> குருத்து: 19 (1) (A) (2022) மலையாளம்

November 18, 2022

19 (1) (A) (2022) மலையாளம்



பேச, எழுத, கருத்துக்களை பகிர சுதந்திரம் வேண்டும்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா. அங்கு நாயகி அப்பாவுடன் வாழ்கிறார். சின்ன ஜெராக்ஸ் கடையை நடத்தி வருகிறார். முற்போக்கு எழுத்தாளர் ஒருவர் வந்து தான் எழுதியதை பிரதி எடுத்து வையுங்கள். மாலை வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். அன்றிரவு அவர் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்.

தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்ததும், வருத்தப்படுகிறார். கொலை செய்தது யார் என விசாரணை நடைபெறுவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள். பிறகு அந்த கையெழுத்து பிரதியை அந்த எழுத்தாளருடைய புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் ஒரு பதிப்ப உரிமையாளரை சந்திக்க செல்கிறார். அங்கு போலீசு விசாரிக்க வருவதால் பின்வாங்குகிறார்.

அந்த கையெழுத்து பிரதியில் என்ன பிரச்சனையை எழுதியிருந்தார்? அவர் பத்திரமாக அதை சேர்த்தாரா? என்பதை ஆற, அமர சொல்லியிருக்கிறார்கள். இடையிடையே எழுத்தாளர் குறித்த சில நிகழ்வுகள் வந்து போகின்றன.

ஒரு சிறுகதை அளவு தான் கதை. இப்படியும் சொல்லலாம். குறும்படம் அளவிற்கு தான் கதை. அதை விரித்து சொல்லாமல் அப்படியே முழு நீளப்படமாக்கினால் என்னவெல்லாம் நிகழும்? ஆமை போல மெல்ல நகரும். நகர்கிறது. எந்த கதாப்பாத்திரத்தையும் விரிவாக சொல்லாது. சொல்லவில்லை. பெரிய திருப்பமோ, அதிர்வுகளோ இருக்காது. இல்லை. ஆக மொத்தத்தில் படம் சுமாராகிவிட்டது.

மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் மகா சுவேதா தேவி எழுதிய ”1084ன் அம்மா” என நாவல். ஒரு மேல் தட்டு குடும்பம். அதன் வாரிசுகளில் ஒரு இளைஞர் நக்சலைட்டு இயக்கத்தில் செயல்படுவான். ஆளும் அரசு நக்சலைட்டு இயக்கத்தை ஒடுக்கியதில், வங்கத்தின் தெருக்களில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பல நூறு இளைஞர்களில் அவனும் ஒருவன். அம்மா பிள்ளை அவன். அவன் இறப்பு செய்தி தெரிந்ததும்... மொத்த குடும்பமும் தன் குடும்பத்தின் பெயர் செய்திகளில் வரக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள். அந்த அம்மா மட்டும் துக்கத்துடன் தன் மகன் பழகிய மனிதர்களை தேடிப்போவார். அதன் வழியாக தன் மகனையும், அவன் கொண்டிருந்த லட்சியத்தையும், சமூகத்தையும் புரிந்துகொள்வார். கோவிந்த் நிகாலனி இயக்கிய அருமையான படம். யூடியூப்பில் கிடைக்கிறது.

கர்நாடகத்தில் கெளரி லங்கேஷ் என பெண் பத்திரிக்கையாளர் இருந்தார். 2000 ஆம் ஆண்டுவரை ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பத்திரிக்கையாளராக தில்லியில் பிரபல ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கவிஞரும், எழுத்தாளருமான அவருடைய அப்பா ‘லங்கேஷ்’ என்ற முற்போக்கு பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தார். அவருடைய இறப்புக்கு பிறகு பத்திரிக்கையை நடத்துவதா வேண்டாமா என பரிசிலீத்த பொழுது பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த உற்சாகத்தால் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். கன்னடம் விரைவாக கற்றார். அவரே கன்னடத்தில் எழுதவும் துவங்குகிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் ஏழைகளின் சாவுக்கே வழிவகுத்தது. மோடியின் ஆட்சி துக்ளக் தர்பார் என சாடினார். பாபாபுடன் கிரி என்ற இடத்தை மீண்டும் ஒரு அயோத்தியாக மாற்ற முயன்ற காவி கும்பலை களத்தில் நின்று எதிர்த்தார்.

இன்னொரு குஜராத்தாக கர்நாடகத்தை மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் குவிந்து வேலை செய்த பொழுது ஜனநாயக சக்திகளோடு அறிவுத் தளத்தில் மட்டுமல்ல களத்திலும் உறுதியாக நின்றார். “தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் உண்மையை எழுதுகிறேன் அது என்னுடைய கடமை” என்றார் அருந்ததிராய். கௌரி அவர்களும் பத்திரிக்கையில் உண்மையை எழுதியதற்காக தொடர்ந்து பல வழக்குகளை எதிர்கொண்டார்.

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார். இந்துத்துவ பயங்கரவாத கும்பல் மிரட்டிப் பார்த்தார்கள். கௌரி லங்கேஷ் பணியவில்லை. இந்து சனாதனத்தை கருத்து தளத்தில் நின்று சண்டை செய்ய முடியாத கோழைகள், தங்களது ஸ்லீப்பர் செல்களை வைத்து 2017ல் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். கெளரி நடிகர் பிரகாஷ் ராஜின் குடும்ப நண்பர். இந்த அநீதியான கொலைக்கு பிறகு தான், பா.ஜனதாவிற்கு எதிராக மிக வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்.

இந்தப் படத்தில் அந்த எழுத்தாளரின் பெயர் கெளரி சங்கர். படத்திலும் சுடப்பட்டு இறக்கிறார். ஆகையால் அந்த கதையை தொட்டு எழுதியிருப்பார்கள் என ஆர்வமாய் தேடிப்பிடித்து பார்த்தேன். இயக்குநர் இந்து ஏமாற்றிவிட்டார். ஒரு சமூக அக்கறை கொண்ட நல்ல படத்தை அடுத்து அவரிடமிருந்து எதிர்பார்ப்போம்.

மற்றபடி நித்யா, விஜய் சேதுபதிக்கு இது இரண்டாம் மலையாள படம். இருவரும் கொடுத்தப் பாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்கள்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இருக்கிறது.

0 பின்னூட்டங்கள்: