> குருத்து: பொருளாதார நெருக்கடியும் பெருமழையும்!

April 23, 2020

பொருளாதார நெருக்கடியும் பெருமழையும்!


சென்னையின் புறநகர் பகுதி. மாலை 4 மணி. மெல்ல மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. நேற்று இந்த பகுதியில் நல்ல மழை பெய்ததாக சொன்னார்கள். மழையில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எவ்வளவு விரைவாக கிளம்பவேண்டுமோ, கிளம்பிவிடவேண்டும் என நினைத்தேன்.

அந்த சிறுநிறுவனத்திற்குள் நுழைந்தேன். கடந்த பிப்ரவரிக்கு பிறகு இபோழுது தான் வருகிறேன். கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்த நிறுவனம் ஜி.எஸ்.டி கட்டவில்லை. நிறுவனம் பெரும் பொருளாதார சிக்கலில் இருந்தது. முன்பு, ஜாப் வேலை (Job work) செய்பவர்களுக்கு, வரி இல்லாமல் இருந்தது. ஆகையால், வேலையை செய்து பணம் வரும்பொழுது வாங்கிக்கொண்டு செலவுகளை எதிர்கொண்டார்கள்.

ஜாப் வேலைக்கும் ஜிஎஸ்டி வரி போட்ட பிறகு, மாதம் மாதம் பணம் வரி கட்ட வேண்டியதாகிவிட்டது. வேலை தருபவரோ பணத்தை தாமதமாக தரும் பொழுது, பணம் கட்ட முடியாத சிக்கலுக்கு போய்விடுகிறார்கள். தாமதமாக கட்டினால், ஒரு நாளைக்கு 50ரூபாய் தாமதக்கட்டணமும் கட்டவேண்டியவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நிறுவனம் ஆட்டோமொபைல் தொழில் சார்ந்தது தான். ஆறு மாதத்திற்கு முன்பு வந்த வேலை கூட இப்பொழுது வருவதில்லை. ஆகையால், மாதாந்திரம் எதிர்கொள்ளும் வாடகை, மின்கட்டணம், சம்பளம் போன்ற அடிப்படை செலவுகளை கூட எதிர்கொள்ளமுடியவில்லை. ஆகையால், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஸ்டேசனரி கடை போடலாம் என்ற எண்ணத்தில், இந்த பகுதியிலேயே ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருப்பதாக சொன்னார்..” அதற்கும் ஜி.எஸ்.டி எடுக்கனுமா?” என்றார். ”வேண்டியதில்லை. இரண்டு மூன்று மாதம் கடையை நடத்துங்கள். அதன் விற்பனை, ஜி.எஸ்.டி எடுக்கலாமா? வேண்டாமா?” என்பதை தேவையிலிருந்து பிறகு முடிவு செய்யுங்கள்” என்றேன். சரி என்றார்.

இவருடைய நிலை மட்டும் இப்படியில்லை. என்னுடைய வாடிக்கையாளர்கள் (Clients) சிலரின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 100 பேர் வரை வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பி.எப் இன்ஸ்பெக்சன் முடித்த பிறகு, அவரிடம் மிக குறைந்த கட்டணத்தைக் கேட்டு பில்லை நீட்டினால், ”நீங்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்தீர்கள். சரி தான். ஆனால், கம்பெனியை இழுத்துமூடலாமா? என்ற யோசனையில் இருக்கிறேன். வேலை செய்த இடங்களில் எல்லாம், பணம் வரமாட்டேன் என்கிறது. வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை கூட மாதம் இருமுறை தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு நெருக்கடி!” என புலம்பித்தள்ளினார். "எனக்கும் அதே பிரச்சனை தான். ஆகையால், இப்பொழுது இந்த பில்லை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் வரும் பொழுது வாங்கிக்கொள்கிறேன்” என சொல்லிவிட்டு வந்தேன்.

மீண்டும் வந்த வேலைக்கு வருவோம். மார்ச் மாதத்திலிருந்து, ஒவ்வொரு மாதமாக கணக்குப் பார்த்து வந்தேன். ஜூலை மாதம் வருவதற்குள் அவர் வங்கியில் வைத்திருந்த பணம் மொத்தமும் தீர்ந்துவிட்டது. அவர் கட்டிய 80000 பணத்திற்கு ரூ. 20000த்திற்கும் மேல் தாமதக்கட்டணம் மட்டுமே செலுத்தினார். இப்பொழுது தாமதமாக வரியைக் கட்டியதற்கு வட்டி (Interest) கூடுதலாக பின்பு கட்டவேண்டியிருக்கும். அது தனி.

நிறுவனத்தை மூடிவிட்டு, வண்டியை இருவரும் எடுக்கும் பொழுது, மழை லேசாக துவங்கியிருந்தது. அவர் எனக்கு ஜனவரியிலிருந்தே கட்டணம் தரவேண்டும். வேலை செய்த பொழுது, என்னுடைய நிலையை கேட்டார். நானும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை சொல்லியிருந்தேன். இப்போதைக்கு ரூ. 10000 தருகிறேன். பிறகு மீதியை தருகிறேன் என்றார். வேறு வழியில்லை. ஏற்றுக்கொண்டேன்.

போக போக மழை கொஞ்சம் பெரிதாக விழத்துவங்கியது. மழையில் நனைவது எனக்கு எப்பொழுதுமே பிரச்சனை. படுக்க வைத்துவிடும். இரண்டு நாட்கள் வேலை எதுவும் செய்யமுடியாது. ஆனால், இப்பொழுது இவரை விட்டுவிட்டால், நாளை காலையில் “வேறொன்றுக்கு பணம் செலவாகிவிட்டது. இரண்டு நாட்களில் பணம் ஏற்பாடு செய்து, தருகிறேன்” என்பார். பின்பு பணம் வாங்குவது பெரிய சிரமமாகிவிடும் எனப்பட்டது. இன்னும் வாடகை, பலசரக்கு கடைக்கு கொடுக்காதது எல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது.

அவரை தொடர்ந்து என் வண்டியில் போகும் பொழுதே, மோடியின் ஆட்சி, பொருளாதார நெருக்கடி, அவருடைய மந்திரிகளின் உளறல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. பெருமழை பெய்தது. தெப்பலாய் நனைந்துவிட்டேன். அவரே பாலத்திற்கு அடியே ஓரங்கட்டி நின்றார். சில நிமிடங்களில். அவரே “முழுக்க நனைந்துவிட்டோம். போய்விடலாமா” என்றார். “நானும் அதைத்தான் நினைத்தேன்” என்றேன். இருவரும் கிளம்பினோம்.

மூன்று கிலோ மீட்டர் போனதும், மழையே எங்கள் மீது இரக்கப்பட்டு நின்றது. சாரல் மட்டும் வீசியது. ஏ.எடி.எம்மை பார்த்து நிறுத்தி உள்ளே நுழைந்தார். பணம் எந்தவித பிரச்சனை இல்லாமல் வந்துவிடவேண்டும் என 'பிரார்த்தனை' செய்தேன். பணத்தை கொண்டு வந்து கையில் தந்தார். நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். மீண்டும் மெலிதாய் மழை பெய்ய துவங்கியது. வீடு வந்து சேர்வதற்குள் இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டது.

வாழ்க்கைக்கு தேவையானதை சம்பாதிப்பதற்கு எப்படி எல்லாம் சிமரப்பட வேண்டியிருக்கிறது என நினைத்துக்கொண்டே தூங்கினேன். பல லட்சம் பேருக்கு வேலை இல்லை. வேலை செய்பவர்களும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள். மக்கள் பித்துப்பிடித்துப் போய் அடுத்த ஆட்சியிலும் மோடிக்கே வாக்களிக்கிறார்கள். பதறிப்போய் எழுந்தேன். கனவு என அறிந்து ஆறுதலடைந்தேன். இருப்பினும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வெகுநேரம் ஆனது.

- முகநூலில் .... (17/10/2019  )

0 பின்னூட்டங்கள்: