> குருத்து: பாடலாசிரியர் ராபர்ட் ரங்கா சாப்பாட்டுக்கடை!

April 23, 2020

பாடலாசிரியர் ராபர்ட் ரங்கா சாப்பாட்டுக்கடை!

நேற்று மதியம் 3.30 மணியளவில் கோடம்பாக்கம் பக்கம் வேலை விஷயமாக சுற்றிக் கொண்டிருந்தேன். சாப்பிட கடை தேடினேன்.

டிரஸ்ட்புரம், புலியூர் முதன்மை சாலையில் ஒரு சின்ன கடையில் "#முதியவர்களுக்கு சாப்பாடு இலவசம்! #மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி விலை" என போர்டு போட்டிருந்தது.

இப்படி எழுதியிருப்பதால், மோசமான சாப்பாடாக இருக்காது என்ற நம்பிக்கை வந்தது. சாப்பாடு தீர்ந்து போனதால் மீண்டும் சூடாக வடித்து கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு, சாம்பார், குழம்பு, பீட்ரூட் பொரியல், காராமணி கூட்டு நன்றாக இருந்தது. விலையும் அதிகமில்லை 40 ரூபாய் தான்.

சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன் "இப்படி போடு வெச்சிருக்கீங்களே தினமும் நிறைய பேரு வந்துட்டா என்ன செய்வீங்க!" என்றேன்.

"கடவுள் நம்மல அந்தளவுக்கு சோதிக்கலை! தினம் ஒரு ஆளு, இரண்டு ஆளு அனுப்பி வைக்கிறார்" என்றார்.

"நம்ம ஊர்ல ஆதரவற்ற வயசானவங்க அதிகமாச்சே! இலவசம்னா தொடர்ந்து வருவார்களே!" என்றேன்.

"அவங்களுக்கு ஒரு தெளிவு இருக்குது. ஒரு படத்துல (பாய்ஸ்) செந்தில் சொல்வாரே எங்கெல்லாம் இலவசமா சாப்பாடு தருவாங்களோ! அவங்களுக்கு தெரியுது. ஒருத்தர் இன்னைக்கு வர்றார்னா ரெண்டு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவார்" என்றார்.

"எத்தனை வருஷமா இந்த கடைய நடத்துறீங்க?

"2002ல் இருந்து நடத்துறேன் தம்பி" என்றார்.

"எப்படி இப்படி உதவனும்னு தோணுச்சு?"

"நமக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப்பார்னு கடவுள் சொல்றாரே!"

"நீங்க எந்த சாமி கும்பிடுறீங்க!"

"நாங்க சபையில் இருக்கோம்"

"சபைன்னா பெந்தகோஸ்தேங்களா"

"ஆமாம் தம்பி"

அவரின் துணைவியாரும் கடையில் இருந்தார்.

"உங்களுக்கு எத்தனை பசங்கம்மா?"

'நாலு பசங்க. மூணு பசங்க வேலைக்கு போறாங்க. ஒரு பையன் படிக்கிறான்"

"மூத்தவருக்கு என்ன வயசு என்றேன்?"

"28 ஆயிருச்சு!"

"இன்னுமா கல்யாணம் செய்யல!"

"பொண்ணு பக்கத்திலேயே கிடைக்குது! நாங்க கொஞ்சம் தள்ளி பெருங்களத்தூர், செங்கல்பட்டுன்னு தேடுறோம்."

"பக்கத்தில் இருந்தா நல்லது தானே!"

"பொசுக்குன்னு பொண்ணுங்க அம்மா வீட்டுக்கு கிளம்பி போயிருவாங்க. அதுக்குத்தான்" என்றார்.

புன்னகை தான் வந்தது.

இடையில் வெளியே போனவர் திரும்ப வந்தார்.

"சினிமாவில இரண்டு பாட்டு எழுதியிருக்கேன் தம்பி. இவைகள் தான்!" என தட்டச்சு செய்து இருந்ததை காண்பித்தார்.

"என்ன படம்?"

"அளவுகோல்" னு ஒரு படம். சிங்கப்பூர் இசையமைப்பாளர். புதுமுகம் ஹீரோ"
"படத்தில் என்ன பின்னணியில் இந்த பாட்டுக்கள் வருகிறது?"

"ஒரு பாடல் - மனிதன் படத்தில் " வானத்தைப் பார்த்தேன். பூமியைப் பார்த்தேன் போல!

இன்னொரு பாடல் - மலையடிவாரத்தில் சாலை போடும் தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தில் சந்தோசமாக பாடும் பாடல்"

பாடல்களைப் படித்துப் பார்த்தேன். அவரும் ராகமாய் பாடிக்காண்பித்தார். நன்றாக இருந்தது. அவரிடமும் சொன்னேன்.



"படம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கு?"

"80% வளர்ந்திருச்சு. சீக்கிரம் முடிஞ்சு வெளிவந்திரும்"

"இவ்வளவு வயசு வரை ஏன் காத்திருந்தீங்க?"

"இளவயசுல பசங்க சின்ன பசங்க! குடும்பத்துக்காக உழைக்க வேண்டியிருந்ததால சினிமால கவனம் செலுத்த முடியல! பசங்க வளர்ந்திட்டாங்க! இப்ப ப்ரீ ஆயிட்டேன். முயற்சி செய்றேன்" என்றார் முக மலர்ச்சியுடன்!

"வாழ்த்துக்கள். தொடர்ந்து இந்த சாப்பாடு உதவியை செய்யுங்கள். தொடர்ந்து பாட்டு எழுதுங்கள்"

ஒரு புகைப்படம் எடுக்கட்டுமா? என்றேன். புன்னகைத்துக் கொண்டே போஸ் கொடுத்தார்.

வீட்டிற்கு வந்து யூடியூப்பில் தேடிப்பார்த்தேன். படம் குறித்து ஒரு பாடலை விளம்படுத்தியிருந்தார்கள்.

0 பின்னூட்டங்கள்: