> குருத்து: Rorschach (2022) மலையாளம்

November 15, 2022

Rorschach (2022) மலையாளம்


Neo-noir psychological supernatural action


மலையாளியான நாயகன் துபாயில் இருந்து கேரளா வருகிறார். போலீசு ஸ்டேசனில் புகார் தருகிறார். தானும் தன் கர்ப்பிணி மனைவியும் காட்டை கடந்து காரில் வந்ததாகவும், ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், இவர் கொஞ்சம் மயங்கிவிட, தன் மனைவியை காணவில்லை என புகார் தருகிறார். போலீசும் மக்களும் தேடுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை.

திரும்பவும் ஊருக்கு கிளம்பாமல், அந்த ஊரிலேயே தங்கி தேட ஆரம்பிக்கிறார். காட்டிற்குள் ஒரு வீட்டை விலைக்கு வாங்குகிறார். இவரிடம் விற்றுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். பணமும் காணாமல் போகிறது.

உள்ளூரில் முந்திரி பருப்பு பேக் செய்து விற்கும் சின்ன தொழிற்சாலை சிக்கலாகிறது. பணம் கொடுத்து பங்குதாரராகிறார். அதன் பங்குதாரரான ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்கிறார். அவருடைய நடவடிக்கைகள் எல்லாம் போலீசுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் சந்தேகமாக இருக்கிறது.

அவர் ஏன் இதை எல்லாம் செய்கிறார்? அவரின் நோக்கம் என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

***

படம் வழக்கமான கதை தான். அதை எடுத்த விதத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். திரைக்கதை, குறைவான வசனங்கள், ஒளிப்பதிவு, குறிப்பாக இசை எல்லாம் பக்கபலமாக இருக்கிறது. படத்தில் வருகிற மூன்று படங்கள் இங்கிலீஷ் பாடல்கள் தான்.

படம் துவங்கி கடைசி காட்சி வரை சஸ்பென்ஸை காப்பாற்றியிருக்கிறார்கள். ஒருபக்கம் கொஞ்சம் சோர்வு இருந்தாலும், இறுதிவரை நம்மை இழுத்து செல்வதற்கு அது உதவி செய்கிறது.

நாம் வழக்கமாக பார்க்கும் மலையாளப் படமில்லை இந்தப்படம். இப்பொழுது எல்லாம் நிறைய மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்டதால், பலருக்கு புரியும்படி படம் எடுக்கிற காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதுவும் நல்லது தான். குறிப்பாக ஒரு துறை குறித்தோ, ஒரு சமூக நிகழ்வு குறித்தோ படம் வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

மம்முட்டி தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள். கதைப் பிடித்துப்போனதால், மம்முட்டியே தயாரித்தும் இருக்கிறார்.

படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அது மண்டையை குடைகிறது. நாயகனின் பொண்டாட்டியை காணோம் என தேடும் போலீசு ஏன் அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அம்போவென விட்டுவிட்டது. நாயகன் மீண்டும் துபாய்க்கே சென்றுவிட்டார் என்றால் கூட பரவாயில்லை. உள்ளூரிலேயே இருக்கிறார். அவரின் செயல்கள் போலீசை சங்கடப்படுத்தி கொண்டும் இருப்பதாக போலீசே பேசுகிறார்கள். பொண்டாட்டி காணோம் என தேடும் பொழுதே இன்னொரு பெண்ணை திருமணம் செய்கிறார். சட்டப் பிரச்சனை ஏதும் இல்லையா! அந்த குடும்பம் எப்படி அதை ஒத்துக்கொள்கிறது. ஆச்சர்யம்.

பார்க்கலாம். பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: