> குருத்து: வாசிப்பை நேசிப்போம் : பரிசாக மெடலும்! புத்தகமும்!

March 7, 2022

வாசிப்பை நேசிப்போம் : பரிசாக மெடலும்! புத்தகமும்!



”வாசிப்பை நேசிப்போம்” என ஒரு குழு முகநூலில் இயங்குகிறது. அந்த குழுவில் 55000 –மக்களுக்கும் அதிகமாக இருக்கிறார்கள் என்பது சிறப்பு.. குழுவில் எல்லா வயதிலும், எல்லா துறைகளிலும் இருக்ககூடிய ஆட்களும் இருக்கிறார்கள். தேர்ந்த ஆட்களும் உண்டு. இப்பொழுது தான் எழுத துவங்கியவர்களும் உண்டு.


அதில் நானும் ஒருவனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணிக்கிறேன். குழுவில் உள்ளவர்களை உற்சாகப்படுத்த நிறைய போட்டிகள் நடத்துகிறார்கள். எல்லா போட்டிகளிலும் உற்சாகமாக பங்கெடுப்பவர்களும் இருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு குறைந்தது 25 புத்தகமாக படிக்கவேண்டும் என மாரத்தான் போட்டியும் உண்டு. படித்த புத்தகங்கள் குறித்து குழுவில் அறிமுகப்படுத்தியும் எழுதவேண்டும்.

அப்படி கடந்த ஆண்டு ஜனவரி துவக்கத்தில் குறைந்தப்பட்சமாக 25 புத்தகங்கள் படிக்கிறேன் என ஒப்புக்கொண்டு கலந்துகொண்டுவிட்டேன். ஜனவரியில் ஒரு புத்தகம். பிப்ரவரியில் ஒரு புத்தகம் என இரண்டோடு நிறுத்திவிட்டேன். ஆறு மாதம் எங்கெங்கோ திசை மாறி போய்விட்டேன். திரும்பவும் அக்டோபர் போல குழுவில் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது. கனவில் குழு நிர்வாகிகள் “படிப்பதை விட்டுவிட்டாயா?” என மிரட்டி தொந்தரவு செய்தார்கள்.

இன்னும் மூன்று மாதத்தில் இன்னும் 23 புத்தகங்கள் சாத்தியமா? என கேள்வி வந்தது. இறுதிநாள் வரை மல்லுக்கட்டி படிப்போம் என முடிவு செய்தேன்.. 50 பக்கங்கள் கொண்ட புத்தகத்திலிருந்து 450 பக்கங்கள் கொண்ட புத்தகம் வரை படித்தது ஆச்சர்யம். டிசம்பர் 31ல் கடைசிப் புத்தகத்தை படித்து, எழுதி முடித்து பதிந்த பொழுது, உண்மையில் ஒரு மாராத்தானில் ஓடிய அனுபவமாய் தான் இருந்தது.

இப்படி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, இலக்கை எட்டியவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று புத்தக திருவிழா பந்தலில் நடத்தினார்கள். சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டது ஆச்சர்யம். பகல் 12 மணியளவில் சென்ற பொழுது பலர் வந்திருந்தார்கள். பரிசுகளை கொடுக்க துவங்கியிருந்தார்கள்.

குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களுடன் பெரிய உற்சாகத்துடன் வந்திருந்தார்கள். பல பெரியவர்கள் குழந்தைகளுக்கான உற்சாகத்துடன் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். தங்கள் அனுபவங்களை சுருங்க சொன்னார்கள். பரிசுகளை பெற்றுக்கொண்டார்கள். எனக்கு ஒரு மெடலும், ஒரு புத்தகமும் பரிசாக தந்தார்கள். கூச்ச சுபாவம் என்பதால், நான் ஏதும் பேசவில்லை.

இத்தனை ஆயிரம் மக்கள், பல்வேறு ரசனை கொண்டவர்களை, பல சித்தாந்த பின்னணி கொண்டவர்கள் கொண்ட குழுவை முகநூலில் இயக்குவது பெரிய சவால். தினமும் எழுதப்படும் பதிவுகளைப் படித்து, அனுமதித்து, போட்டிகளை நடத்தி, அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து, இலக்குகளை அடைந்தவர்களுக்கும் பரிசளித்து, நிர்வாகிகளின் உழைப்பு பெரியது என்கிற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது! அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும், இலக்கை அடைந்தவர்களுக்கும், எழுதிய பதிவுகளை எல்லாம் படித்து, பின்னூட்டங்களில் உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோ இரண்டு மாதம் கடந்துவிட்டன. ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்து பதிந்திருக்கிறேன். மார்ச்சிலிருந்து மாராத்தான் ஓட்டத்தை ஓடவேண்டும். சுவற்றில் தொங்கும் இந்த மெடல் இனி நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும்.

0 பின்னூட்டங்கள்: