> குருத்து: குஜராத்தில் ஊழல் : 1500 ஆதார் அட்டைகள் மூலம் ஜிஎஸ்டி பதிவெண் பெற்று மோசடி

February 28, 2023

குஜராத்தில் ஊழல் : 1500 ஆதார் அட்டைகள் மூலம் ஜிஎஸ்டி பதிவெண் பெற்று மோசடி




குஜராத்தில் கடந்த 2022 நவம்பரில் தான் பல நிறுவனங்களில் சோதனை செய்ததில், 1000 கோடிகளுக்கும் மேலாக தவறு நடந்ததை கண்டுபிடித்தாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்தன.


****

டந்த எட்டு மாதங்களில், 1500 ஆதார் அட்டைகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஜிஎஸ்டி பதிவு எண்களை பெற்று, புதிய முறையிலான மோசடி நடந்துள்ளதை ஜிஎஸ்டி துறை கண்டுபிடித்துள்ளது.

சரக்கு கொள்முதல் செய்யாமலே, கொள்முதல் செய்தது போல பில்களை மட்டும் வாங்கி கணக்கு எழுதுவதை “பில் டிரேடிங்” என்பார்கள். இந்த ”பில் டிரேடிங்கை” செய்வதற்காக, அரசு திட்டங்களில் உதவிகள் பெற்றுத் தருகிறோம் என கிராமத்து மக்களை வரவழைத்து, அவர்களுடைய ஆதார், பான் (PAN) எண்களைப் பெற்று, போன் எண்களை மாற்றி 1500 ஆதார் அட்டைகள் மூலம் ஜிஎஸ்டி எண்களை பெற்று மோசடி செய்திருக்கிறார்கள்.

பில் டிரேடிங்கை கட்டுப்படுத்துவதற்காக பிப்ரவரி முதல் வாரத்தில் குஜராத்தில் சூரத், அகமதாபாத், ராஜ்கோட் பகுதிகளில் உள்ள சந்தேகத்திற்குரிய சில நிறுவனங்களுக்கு நேரில் போய் பார்த்த பொழுது, அந்த மக்கள் தங்கள் பெயரில் ஜிஎஸ்டி எண் எடுக்கப்பட்டதே தெரியாது என அதிர்ந்து பதில் அளித்திருக்கிறார்கள்.

ஆதார் அட்டையில் மாற்றப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து பெறப்பட்ட 470 பதிவுகளை சரிபார்த்த பொழுது இந்தியா முழுவதும் 2700க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி பதிவு பெறப்பட்டது கண்டறியப்பட்டது. இப்பொழுது வழக்கு பதிந்து இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை தேடிவருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட எல்லா பதிவெண்களையும் சோதித்துப் பார்த்தால் தான் எவ்வளவு பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்றே தெரியவரும். குஜராத்தில் கடந்த 2022 நவம்பரில் தான் பல நிறுவனங்களில் சோதனை செய்ததில், 1000 கோடிகளுக்கும் மேலாக தவறு நடந்ததை கண்டுபிடித்தாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்தன.

ஜிஎஸ்டி அறிமுகமான 2017 ஆண்டிலிருந்து டிசம்பர் 2021 வரை அதாவது 4.5 ஆண்டு காலத்தில் மட்டும் 32,310 கோடி அளவிற்கு போலியான பில்கள் மூலம் ஊழல் நடந்திருக்கிறது என டைம்ஸ் ஆப் இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் செய்தி வந்தது. ஜிஎஸ்டி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடக்க வாய்ப்பில்லை எனவும் எழுதின. அதைத் தொடர்ந்து இப்பொழுது ஆதாரை வைத்து ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

கடந்த தேர்தல்களில் ”ஊழல் செய்யமாட்டேன். ஊழலும் செய்ய விடமாட்டேன்” என்பது மோடியினுடைய பிரபலமான முழக்கம். ஆனால், ஊழலுக்கு மேல் ஊழலாக மோடியின் சொந்த மண்ணான குஜராத்தில் இருந்து வெடித்து கொண்டிருக்கிறது. இப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தல்களை ஒட்டி அறிவித்த அனைத்து முழக்கங்களுமே வெற்று முழக்கங்களாகி வருகின்றன. இனி வரும் தேர்தலில் புதிதாக என்ன முழக்கம் வைப்பது என மோடி கும்பல் ரூம் போட்டுத்தான் சிந்திக்கவேண்டும்.


0 பின்னூட்டங்கள்: