> குருத்து: காடு களைந்தோம் - பாரதிதாசன் பாடல்

April 28, 2020

காடு களைந்தோம் - பாரதிதாசன் பாடல்


குறிப்பு : இன்று நவம் 7 - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். முதலாளித்துவம் உலகம் முழுவதும் ஆண்டு, பெரும்பாலான மக்கள் துன்பம், துயரங்களில் துவண்ட பொழுது, வரலாற்றில் முதன்முதலாய் உழைப்பாளிகள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த நாள்.

உழைப்பாளிகளுக்கு ஆளத்தெரியாது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை சில பத்தாண்டுகள் சிறப்பாக ஆண்டு முறியடித்தார்கள். அந்த சாதனைகளை இன்றுவரை முதலாளித்துவத்தால் முறியடிக்க முடியவில்லை.

இந்த நாளை கடந்த 102 வருடங்களாக உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

நாமும் கொண்டாடுவோம்.

இந்த பாடலை மகஇக தோழர் பாடகர் கோவன் பாடியுள்ளார்.
ஒருமுறை கேளுங்கள்.

****

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென்றே கடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.
ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்னவே எங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்.
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம் இது செய்நன்றி தானோ?

https://www.youtube.com/watch?v=lWVoFAUMmto&feature=youtu.be&fbclid=IwAR2kFOldNxac4F1SERhXJj7URZZk_T4AO4N_Gti4iUkspdb2mmDpNkRjiCk

#எனக்குப்பிடித்த_பாடல் 9

0 பின்னூட்டங்கள்: