> குருத்து: பிரணாப்-ன் ஒப்புதல் வாக்குமூலம்!

August 7, 2011

பிரணாப்-ன் ஒப்புதல் வாக்குமூலம்!


முன்குறிப்பு : கடந்த இரு பத்தாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும், மறு காலனியாதிக்க கொள்கைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் என பல துறைகளிலும் மோசமான பாதிப்புகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. அமுல்படுத்தும் பொழுது, புதிய பொருளாதார கொள்கைகளை ஆதரித்தவர்கள் கூட இன்று தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்திருக்கிறார்கள்.

நிதிமந்திரி பிரணாப் இன்னும் விரைவுப்படுத்தி இந்தியாவை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிடப்போவதாக கீழே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு என்று சொல்வது முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. நிகழ்காலமும், வருங்காலமும் இனி போராட்ட காலங்களாக தான் இருந்தால் தான் இந்தியாவை இவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்..

****
நிதி அமைச்சர் பிரணாப்-ன் பேட்டி

சீர்திருத்தங்கள் தொடரும்:
பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் அவ்வளவுதான், இனி தொடராது என்று நீங்கள் (தொழில்துறையினர்) அச்சப்படத் தேவையில்லை. சீர்திருத்தங்கள் தொடரும். சில நேரங்களில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சீர்திருத்தங்களை அமல் செய்யும் நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்படலாம், நடவடிக்கை நின்றுவிட்டது, இனி இருக்காது என்ற முடிவுக்கு வரவேண்டாம்.

ஒத்துழைப்பு:
சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் எல்லா அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்படும் மன நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை இனி திரும்பப் பெற முடியாது என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது இந்த சீர்திருத்தங்கள் கைவிடப்படும் என்று யாரும் அஞ்ச வேண்டாம். இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களையே இன்னமும் நிதித்துறையில் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியைச் சரி செய்ய வேண்டிய முக்கிய கடமையும் அரசுக்கு இருக்கிறது

- தினமணி, 07/08/2011 - நாளிதழிலிருந்து...

0 பின்னூட்டங்கள்: