> குருத்து: அப்பாவின் நினைவாக!

August 19, 2008

அப்பாவின் நினைவாக!



அப்பாவின் நினைவாக

ஏட்டுக்குரிய தொந்தியுடனும்
ஏட்டுக்குரிய அசமந்தத்துடனும்
தோற்றம் கொண்டவர்.

அப்பா – அன்பான அப்பா
பிள்ளைகளை ஒருநாளும்
அடித்தவரில்லை.
வீட்டுல ஒரு (அம்மா) ஆள்
அடிச்சா போதும்! என்பார்.

அப்பா கைப்பிடித்து
நடக்கும் வேளைகளில்
நான் கேட்கும்
ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு
சளைக்காமல் பதில் சொல்வார்.

அம்மா படிக்காதவர்.
கைநாட்டாய்
இருக்கக்கூடாது என
கையெழுத்துப் போட – அம்மாவுக்கு
சொல்லிகொடுத்தவர்.
இப்பொழுதும் - மணியார்டரில்
அம்மா கையெழுத்தை
பார்க்கும் பொழுது
அப்பா நினைவுக்கு வருகிறார்.

அப்பா – கும்பகர்ணனுக்கு
தூரத்துச் சொந்தம்
ஆறு மாதம்
மிக சாதுவான மனிதராய்
உலாவருவார்.
வார்த்தைகளை எண்ணி
பேசுவார்.
மறு ஆறுமாதம்
அவரே - வலிந்து
பேசுவார், பாடுவார்

அப்பா - பாதி நாத்திகர்
கையெடுத்து சாமி
கும்பிட்டவரில்லை
அம்மாவின் வற்புறுத்தலால்
தன் வாழ்வின் இறுதிவரை
இடுப்பில் தாயத்தோடு திரிந்தவர்

அப்பா ஊர்சுற்றி
கட்டிய வேட்டி, சட்டை
ஒரு துண்டோடு
இரண்டு வருடத்திற்கொருமுறை
இரண்டுமாதம்
காணாமல் போய்விடுவார்

கடும் தலைவலி என சொல்லி
கோமாவில் விழுந்தார்
நினைவு திரும்பாமலே
உயிர் துறந்தார்.
மோசமான சிகிச்சையால்
தன் நோயிலிருந்து
விரைவில் விடுபட
அரசு மருத்துவமனை
அவருக்கு உதவி செய்தது.

நிறைய வருடங்கள்
உயிரோடு இருப்பார் என்ற
நம்பிக்கையில்
அப்பாவுடன் சண்டைகள் போட்டே
நாட்களை கடத்திவிட்டேன்.

இன்று
அப்பாவின் நினைவுநாள்
20.08.1999

3 பின்னூட்டங்கள்:

பாபு said...

அம்மாவை வாழும்போது புரிந்து கொள்ளும் அளவிற்கு நாம் அப்பாவை புரிந்து கொள்வதில்லையோ?

குருத்து said...

யோசித்துப் பார்க்கும்பொழுது, நீங்கள் சொல்வது உண்மைதான்.

தங்கள் வருகைக்கு நன்றி பாபு.

Anonymous said...

நிறைய வருடங்கள்
உயிரோடு இருப்பார் என்ற
நம்பிக்கையில்
அப்பாவுடன் சண்டைகள் போட்டே
நாட்களை கடத்திவிட்டேன்

Touching versus