> குருத்து: நித்தம் ஒரு வானம் (2022)

November 18, 2022

நித்தம் ஒரு வானம் (2022)


மிகவும் சுத்தம் பார்க்கிற (OCD Problem?), சக மனிதர்களோடு ஒட்டாத நாயகன். பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறான். அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தை நெருங்கும் பொழுது, அந்த பெண் சண்டையிட்டு பிரிந்த காதலனுடன் சமரசமாகி போய்விடுகிறாள்.

நாயகன் பெரிய மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்கிறான். அதனால் தினசரி நடவடிக்கைகள் கூட சிக்கலாகிறது. மருத்துவரைப் பார்க்கிறான். ஒரு மாறுதலுக்கு ஊர் சுற்றி வா! என்கிறார். மறுக்கிறான். அவனை மருத்துவமனையில் தங்க வைத்து, மருத்துவர் எழுதிய இரண்டு கதைகளை படிக்க தந்துபோகிறார்.


கதைகள் படிக்கும் பொழுது தன்னை நாயகனாக நினைத்துப் படிப்பது அவனுடைய வழக்கம். ஒரு கதையை படிக்க ஆரம்பிக்கிறான். காட்சிகளாக விரிய ஆரம்பிக்கின்றன. அதன் முடிவு எழுதிய சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பதட்டமாகி, கேட்கும் பொழுது, இன்னொரு கதையையும் படி, முடிவு தெரியும் என்கிறார். அந்த கதை வேறு புதிய மனிதர்களோடு பயணிக்கிறது. இறுதியில் அதன் முடிவு எழுதிய பக்கங்களும் கிழிக்கபட்டிருக்கின்றன.

மீண்டும் மருத்துவரிடம் கேட்கும் பொழுது, அவை இரண்டும் கதைகள் இல்லை. நான் பார்த்த உண்மைச் சம்பங்கள். அந்த கதையில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியாவின் வட மாநிலங்களில் வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேரடியாக போய் பார்த்துவா! என்கிறார்.

வேறு வழியில்லாமல் கிளம்பி போகிறான். அவர்களுக்கு என்ன ஆயிற்று? அதனால் இவன் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை முழு நீளப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

****

அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா, காளி வெங்கட் என பலரும் நடித்தப் படம். பிரதான கதை சுவாரசியமில்லை. ஒட்டவேயில்லை. படத்திற்குள் கிளைக்கதைகளாக சொல்லப்பட்ட இரண்டு கதைகளும் பிரதான கதையாக சொல்லப்பட்ட கதையை விட பரவாயில்லை. ஆனால், அவைகளும் பழைய கதைகளாக தான் இருக்கின்றன. புதுமையாய் இல்லை. பெரிய பேனர். நல்ல ஒளிப்பதிவு. எல்லாம் இருந்தும் திரைக்கதை பலவீனம். வீணாய் போய்விட்டது.

பயணம் செய்கிற (Travel Movie) படம் என யாரோ காத்துவாக்கில் சொன்னதை கேட்டு, ஏமாந்து போய் இந்தப் படத்தில் மாட்டிக்கொண்டேன். படம் வந்த நான்காவது நாள். சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ்.

டிக்கெட் வாங்கும் பொழுது, ”கூட்டம் குறைவு என காட்சி ரத்து செய்யும் வழக்கம் உங்களிடம் உண்டா!” எனக் கேட்டேன். ”குறைந்தப்பட்சம் பத்து பேர் வந்துவிட்டால்...படத்தை ஓட்டிவிடுவோம். குறைந்தால் ரத்து செய்வோம்” என்றார். ”நான் எத்தனையாவது நபர்?” என கேட்டேன். ”நீங்கள் ஒன்பதாவது நபர்” என்றார். எனக்கு அடுத்து ஒருவர் வந்துவிட்டார் போல! படம் போட்டுவிட்டார்கள்.

சுமாரான படம். விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும். நான் சொல்வது சரி தானா என்பதை பார்த்துவிட்டு சொல்லுங்கள்!

0 பின்னூட்டங்கள்: