> குருத்து: 'அழகிய' சுவர்கள்!

April 23, 2020

'அழகிய' சுவர்கள்!




சென்னை மெட்ரோ நிலைய தூண்களில் சுவரொட்டி ஒட்டி 'அழகை' கெடுக்கிறார்களாம். ஒட்டக்கூடாது என 2017ல் சட்டம் போட்டும் மதிக்கவில்லையாம். ஆகையால் மதிக்காத 10 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார்கள். 'அழகை' பாதுகாக்க ஒரு படை உருவாக்கிவிட்டார்கள். இரவு 12 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை தூண் தூணாக சுற்றிவருவார்களாம். இன்றைய தினசரிகளில் அறிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி எழில்மிகு சென்னையை உருவாக்க சபதம் பூண்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. மேலே சொன்னது போல தடைச் சட்டமும் போட்டுவிட்டார்கள்.

முக்கிய வீதிகளில் உள்ள பல சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.



சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.
நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை இந்த 'அசுத்தமான' சுவர்கள் தான்.
சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.
இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தன் சரக்குகளை விற்பனை செய்யும் முதலாளிகள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான்.
 
உண்மையில் பாதிப்பு என்பது ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்! தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கிறது. மக்களை 'அழகு' என்ற சொல்லால் ஏற்க வைக்கிறது.

எதார்த்தத்தில் அரசுக்கு எதிராக எந்த சுவரொட்டியும் பிரிண்ட் பண்ணக்கூடாது என அதன் உரிமையாளர்களை ஏற்கனவே கடுமையாக மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள் சமூக வலைத்தளங்களை சுவர்களாக பயன்படுத்துகிறார்கள்.
அரசுக்கு அதுவும் மண்டையை குடைகிறது. அதனால் சமூக வலைத்தளங்களை மிரட்டுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கிறது. தூத்துக்குடியில், காஷ்மீரில் இணயத்தையே சில நாட்கள் தடை செய்கிறது.
சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் ஆதாரை இணைக்க சொல்லி, இப்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக இப்பொழுது உள்ள நெருக்கடியான காலத்தில் அரசு வெற்றிபெற்றுவிடும்.

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போகும் என நினைக்கிறார்கள்.

முகநூலில்....19/10/2019

0 பின்னூட்டங்கள்: