> குருத்து: நேரம் தவறாமை

November 21, 2022

நேரம் தவறாமை


நாம் ஒரு கூட்டத்தை பத்து மணிக்கு திட்டமிட்டால்... கூட்டத்தை ஏற்பாடு செய்கிற ஆட்கள் மட்டும் வந்து காத்திருப்பார்கள். மக்கள் ஆற அமர வர ஆரம்பிப்பார்கள். இது பொது நிகழ்ச்சி என்றால் கூட ஏதும் பிரச்சனையில்லை. பிறகு வருகிறவர்கள் வரட்டும் என கூட்டத்தை துவங்கிவிடலாம்.


ஒரு குறிப்பிட்ட விசயம் குறித்து ஐவரோ, பத்து பேரோ கூடி விவாதித்து ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் வந்து சேர வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த நேரத்திற்காக வர போராடி... ஏதும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு, தாமதமானால் முறையாக தெரிவித்துவிடலாம். ஆனால், பத்து நிமிடம், 15 நிமிடம் தாமதமாக செல்வது என்பது பெரும்பாலோரிடம் வழமையான பண்பாக இருக்கிறது. இது தவறு தானே!

அந்த கூட்டத்தின் நேரத்தை நாம் எல்லோரிடமும் பேசித்தான் செயலரோ/தலைவரோ தீர்மானித்து இருப்பார். நாம் ஏற்றுக்கொண்ட நேரம். அந்த நேரத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக போய் இருந்து. குறிப்பிட்ட நேரத்திற்கு கூட்டத்தை துவங்க ஒத்துழைப்போம் என்ற பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறது.

சமீபத்தில், நடிகர் நாசர் தன் அனுபவம் ஒன்றை பகிர்ந்தார். நாசர் நடிக்க துவங்கிய காலத்தில் இயக்குநர் பாலச்சந்தர் படத்தில் நடித்துக்கொண்டிந்த சமயம். ஒருநாள் தாமதமாகி அடிச்சு பிடிச்சு அரைமணி நேரம் தாமதமாக போய் சேர்ந்திருக்கிறார். ”ஒரு அரை மணி நேரம் தாமதமாக வந்துவிட்டேன். மன்னியுங்கள்” என்றாராம். ”உன் அரைமணி நேர தாமதம் மட்டும் தான் நீ கணக்கு பண்ணுவியா! இந்த யூனிட்டில் 30 பேர் இருக்கிறோம். எல்லோருடைய அரை மணி நேரமும் வீணாய் போயிருக்கிறதே! அது உனக்கு கண்ணில்படவில்லையா?!” என சொல்லியிருக்கிறார். அதற்கு பிறகு எந்த படப்பிடிப்பிற்கும் தாமதமாக செல்வதில்லை என நாசர் தெரிவித்தார்.

இந்த கண்ணோட்டம் நம்மில் பலருக்கும் இருக்காது. அவரவர் தாமதத்தை மட்டுமே கணக்கிடுவார்கள். மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்குகிறோம் என்ற உணர்வு பெரும்பாலோருக்கு குறைவு தான்!

#நேரம்
#நேரம்தவறாமை

0 பின்னூட்டங்கள்: