> குருத்து: அவன் காட்டை வென்றான் - நாவல்

January 1, 2023

அவன் காட்டை வென்றான் - நாவல்


"காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது. நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும் தானே!"

****

அன்று அந்த வயதானவருக்கு உடல்நிலை சரியில்லை. தன் பேரனை பன்றிகளுடன் மேய்ச்சலுக்கு அனுப்பி வைக்கிறார். மாலை அவன் வர தாமதமாகிறது. கவலைகொள்கிறார். மேய்ச்சலுக்கு சென்ற பன்றிகளில் ஒன்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. இந்த சமயத்தில் கவனம் இல்லாமல் அனுப்பிவிட்டோமே என வருந்துகிறார்.

அவர் நினைத்தது போலவே பேரன் வந்து கர்ப்பிணி பன்றியை காணவில்லை. அதை தேடி அலைந்தேன் என அழுதுகொண்டே சொல்கிறான். பதட்டமாகிறார். பன்றியைத் தேடி காட்டுக்குள்ளே தன்னந்தனியாய் கிளம்புகிறார். காட்டின் இயல்பு அறிந்தவர் என்பதால், தேடி கண்டுபிடித்துவிடுகிறார். அவர் நினைத்தது போலவே பன்றி குட்டிகளை ஈன்றிருக்கிறது. பிறந்த குட்டிகளுடன் இருப்பதால், இப்பொழுது ஆக்ரோசமாய் இருக்கும். வளர்த்தவரே என்றால் கூட குதறிஎடுத்துவிடும்.

தாமதம் ஆக ஆக காட்டிற்குள் மற்ற மிருகங்கள் குட்டிகளைத் தேடிவரும் என பயப்படுகிறார். இவர் அருகில் போனதும் அவர் எதிர்பார்த்தது போலவே அவரையும் தாக்குகிறது. விலகிவந்துவிடுகிறார். அடுத்து நரி ஒன்று வருகிறது. தாய்ப்பன்றி நரியை கொன்றுவிடுகிறது. அடுத்து நான்கு நரிகள் மோப்பம் பிடித்து வருகிறது.

இப்படி பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அவர் பன்றியுடனும், குட்டிகளுடன் வீடு வந்து சேர்ந்தாரா என்பது மீதிக்கதை.

பேரனுக்கு கெஸ்ட் ரோல் தான். அவனை தவிர்த்துவிட்டு பார்த்தால், நாவலில் ஒற்றைப் பாத்திரம் தான். அந்தப் பாத்திரத்திற்கும் ஆசிரியர் பெயர் தரவில்லை. மற்றவை எல்லாம் காடு, மிருகங்கள் தான். ஒருநாள் இரவு தான் மொத்தக்கதையும். படிக்கும் பொழுது ஹெமிங்வேயின் "கிழவனும் கடலும்" நினைவு வந்து போனது.

காடு எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது என இக்கதையில் வரும் அந்த கிழவன் ஒருமுறை குறிப்பிடுகிறான். காட்டிற்கு மட்டுமல்ல மனித வாழ்க்கைக்கும் அது பொருந்தும் தானே. வாழ்க்கை எவ்வளவு விந்தையானது என்றால், அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது.

ஒரு சிறிய களத்தை எடுத்துக்கொண்டு காட்டையும் மனித வாழ்க்கையின் குறித்தும் இந்த குறுநாவலை எழுதியவர் டாக்டர் கேசவ ரெட்டி. தெலுங்கு மூலத்திலிருந்து அதனை ஏ.ஜி. எத்திராஜுலு தமிழில் மொழிபெயர்ப்பு நாவல் என்ற உணர்வு வராத அளவிற்கு அருமையாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள்.

அருமையான நாவல்.

ஆசிரியர் : கேசவ ரெட்டி (Atadu Dadavani Jayichaadu - தெலுங்கு)
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு
விலை : 105
பக்கங்கள் : 89
வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட்.

0 பின்னூட்டங்கள்: