> குருத்து: கனவு வெளிப் பயணம் – கவிஞர் சல்மா

January 18, 2023

கனவு வெளிப் பயணம் – கவிஞர் சல்மா


பத்து நாடுகள் பயணித்ததில்.. முதல் அனுபவமாக பாகிஸ்தான் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் கல்வி, நிர்வாகம், சமூகம் என பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் பகிர்கிறேன்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்து பாகிஸ்தான் அழைத்து சென்று அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்வது தான் பயணத்தின் நோக்கம். இங்குள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும், அங்குள்ள நிறுவனமும் இணைந்து எடுத்த முயற்சி இது.

தமிழகத்தில் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த கவிஞர் சல்மா அந்த 30 பேரில் ஒருவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சென்ற முதல் குழு இது தான். ஆச்சர்யம். தலைநகர் இசுலாமபாத், லாகூர், பெஷாவர் என மொத்தம் 11 நகரங்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகள் மட்டுமில்லாமல்… பொது மக்களும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். மாலைகள், மரியாதைகள், அன்பு பரிமாற்றங்கள். பிரிவினையின் பொழுது அவர்களுடைய சொந்தங்கள் சிலர் இந்தியாவில் இருந்தனர். அப்படிப்பட்ட இந்தியாவில் இருந்து வந்தவர்களை தங்கள் சொந்தங்களாக நினைத்து அன்புடனும், மரியாதையுடன் வரவேற்றுள்ளனர்.

பெட்ரோல் பங்கில் முன்னாள் இராணுவ வீரர் (அரசு அனுமதியுடன் துப்பாக்கியுடன்) காவலுக்கு இருக்கிறார். அவருடன் பேச்சுக்கொடுத்ததில்… முன்பு இந்திய சகோதர்ர்களோடு சண்டையிட்டதை வருத்தத்துடன் பகிர்கிறார். எல்லோருக்கு தேநீர் தருகிறார். அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுக்கிறார். ”இது என்னுடைய பரிசு” என்கிறார்.

அங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33%. சட்டத்தில் இருந்தாலும், அதை களத்தில் சாத்தியப்படுத்துவதற்கான போராட்டத்தில் பெண்கள் இருக்கிறார்கள். கிடைக்கிற வாய்ப்புகளை பிடித்து மேலேறி வருகிறார்கள். அங்கு பெண்களுக்கு மேஜர் வயது 16. ஆண்களுக்கு 18.

20,000 கிறிஸ்தவர்களும் 20 சர்ச்சுகளும் உள்ள முல்தான் மிகவும் புராதனமான அமைதியான நகரம். இதுவரை மதக்கலவரங்களே நடந்ததேயில்லை என பெருமையுடன் சொல்கிறார் அங்கு இருக்கும் எம்.பி.

சல்மா அவர்களுக்கு உருது தெரியவில்லை. ”உருது தெரியாத முசுலீமா?” என ஆச்சரியப்படுகிறார்கள். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானில் பிறந்தவர். அந்த கிராமத்திற்கு போயிருந்த பொழுது, இந்த ஊரில் பிறந்தவர் இந்திய பிரதமர் என பெருமையுடன் அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். பிரதம புகழ்பெற்ற இந்தி நடிகர் இராஜ்குமார் பாகிஸ்தானில் பிறந்தவர் தான்.

பயணம் முடித்து சொந்த ஊர் சேர்ந்ததும், காத்திருந்து உளவு போலீசார் எல்லா விவரங்களையும் விவரமாக கேட்டுக்கொண்டனர். ”இந்த விசாரணை எல்லோருக்குமா?” என்றதற்கு ”ஆமாம்” என்றிருக்கிறார்கள். ஆனால் உடன் வந்தவர்களை விசாரித்தில் அப்படி யாரையும் இது வரை விசாரிக்கவில்லை என பதில் சொல்லியிருக்கிறார்கள். இது இந்திய நிலைமை.

ஆசிரியர் : கவிஞர் சல்மா (2014)
பக்கங்கள் : 249
விலை : 145
வெளியீடு : விகடன் வெளியீடு

0 பின்னூட்டங்கள்: