> குருத்து: வீட்ல விசேஷங்க (1994)

April 1, 2022

வீட்ல விசேஷங்க (1994)


கடற்கரையில் மயங்கி கிடக்கிறாள் இளம்பெண்ணான நாயகி. அவளை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார் நாயகன். ஒருவழியாக நினைவு திரும்பும் பொழுது, அவளுக்கு தன்னைப் பற்றிய பழைய நினைவுகள் சுத்தமாக மறந்துபோயிருக்கின்றன. பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள். யாரும் வரவில்லை.
 
நாயகன் தன் துணைவியாரை இழந்து, கைக்குழந்தையுடன் இருக்கிறார். அந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நாயகன் தனக்கு செய்த பெரிய உதவியை மனதில் வைத்து, நாயகியிடம் இவர் தான் உன் கணவர் என கொண்டு போய் நிற்க வைக்கிறார்.
 
அந்த பெண்ணும் அவருடன் வீட்டுக்கு போகிறார். அந்த பெண் மெல்ல மெல்ல நாயகனுடன், அவன் குழந்தையுடன் பழகுகிறார். சில பல கலாட்டாக்களுக்கு பிறகு, அவளின் கணவன் இல்லை என தெரிந்த பிறகு, நாயகனையே திருமணம் செய்ய முடிவெடுக்கும் பொழுது, நாயகியை உயிருக்கு உயிராய் காதலித்த காதலன் வந்து முன்வந்து நிற்கிறார். பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
 
****
 
படம் வந்து வெற்றி பெற்று, அனில்கபூர், ஸ்ரீதேவி, நாகர்ஜூன் நடிக்க இந்தியிலும் பாக்யராஜே எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது. கன்னடத்திலும் எடுத்திருக்கிறார்கள்.
 
என்னைப் பொறுத்தவரையில் பாக்யராஜ் படங்களில் இது ஒரு சுமாரான படம் .தான். நடைமுறைக்கு இல்லாத கொஞ்சம் கற்பனையான கதை தான். காசு இல்லாமல் தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பார்களா? அந்த மருத்துவமனை பார்க்கிறது. எதையும் சட்ட ரீதியாக செய்யாமல், தன் மனப்போக்குக்கு செய்கிற தலைமை மருத்துவர். இதுவும் சாத்தியமில்லாத கற்பனை மருத்துவர். நாயகனின் அம்மா, அப்பா இருந்தால் அவர்களின் வழியே உண்மை வந்துவிடும் என்பதால், அனாதை என்று சொல்லிவிடுகிறார். அக்கம் பக்கத்து வீட்டார்கள் இருந்தால் அவர்களின் வழியே உண்மை வந்துவிடும் என்பதால், தனியே வீடு பார்த்து, வைத்துவிட்டார்.
 
நாயகனுக்கும், நாயகிக்கும் நெருக்கம் உண்டாவதற்கான காட்சிகள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் சேர்ந்தே ஆகவேண்டும் என்கிற உணர்வு பார்வையாளனுக்கு வரவேண்டும். அந்த பகுதி கொஞ்சம் பலவீனம் தான்.
பிறகு கேரள சேச்சிகளை இப்படி மோசமாக காட்டியதற்கு கண்டிப்பாக கண்டனம் தெரிவிக்கவேண்டும். இந்தியில் இதை மாற்றியிருக்கிறார்கள். கன்னடத்தில் சேச்சிகளாகவே காண்பித்திருக்கிறார்கள்.
 
கதை குன்னூரில் நடக்கிறது. இவர் கடற்கரையிலிருந்து 9 கிமீ தூரம் தூக்கி வந்து அந்த மருத்துவமனையில் சேர்த்ததாக வசனத்தில் சொல்வார்கள். குன்னூரில் இருந்து குறைந்தது 100 கிமீக்கு பக்கத்தில் கடற்கரையே இல்லை. மலையிலிருந்து குதித்தால் செத்துப்போய்விடுவார்கள் அல்லது போலீசு தான் தூக்கும் என்பதால் இப்படி யோசித்து இருக்கிறார்கள்.
 
இந்த குறைகளை எல்லாம், பாக்யராஜ் தனது திரைக்கதையாலும், நகைச்சுவையாலும் மறைத்து இருப்பது தான் அவருடைய திறமை. அவருடைய திரைப்படத்தில் வழக்கமாய் வருகிற ஆட்களோடு, ஜனகராஜ், நாயகி பிரகதி என பலரும் வருகிறார்கள். இளையராஜா இசைத்திருக்கிறார். அதனால் சில நல்ல பாடல்களும் உண்டு.
 
யூடியூப்பில் இலவசமாக பார்க்க கிடைக்கிறது. நகைச்சுவை விரும்பிகள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: