமான விசயம்.

சுதந்திரம் என்பது எல்லா அடிமை தளைகளிலிருந்து இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாய் விடுபடுவது தானே! ஆயிஷாவும் நமக்கு உதவுகிறாள்.

இந்த நாவலை குறும்படமாக படமாக்கினார்கள். குறுநாவலில் கொடுத்த உணர்வை அந்தப் படமும் கொடுத்தது. நாவலில் ஆயிஷா தோற்றம் போல படத்தில் இல்லையே என்ற குறையை அந்த ஆயிஷாகவே மாறி போக்கினாள்.

ஆயிஷா என்ற தேவதை படிக்கிற எல்லோரிடமும் கொஞ்சம் ஒட்டிக்கொள்வாள். என்னிடமும் தான். எந்த குழந்தை கேள்விக் கேட்டாலும், எத்தனை நெருக்கடி வேலை இருந்தாலும் காது கொடுத்து கேட்கிறேன். தெரிந்த பதில் என்றால் உடனடியே பதில் சொல்கிறேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை என சொல்லி... தேடி சொல்கிறேன் என பதில் அளிக்கிறேன். அதே போல தேடி பதிலையும் சொல்லிவிடுகிறேன்.

ஆசிரியர் : இரா. நடராசன்
பக்கங்கள் : 30

0 பின்னூட்டங்கள்: