> குருத்து: சிசிடிவியை முன்வைத்து...

April 29, 2020

சிசிடிவியை முன்வைத்து...


சைக்கோ படத்தில் வரிசையாக நடக்கும் கொலைகளில் சிசிடிவியை கண்டுகொள்ளவே இல்லை என பலரும் கொந்தளிக்கிறார்கள்.
மிஷ்கினின் தொடர்ச்சியான படங்களைப் பார்த்தவர்கள் இந்த படத்தின் தவறுகள் அறியாமல் செய்த தவறுகள் அல்ல! தெரிந்தே செய்த தவறுகள் என புரியும்.

செல்பேசி வந்து, மக்களிடம் பரவலாக கைக்கு வந்ததற்கு பிறகு கூட, சில இயக்குநர்கள் தங்கள் படங்களில் செல்பேசியை பயன்படுத்தவேயில்லை. காரணம் - திரைக்கதையில் காட்சிகளை நகர்த்த முடியாது. சிந்தனை நொண்டியடிக்கும். ஆகையால், கவனமாய் தவிர்த்தார்கள்.
அது போலத்தான், மிஷ்கினும் சிசிடிவி லாஜிக் தெரிந்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

என்னைக் கேட்டால், ஒன்று பார்வையாளனின் கேள்விக்கு மிஷ்கின் நேர்மையாக பதில் சொல்லவேண்டும். இல்லையா! அல்லது கடுமையாக உழைத்து, கதை செய்யவேண்டும் அல்லது சில்லுக்கருப்பட்டி போன்ற வாழ்க்கை குறித்த கதையாடல்களை எடுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.
 
#மக்களுக்கு ஒரு கேள்வி:

மிஷ்கினிடம் ஒரு படைப்பு குறித்து இவ்வளவு கோபமாய் கேட்கிறீர்கள். சரியானது.

அதே வேளையில் சுவாதி கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இராம்குமார் மின்வயரை கடித்து செத்தான் என சிறை நிர்வாகம் திரைக்கதை எழுதிய பொழுது... சிசிடிவி காட்சிகள் எங்கே என ஏன் நாம் கேள்வி கேட்கவில்லை?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக லட்சக்கணக்கில் திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய பொழுது, அரசு திட்டமிட்டு கொலைகளை நடத்தியதே! அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் எங்கே போனது என நம்மில் பலர் கேட்கவில்லை.

 பொங்க வேண்டிய இடங்களில் எல்லாம் பொங்குங்கள் என அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: