> குருத்து: வழ. சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய‌ நீதிபதி கர்ணனே மன்னிப்பு கேள்!

July 25, 2014

வழ. சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய‌ நீதிபதி கர்ணனே மன்னிப்பு கேள்!




                                               (வழக்குரைஞர் சங்கரசுப்பு)
 
"மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!"

இன்று மதியம் 1.30 மணியளவில் நீதிமன்ற ஆவின் கேட் அருகே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது!

நேற்று காலையில் மூத்த வழக்குரைஞரும், மக்கள் வழக்குரைஞருமான சங்கரசுப்பு நீதிபதி கர்ணன் முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் பொழுது, "என்னைப் பற்றி விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டுறீங்களோ! இன்றிரவிற்குள் உன்னை புழல் சிறையில் தள்ளி, களி திங்க வைக்கிறேன்" என ஒருமையில் பேசியும், மிரட்டியும் இருக்கிறார்.

இப்படி அடாவடியாக மிரட்டுவதற்கு அடிப்படை என்ன?

வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை ராஜ்யத்தை கடலோர மக்களின் தொடர்போராட்டங்களால் கடந்த சில மாதங்களாக தமிழக அரசும், மத்திய அரசும்  முடக்கிவைத்திருக்கிறது!


தாதுமணல் கொள்ளையை துவக்கத்திலிருந்து, கடலோர மக்களுடன் உடன் நின்று, தமிழகம் தழுவிய அளவில் மக்கள் மத்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ‍ ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களும் என தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. அதேவேளையில் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வைகுண்டராஜன் தரப்புக்கு தலைவலியாக இருந்துவந்திருக்கிறது!


தனது கொள்ளையை தொடர இப்பொழுது வைகுண்டராஜனை நீதிபதி கர்ணனை தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரோ வைகுண்டராஜன் வைத்த வழக்குரைஞரை விட விசுவாசமாய் தொடர்ந்து பேசிவருகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், வேதனையும் அறியாதவராய் அலட்சியமாய் பேசிவருகிறார்.  வழக்கை ஒத்திவைக்கிறேன் என தெரிவித்துவிட்டு, ரகசியமான முறையில் வைகுண்டராஜனுக்கு ஆதரவாய் தீர்ப்பளித்துவிட்டார்.

இதைக் கண்டித்து நீதிமன்ற வளாகங்களில் மனித உரிமை பாதுகாப்பு மையம்

"இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா? 


பொதுமக்களே, வழக்குரைஞர்களே!

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன். 
இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா? 
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த
தாதுமணலை சிந்தாமல் சிதறாமல்
நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கவே!
இப்பொழுது புரிகிறதா? 
எலி ஏன் அம்மணமாய் ஓடியதென்று!
 

கடலோர மக்களின்
உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
கொள்ளையன்  வைகுண்டராஜனுக்கு
துணை போகும் கர்ணனைப் போன்ற
தேசத்துரோக, மக்கள் விரோத நீதிபதியின்
நாட்டாமையை முறியடிப்போம்"

என சுவரொட்டி ஒட்டி அம்பலபடுத்தியதும் தான் நீதிபதி கர்ணனின் கோபத்துக்கு காரணம்!

வழக்கை நடத்தியதும், சுவரொட்டி ஒட்டியதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம். அவர்களை தொட்டால், இன்னும் நாலைந்து சுவரொட்டிகள் நமக்கு எதிராக விழும் என அறிந்து, மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவாகவும், மிரட்டியும் பேசியுள்ளார்.

தன்மானமுள்ள வழக்குரைஞர்கள் நீதிபதி கர்ணனின் பேச்சை கண்டிக்கவேண்டும்! இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்!

போராட்டம் வெற்றியடைய நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்! 

  

0 பின்னூட்டங்கள்: