> குருத்து: தேவமலர் – குறுநாவல்

January 1, 2023

தேவமலர் – குறுநாவல்


ஹாலிவுட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றிரண்டு படங்கள் வரும். சண்டைப்படம், அறிவியல் படம் என விதவிதமாய் விளம்பரப்படுத்தியிருந்தாலும், படம் கொஞ்சம் நகர்ந்ததும் கண்டுபிடித்துவிடலாம். இது பைபிள் புகழ்பாட வந்த படம் என சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு டென்சில் வாஷிங்டன் நடித்த ”Book of Eli” . தமிழில் கூட அப்படி படம் வந்திருக்கிறது அஷ்வின், ஷிவதா நடித்த ”ஜூரோ”.


அப்படி ஒரு கதை தான் இந்த குறுநாவல். ஊரில் ஒரு திருடன். அவனை காட்டுக்குள் விரட்டிவிடுகிறார்கள். காட்டுக்குள் வருபவர்களிடம் வழிமறித்து கிடைத்ததைப் பறித்து வாழ்க்கையை ஓட்டுகிறான். இப்பொழுது யாரும் வராததால், திருடனின் மனைவி ஊருக்குள் தன் பிள்ளைகளோடு வந்து பிச்சை எடுத்து வாழ்கிறாள். திருடனின் குடும்பத்தின் மீது கோபம் இருந்தாலும், திருடன் ஏதாவது செய்துவிடுவான் என பயந்துகொண்டு அவளுக்கு பிச்சைப் போடுகிறார்கள்.

அந்த ஊரில் ஒரு பாதிரியார் காணக்கிடைக்காத மலர் செடிகளை எல்லாம் பார்த்து பார்த்து சேகரித்து ஒரு அருமையான தோட்டம் போட்டிருக்கிறார். அதை தற்செயலாகப் பார்த்த திருடனின் மனைவி பெரிதும் ரசிக்கிறாள். பாதிரியார் அவளிடம் பேச்சுக்கொடுக்கும் பொழுது, ”தோட்டத்தைப் பார்த்து அதிசயிக்கிறாயா?” என பெருமையாய் கேட்கிறார். ”இதென்ன பிரமாதம்! காட்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இதை விட மிகப்பெரியதாய் காடு பூத்துக்குலுங்கும். மணம் வீசும்” என்கிறாள். மற்றவர்கள் நம்ப மறுத்தாலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த பாதிரியார் தன் உதவியாளனுடன் காட்டுக்குள் திருடனின் வீட்டை நோக்கிப் போகிறார். அங்கு அதிசயத்தை அவர் பார்த்தாரா இல்லையா என்பதை மீதிக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை கொஞ்சம் பில்டப்பாக இருந்தது. ரசிய கதைகளுக்கு இணையாக ஐரோப்பிய ஸ்காண்டிநேவிய கதைகள் இருக்கும் எனவும், அதில் கடவுள் நம்பிக்கை இருக்கும் என்கிறார்கள். இந்த கதை எழுதிய ஆசிரியர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

நாத்திகவாதி என்பதால் நமக்கு இந்த கதையின் மீது ஒரு பிடிப்பு வரமாட்டேன் என்கிறது. நாமெல்லாம் "சாத்தானின்" சொந்தக்காரர்கள். 🙂

கதை பைபிள் கதையாக இருந்தாலும்… மொழிபெயர்ப்பு க.நா. சு சிறப்பாக செய்திருந்தார். அவர் எழுதிய ஒரு நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர் : ஸெல்மா லாகர்லெவ் (1848 – 1940)

மொழிபெயர்ப்பு : க.நா. சுப்பிரமணியம் (1912 – 1988)
பக்கங்கள் 33

0 பின்னூட்டங்கள்: