> குருத்து: வால் பையனுக்கு அஞ்சலி!

April 23, 2020

வால் பையனுக்கு அஞ்சலி!


சில ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பதிவுகள் (blogspot, WordPress) எல்லாம் மிகப்பிரபலம்.

ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த பிரபல வலைத்திரட்டி #தமிழ்மணம். இன்றும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான பதிவர்கள் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் சிலர் பிரபலமானவர்களாக வலம் வந்தார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த உழைப்பும், நேரமும் மிக அதிகம். அவ்வளவு பதிவுகள். அவ்வளவு வாதங்கள். அனல் பறக்கும்.

அதில் ஒருவர் ஈரோட்டைச் சேர்ந்த #வால்பையன். அடிப்படையில் அவர் நாத்திகவாதி. பல்வேறு தளங்களில், தலைப்புகளில் நன்றாக எழுதக்கூடியவர்.
அவரே ஒரு இடத்தில் பதிவுலகில் தான் ஆறாவது இடத்தில் இருந்ததாக சொல்கிறார். நானெல்லாம் பலர் எழுதுவதையும் படித்து, விவாதிக்க கூடிய ஒரு நபர். அவ்வளவே!

பின்னாட்களில் வலையுலகம் செல்வாக்கு மங்கி... முகநூல், டுவிட்டர் என மாறிவிட்டது. அதில் பலரையும் தொலைத்ததில் வால் பையனையும் தொலைத்துவிட்டேன்.

உடல்நலக் குறைவினால் வால்பையன் என்கிற Arun Raj இறந்துவிட்டதாக முகநூலில் இன்று பலரும் எழுதுகிறார்கள். அவர் பக்கத்தை பார்க்கும் பொழுது, மருத்துவமனையில் இருக்கும் பொழுதே நவம். 2 தேதி வரை முகநூலில் எழுதிக்கொண்டு இருந்திருக்கிறார்.

டாஸ்மாக் எவ்வளவோ மக்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதில் வால் பையனும் ஒருவராகிவிட்டார் என்ற செய்தி கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அவருடைய வயது 42 என்கிறார்கள். எவ்வளவோ அரசியல் பேசுகிறோம். விவாதிக்கிறோம். அரசு திட்டமிட்டு மக்களை கொல்கிற டாஸ்மாக்கை விட்டு தள்ளி நிற்க முடியாதா? என்பது கேள்வியாக இருக்கிறது. என் அனுபவத்தில் தனிநபர்களாக இருக்கும் பொழுது இப்படி சீரழிவது இயல்பாக இருக்கிறது. தான் சரியென நம்புகிற ஒரு அமைப்பில் இணைந்து வேலை செய்யும் பொழுது இவற்றையெல்லாம் எளிதில் கடந்துவிடமுடியும் என நம்புகிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலி! :(

0 பின்னூட்டங்கள்: