> குருத்து: காந்தி கதை

January 1, 2023

காந்தி கதை


காந்தியைப் பற்றிய படங்களும், பாடங்களும், நிறைய கதை வடிவிலும் கேட்டிருப்போம். இந்தப் புத்தகம் படக் கதையாக காந்தி வரலாற்றை சொல்லியிருக்கிறார்கள்.


இதில் காந்தியைப் பற்றி தெரியாத சின்ன சின்ன செய்திகள் அதிகம் இருக்கின்றன. அதில் சிலதை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

காந்தியின் தாத்தாவும், அப்பாவும் போர்பந்தர் என்னும் சிறு சமஸ்தானத்தின் முக்கிய மந்திரிகளாக இருந்திருக்கின்றனர். தந்தையின் வேலையை பெறுவதற்கு தான் காந்தியை இங்கிலாந்துக்கு பாரிஸ்டர் ஆக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சமஸ்தான மந்திரி வேலை கிடைக்கவில்லை போலிருக்கிறது. பாரிஸ்டர் படித்து இந்தியா வந்து வழக்கறிஞர் தொழிலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் வெற்றி பெறவில்லை. அதனால் ஒரு நிறுவனத்தின் சார்பில் தென்னப்பிரிக்கா சென்றிருக்கிறார்.

”இந்தியாவை பரிசுத்தமாக்குவதே லட்சம். ஆங்கிலேயரை வெளியேற்றுவது உப விளைவு தான்” என ஓரிடத்தில் சொல்கிறார்.

1924ல் காங்கிரசின் அடுத்தக் கூட்டத்தில் தலைமை ஏற்க அழைக்கும் பொழுது… ”அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். எதற்கெடுத்தாலும் என்னையே நாடுவதா?” என சலித்துக்கொள்கிறார்.

”1938ல் இந்து முசுலீம் பிளவு விரிந்துவந்த சமயம் அது. எனினும் காந்திஜி அரசியலில் இருந்து விலகி, கிராமத் தொழில்களை வளர்ப்பதில் ஈடுபட்டார்.” என ஒரு செய்தி வருகிறது.

இரண்டாம் உலகப்போர். ஏகாதிப்பத்தியங்களுக்குள் நடந்த சண்டையில் காலனியாக இருந்த இந்தியாவையும் பிரிட்டிஷ் இணைத்தனர். காங்கிரசில் விவாதம் வந்திருக்கிறது. சுதந்திரம் கொடுத்தால், உதவலாம் என இராஜாஜி சொல்லும் பொழுது, காந்தி ”இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரிட்டனை நெருக்க விரும்பவில்லை” என்கிறார்.

காந்தி தன் வாழ்நாளில் இந்தியாவில் 2089 நாட்களும், தென்னாப்பிரிக்காவில் 249 நாட்களும் இருந்திருக்கிறார். ஆக 6.5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகப்பிரிவினையில் 55 கோடி இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டும் என சொல்லி, கொடுக்கவும் வைத்திருக்கிறார். நாதுராம் கோட்சேக்கு அதுவும் கடுப்பேற்றியதாக எழுதியிருக்கிறார்கள்.

இந்த கதைக்கு நேரு குட்டி முன்னுரை எழுதியிருக்கிறார். வெளியீடு அரசு தரப்பில் இருந்து வெளியாகியிருக்கிறது. முதல் பதிப்பு 1966 என புத்தகத்தில் எழுதியிருக்கிறது.

இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டுகளின் கதையை ஒரு பக்கத்தில் எழுதி காந்தி பிறந்ததில் இருந்து சுடப்பட்டு இறக்கும் வரைக்கும் எழுதியிருக்கிறார்கள். இது குழந்தைகளுக்கு எழுதிய மாதிரி தெரியவில்லை. பெரியவர்களுக்கு தான் புரியும்.

பக்கங்கள் : 47

ஆசிரியர்கள் : ஸாவந்த், பாதல்கர்

வெளியீடு : பப்ளிகேசன்ஸ் டிவிசன்,
செய்தி – ஒலிபரப்பு அமைச்சகம்.

0 பின்னூட்டங்கள்: