> குருத்து: சினம் (2022)

November 13, 2022

சினம் (2022)


நாயகன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். ஒரு பெண்ணை காதலித்து திருமணமாகி ஐந்து வயது பெண் குழந்தையுடன் சந்தோசமாய் வாழ்கிறார். சென்னையை ஒட்டிய செங்குன்றத்தில் உதவி ஆய்வாளராக இருக்கிறார். மேல் அதிகாரியான ஆய்வாளர் லஞ்ச பேர்வழியாக இருப்பதால், இருவருக்கும் வேலைகளில் முட்டிக்கொள்கிறார்கள்.


நாயகனின் கொழுந்தியாவின் நிச்சயத்திற்கு அழைக்கிறார்கள். நாயகனுக்குள்ள வேலை நெருக்கடியில், மனைவி குழந்தையை மட்டும் வெளியூருக்கு அனுப்பிவைக்கிறார். அங்கு குழந்தையை விட்டுவிட்டு, தனியாக சென்னை வந்து சேர்கிறார். இவர் செங்குன்றத்தில் காத்திருக்க... கோயம்பேட்டிலிருந்து வரவேண்டிய மனைவியை காணவில்லை. செங்குன்றத்தில் ஆண், பெண் என இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. போய் பார்த்தால், நாயகனின் மனைவி கொடூரமாக சிதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். அருகிலேயே ஒரு இந்திகார இளைஞனின் உடலும் இருக்கிறது.

ஆய்வாளர் நாயகனின் மேல் உள்ள கடுப்பில் எக்குத் தப்பாக கேள்விகள் கேட்க, நாயகன் அவரின் கையை உடைத்துவிடுகிறார். மேலும் ஊடகங்களுக்கு ”கள்ளக்காதல்” எனவும் பேட்டியளிக்கிறார். கையை உடைத்தற்காக தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

மீண்டும் பணியில் சேர்ந்து, தன் மனைவியை இப்படி சிதைத்தவர்கள் யார் என கண்டுபிடிப்பது தான் மீதி முழு நீளக்கதை.
***

பேருந்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த ஒரு நபரை நாயகன் கடுமையாக அடிப்பார். ”ஏன் சார் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என கேட்பார் தலைமை காவலர். ”பெண்கள் விசயத்தில் இப்படி மோசமாக நடந்துகொள்பவர்கள் மீது எல்லோரும் இப்படித்தான் கோபப்படவேண்டும். அதை சகித்துக்கொண்டு போகக்கூடாது என்பது படம் சொல்லும் செய்தி. சரியான கருத்து தான். வரவேற்போம்.

சமூகத்தில் இருந்து, ஒரு குடும்பத்தில் இருந்து தான் பாலியல் வெறியுடன் நடந்துகொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டும் போதுமா? பிரச்சனை முடிந்துவிடுமா என கேள்வி வருகிறது.

இன்றைக்கும் ஆண்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் விளம்பரம் எடுக்கிறார்கள். திரைப்படங்களில் இன்னும் பெண்களை சதைப் பிண்டங்களாக தானே காண்பிக்கப்படுகிறார்கள். இன்னும் நிலைமை சரியாகவில்லையே.

90 களில் எங்கோ ஒரு மூலையில் மோசமான திரையரங்கில் போர்னே படங்கள் வெளியாகும். இப்பொழுது இணையத்தில் போர்னே படங்களும், காணொளிகளும் கொட்டி கிடக்கின்றன. போதை மருந்து தாராளமாக கிடைக்கிறது. தெருவிற்கு நான்கு சாராய கடைகள். இப்படி பல அம்சங்கள் பாலியல் வெறியை தூண்டிவிடுகின்றன. அவர்களை எல்லாம் எப்படி தண்டிப்பது? இதையெல்லாம் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் அரசுக்கு என்ன தண்டனை? கடிக்கும் கொசுக்களை கொன்றுவிடலாம். கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடையை சுத்தப்படுத்துவது எப்பொழுது?

மற்றபடி, இந்த கொலையையும் வட சென்னை கணக்கில் எழுதுவதை எப்படிப் பார்ப்பது? சென்னையின் வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட கொலைகள் நடப்பதில்லையா? நமது இயக்குநர்கள் சங்கத்தில் அப்படி ஏதும் தீர்மானம் போட்டிருக்கிறார்களா என்ன? வன்மையான கண்டனங்கள்.

படத்தில் இன்னொரு விசயம். தன் மனைவி பற்றி ஊடகத்தில் கொடுக்கும் பேட்டி பற்றியது. ஒரு சம்பவம், கொலை, கலவரம் நடந்துவிட்டால், போலீசுகாரர்கள் அவர்கள் சொந்த, ஆள்பவர்களின், அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பப்படி தான் திரைக்கதை எழுதுகிறார்கள். அதை விசாரித்து எழுதவேண்டிய பொறுப்பு கொண்ட ஊடககாரர்களில் பெரும்பாலோர் அப்படியே தான் வாந்தி எடுக்கிறார்கள். நாயகனின் சொந்த வழக்கு என்பதால், மேலதிகாரியின் கையை உடைத்துவிடுகிறார். மக்கள் அப்படி உடைக்க முடியுமா? என்ற கேள்வியும் வருகிறது.

மற்றபடி, படம் நன்றாக இருக்கிறது. விசாரணையை இயல்பாக எடுத்திருக்கிறார்கள். அருண் விஜய், காளிவெங்கட், பலக் லால்வாணி (Palak Lalwani) என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் குமாரவேலன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கியிருக்கிறார்.

நெட் பிளிக்சில் இருக்கிறது. பாருங்கள்.

***

முகநூலில் நான் எழுதிய பார்வைக்கு, படம் குறித்து ஒருவர் எழுதிய பின்னூட்டம் இது.

நான் எவ்வளவு மிருதுவாக எழுதியிருக்கிறேன் என ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். 😊

இந்த படத்தில் லாஜிக் என்றால் கிலோ எவ்வளவு என்பார்கள் போல...
கேங் ரேப் செய்யப்பட்ட பெண்ணோட உடல் பார்த்தவுடன் தெரிந்து விடும்...
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எல்லாம் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது
சொந்தகதை சோகக் கதையைச் சொல்லிவிட்டு மெயின் கதைக்கு இண்டர்வெலுக்கு அப்புறம் தான் வருகிறார்கள் படம் 1Hour ;55 minutes தான் சின்னப்படம் Investigation. னிலும் புதுசா எதுவும் இல்லை டோட்டலா கருத்துச் சொல்ல அரசு எடுத்த விளம்பரப்படம் போல இருக்கு ...ட்விஸ்ட் அன் டேர்ன்ஸ் இந்த மாதிரி படங்களுக்கு அவசியம் அப்படியில்லாமல் எதிர்பார்த்த மாதிரியே போய் முடிகிறது க்ளைமேக்ஸ் க்கு நான் மகான் அல்ல படத்தை தூக்கிப் போட்டு முடிச்சிட்டார் வேண்டா வெறுப்பா புள்ளயப்பெத்து காண்டா மிருகம்னு பேர் வைச்சது மாதிரி இருக்கு...

0 பின்னூட்டங்கள்: