> குருத்து: எழுத்தாளர் இராஜேஷ்குமாருக்கு 50 ஆண்டு வாழ்த்துக்கள்!

April 23, 2020

எழுத்தாளர் இராஜேஷ்குமாருக்கு 50 ஆண்டு வாழ்த்துக்கள்!


நாலாம் வகுப்பு படித்த பொழுது காலையில் தேநீர் கடையில் தேநீர் வாங்க போன பொழுது, தினத்தந்தியில் சித்திரக்கதை கன்னித்தீவு படிக்கத் துவங்கினேன். இன்றும் தன் காதலிக்காக அடர்ந்த காடுகளிலும், மலைகளிலும் மந்திரவாதி மூசாவை தேடி அலைந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். (இன்றும் வருகிறது

பிறகு பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் ஒரு கடையில் வாடகைக்கு வாங்கி ஜேம்ஸ்பாண்ட், இரும்புகை மாயாவி, துப்பாக்கி வீரர்களின் சாகசம் என காமிக்ஸ் சாகசம் படிக்க துவங்கினேன். 

பிறகு, அதே கடையில் அம்புலிமாமா, பாலாமித்ராவிற்கு தாவினேன். இப்படி சில வருடங்கள் ஓடின.

ஒரு நாள் முடிவெட்டும் கடையில் இராஜேஷ்குமார் எழுதிய ஒரு க்ரைம் நாவல் எதைச்சையாய் தட்டுப்பட, பரபரவென முழுக்க படித்துவிட்டு தான் வீடு போய் சேர்ந்தேன்.

தொடர்ச்சியாய் படிக்க அதற்கும் ஒரு கடையை கண்டுபிடித்து வைத்திருந்தேன். தினம் ஒரு நாவல் வாடகைக்கு வாங்கி வாசிப்பேன். இராஜேஷ்குமாரிலிருந்து துவங்கி, பட்டுக்கோகோட்டை பிரபாகர், சுபா என கிரைம், கடத்தல், கொலை, துப்பறிதல் என சில ஆண்டுகள் ஓடின. இராஜேந்திரகுமார் நாவல்கள் அந்த வயதில் கிளுகிளுப்பூட்டின. பிறகு பாலகுமாரனின் எழுத்தில் கொஞ்ச காலம் மயங்கி கிடந்தேன்.

பிறகு, உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். சுஜாதா நிறையவே ஈர்த்தார். தேடித்தேடி படித்தேன்.

பிறகு, சேர்க்கை 'சரியில்லாமல்' போனதால், கார்க்கி, கணேசலிங்கன், சோவியத் நாவல்கள் என சமூகம் குறித்து சீரியசாக எழுதும் எழுத்தாளர்கள் பக்கம் வந்து சேர்ந்தேன்.

கொஞ்சம் வாழ்க்கையை திரும்ப பார்த்தால்... படித்ததில் என்னுடைய வளர்ச்சி சரியாகத்தான் இருந்திருக்கிறது.

படிப்பதும் சமூக செயல்பாடுகளும் தான் என் வாழ்க்கையை செம்மை செய்திருக்கின்றன என்பதையும் உணரமுடிகிறது.

35, 40 வயதிலும் இராஜேஷ்குமாரிடமே டேரா போட்டு நிற்கும் ஒரு சிலரைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். என்னைக் கேட்டால், அவரைத் தாண்டி வந்துவிடவேண்டும்.

நான் படித்து வந்த பாதையில்... இராஜேஷ்குமார் அவர்கள் 50 ஆண்டுகளைத் தாண்டியும் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

அவருக்கு பாராட்டுவிழா சமீபத்தில் எடுத்திருக்கிருக்கிறார்கள். தாமதமாக தான் தெரிந்தது. முன்பே தெரிந்திருந்தால் கலந்தும் கொண்டிருந்திருக்கலாம்.
மீசை முளைத்த வயதில்... விவேகமாக துப்பறிந்த விவேக் இன்னும் மனதில் நிற்கிறார். இன்னும் அதே இளமையோடு, இராஜேஷ்குமார் கதைகளில் விவேக் துப்பறிந்து பல வழக்குகளின் முடிச்சுக்களை சுவாரசியமாக அவிழ்த்துக்கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன். திறமையான ஆபிசை என்பதால் எழுத்தாளர் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தாரா என அறிய ஆவலாய் இருக்கிறேன்.

இராஜேஷ்குமார் அவர்களுக்கு ஒரு வாசகனாக எனது அன்பு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

0 பின்னூட்டங்கள்: