> குருத்து: விலங்கு (2022) ஒரு நல்ல திரில்லர் வெப் சீரிஸ்

March 27, 2022

விலங்கு (2022) ஒரு நல்ல திரில்லர் வெப் சீரிஸ்



திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமம். நாயகன் எஸ்.ஐயாக இருக்கிறார். காட்டின் ஒரு பகுதியில் ஒரு உடம்பும், தலையும் தனித்தனியாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. படையோடு போகிறார்கள். மோசமான நிலையில் இருக்கிறது. ஆகையால், ஆள் யார் என கண்டுபிடிக்க முடியாது திணறுகிறார்கள். கொஞ்சம் அசமந்தமாக இருக்கும் பொழுது, தலை காணாமல் போகிறது. பதட்டமாகிறார்கள். காணாமல் போனது தெரிந்தால், வேலைக்கு ஆபத்து என்பதால், உயரதிகாரியிடம் சில நாட்கள் கெஞ்சி கூத்தாடி வாங்குகிறார்.


இந்த கொலையை துப்பறியும் பொழுது, இன்னொரு கொலையை கண்டுபிடிக்கிறார்கள். காணாமல் போனவர்களை எல்லாம் பட்டியல் எடுக்கிறார்கள். மெல்ல மெல்ல நூல்பிடித்து கொலையாளி யார் என தெரிய வரும் பொழுது அனைவருமே அதிர்ந்து போகிறார்கள்.

கொலையாளியை கண்டுபிடித்தாலும், ஆதாரம் இல்லாமல் தண்டனையை வாங்கித்தர முடியாது என்பதால், ஆதாரங்களை தேடுவது சவாலாக இருக்கிறது. அதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.

***

திரைப்படத்தை விட வெப் சீரிஸில் கொஞ்சம் நேரம் அதிகமாக கிடைக்கிறது என்பதால், படத்தில் நிறைய விசயங்களை சொல்ல முடிவது நல்ல விசயம். தலை காணாமல் போவதால், அதை மறைப்பதற்கு எஸ்.ஐயாக இருக்கும் நாயகனே துறை சார்ந்த அனைவருக்கும் லஞ்சம் தருகிறார். பின்னால் எல்லோருமே தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

தன் வீட்டில் நகைகள் காணாமல் போய் ஒருவர் புகார் தருகிறார்., அந்த நகைகள் கிடைக்காமல், வேறு நகைகள் கிடைக்கும் பொழுது, தன் பொண்ணுக்கு கல்யாணம் வைத்திருப்பதால், உதவ சொல்லி கேட்கிறார். ஆகையால், மனிதாபிமான அடிப்படையில் அதற்காக மாற்றுகிறார்கள்.

அதே போல, ஒரு வழக்கில் சந்தேகப்படுபவர்களை எல்லாம் அழைத்து வைத்து அடித்து துவைத்துவிடுகிறார்கள். கொடூரமாக இருக்கிறது. விசாரணையை ”நேர்வழியில்” போகும் பொழுது பார்வையாளர்களுக்கு இப்படி அடிப்பது உறுத்துமே தவிர, “தப்பாக” தெரியாது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் நேர்வழியில் செல்வதில்லை. செல்வாக்கு கொண்டவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக போலீசு அப்பாவிகளை பலி கொடுக்கிறார்கள். அப்படித்தான் ஜெய்பீம் சம்பவமும், சாத்தான்குளம் என நிறைய போலீசு ஸ்டேசன் கொலைகளும் நடந்துகொண்டே இருக்கின்றன. கைது செய்கிற போலீசே நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் இருப்பதால், அடித்து, துவைத்து ”நிரூபிக்க” துடிக்கிறார்கள். அடிப்பதை எந்த நிலையிலும் நியாயப்படுத்தவே கூடாது.

வெப் சீரிசுக்கு சென்சார் இல்லை என நன்றாகவே தெரிகிறது. ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள். இப்படியே போனால், சென்சாரை கொண்டுவந்துவிடுவார்கள். மதுரை வட்டார பேச்சில் பேசுகிறார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் என வைத்தார்கள் என தெரியவில்லை. முழுவதும் சீரியசாக கொண்டு செல்லாமல், கொஞ்சம் இயல்பாக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.

மற்றபடி, நாயகனாக விமல், (பெயரியல் ஜோதிடர் சொல்லியிருப்பார் போல! Vemal என எழுத்துப்போடுகிறார்கள்.) இதுவரை காமெடியில் வந்த பாலசரவணனுக்கு இந்தப் படத்தில் சீரியசான பாத்திரம். அதையும் நன்றாக செய்திருக்கிறார். முனீஸ்காந்த், இனியா என பலரும் வருகிறார்கள். எல்லா கதாப்பாத்திரங்களுமே அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்கள். சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் நிற்பது ஆச்சர்யம். ’ப்ரூஸ்லீ’ என படம் எடுத்து தோல்வியடைந்து, நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

நல்ல திரில்லர் வெப் சீரிஸ். Zee 5ல் இருக்கிறது. ஒரு சீரிஸ். 7 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் அரை மணி நேரம் ஓடுகிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: