> குருத்து: கேள்விகளால் ஆன இரவு

April 14, 2022

கேள்விகளால் ஆன இரவு


 'பேராசை இல்லாத விறகுவெட்டி' கதை சொல்லி

தூங்கவைக்க முயற்சித்தேன் என் மகளை.
எங்கிருந்துதான் வருமோ
இத்தனை கேள்விகள்!
அவர் ஏன் மரத்தை வெட்றாரு?
வெட்டினா வலிக்காதா?
'கோடாலி'னா என்னப்பா?
'ஆறு'னா சிக்ஸ் தானே?
'தங்கம்'னா நான் தானே?
நான் எப்படி கோடாலி ஆவேன்?
கோடாலி ரொம்ப வெயிட்டா இருக்கும்லனு
சொன்னேல்லே,
அப்படின்னா மூணு கோடாலியைத்
தூக்கி அவரு எப்படி வெட்டுவாரு?
எனக்கு ஒரு கோடாலி வாங்கித் தர்றாயா?
நாளைக்கு வாங்கித் தாரேன் மீனாட்சி...
நாளைக்கு எப்பப்பா வரும்?
நீ இன்னைக்குத் தூங்கி எழுந்து பாரேன்,
நாளைக்கு வந்திருக்கும்.
சரிப்பா... குட் நைட் பா.
ஐந்து விநாடிகள் இடைவெளியில்...
அப்பா, நான் தூங்கி எந்திரிக்கிறப்பெல்லாம்,
'இன்னைக்கு' ஏன்ப்பா 'நாளைக்கு' ஆகிருது?

- மூர்த்தி

0 பின்னூட்டங்கள்: