> குருத்து: February 2025

February 27, 2025

Officer on duty – மலையாளம் – 2025


நாயகன் போலீசு அதிகாரியாக இருக்கிறார். வேறொரு வழக்கில் சிக்கி, அவரை பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய தனிப்பட்ட இழப்பால்… அவர் கொஞ்சம் மன அழுத்தத்தோடு இருக்கிறார்.


ஒரு பேருந்து நடத்துநர் தன் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய தங்க செயினை ஒரு அவசர மருத்துவ தேவைக்கு அதை அடகு வைக்கும் பொழுது, நகை போலி என நிறுவனம் சொல்கிறது. அது புகாராக மாறி போலீசு ஸ்டேசனுக்கு வருகிறது.

அதை விசாரிக்கும் பொழுது, அந்த பெரியவரின் மகள் ஒருவனிடம் சிக்கி, ஒரிஜினலை தொலைத்திருக்கிறாள். விசாரிக்க போலீசு நிலையத்திற்கு வரச் சொன்னால், உண்மை வெளிவந்துவிடும் என தற்கொலை செய்துகொள்கிறாள்.

இந்த வழக்கு நாயகனை ஒரு போதை கும்பலிடம் கொண்டு சேர்க்கிறது. அந்த போதைக்கும்பல் மிகவும் ஈவிரக்கமற்றதாக, கொலைகார கும்பலாக இருக்கிறது. இவர் தேடிப்போக,அந்த கும்பல் வேறு ஒரு விசயத்திற்காக இவரையே தேடி வருகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***


இயக்குநர் பாலுமகேந்திரா மென்மையான காதல் படங்களாக எடுத்தவர். அவர் பட்டறையில் வந்த இயக்குநர்களோ அதற்கு மாறுபட்ட ஆட்கள். இயக்குநர் வெற்றிமாறனின் ஆடுகளம் பார்த்துவிட்டு, “ஏம்பா! இவ்வளவு (Suffocation) பதட்டமாக படம் எடுக்கிறீர்கள்?” என கேட்டாராம், இந்தப் படம் துவக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் நமக்கும் அப்படித்தான் இருக்கிறது.

இந்தப் படம் பார்க்கும் பொழுது, நான் மகான் அல்ல, வேட்டையாடு விளையாடு எல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வரிசையில் மலையாள திரை உலகத்தின் பங்கு என இதைச் சொல்லலாம்.

இந்த கதையை எழுதியவர் Shahi Kabir. ஏற்கனவே புகழ் பெற்றா Joseph கதையை எழுதியவர். இந்தப் படத்தின் இயக்குநர் Jithu Ashraf. இது முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யம்.

குஞ்சக்கோபன் தான் மொத்த கதையும் தன் தோளில் நகர்த்துகிறார். இறுக்கமான முகம். எப்பொழுதாவது புன்னகைக்கிறார். ஒரு போலீசு அதிகாரியாக இருந்து கொண்டு, துணைக்கு ஆள்களை அழைத்துக் கொள்ளாமல் அந்த குழுவிடம் எசகுபிசகாக சிக்கிக்கொள்கிறார். அவருடைய துணைவியாராக பிரியாமணி துணை நின்றிருக்கிறார். படத்தின் துவக்க காட்சி போலீசின் கிறுக்குத்தனத்தை காண்பிக்க வைத்திருக்கிறார்கள். டெரர் தான்.

சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. 18+ என உள்ளே நுழையும் பொழுதே போர்டு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி மனப்பதட்டத்துடன் பார்க்க விருப்பப்படுகிறவர்கள் பாருங்கள். விரைவில் ஓடிடிக்கு வரும்.

February 22, 2025

The Gorge (2025) ஒரு நிதானமான ஆக்சன் படம்.


நாயகனும், நாயகியும் இருவரும் துப்பாக்கியை (Sniper) தூரத்தில் இருந்து சுடுவதில் கெட்டிக்காரர்கள். இருவருக்கும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லையெனன தெரிந்தே அவர்களை ஒரு வேலைக்கு தெரிவு செய்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் அந்த பள்ளத்தாக்கில் பயோ ஆயுதம் ஒன்றை தயாரிப்பது வல்லரசின் நோக்கம். ஆய்வு தோல்வியடைந்த பொழுது, அங்கு நிறைய மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. இன்னமும் ஆய்வை தொடர்கிறார்கள்.

வெளி உலகத்திற்கு தெரியாத, அந்த பள்ளத்தாக்கை இரகசியமாக பாதுகாக்கிறார்கள். கிழக்கு கோபுரத்திலும், மேற்கு கோபுரத்திலும் இருவரையும் காவல் காக்க தனித்தனியாக அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு வருடம் பணிக்காலம். அவர்களுக்கு தேவையானது எல்லாமும் அந்த கோபுரத்திலேயே உண்டு. வெளியுலக தொடர்பு கிடையாது. சம்பந்தப்பட்ட ஆட்களையே மாதம் ஒருமுறை ரேடியோ மூலம் தொடர்புகொள்ளலாம். அவ்வளவு தான்.

பள்ளத்தாக்கில் இருந்து யார் மேலே ஏறி வந்தாலும், சுட்டுவிடலாம் என்பது உத்தரவு. குறிப்பாக பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் இருக்கும் அந்த ஒற்றை நபரோடு பேசக்கூடாது.

நாட்கள் நகர்கின்றன. மெல்ல மெல்ல அறிமுகமாகி, போர்டில் எழுதி எழுதி பைனாகுலர் வழியாக பார்த்துப் பார்த்து பேச துவங்குகிறார்கள். திடீரென அங்கு ஒரு ஆபத்து வருகிறது. அது அவர்களை பல பிரச்சனைகளுக்கு இட்டு செல்கிறது.

பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள்.
***



முதல் கால் மணி நேரம் அறிமுகம். பிறகு கால் மணி நேரம் காதல். பிறகு ஆக்சன் என படம் முழுவதிலும் நம்மை போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் சில வசனங்கள், நாயகன் எழுதிய ”She Collapsed the Night” என்ற குறுங்கவிதையோடு படம் முடிவடைவது என்பதெல்லாம் ரசிக்க வைக்கிறது.

Doctor Strange எழுதி இயக்கிய Scott Deriickson இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். Fantastic four படத்தில் வரும் Miles Teller நாயகனாக வருகிறார். “The Menu” படத்தில் பார்த்த Anya நாயகியாக வருகிறார்.


ஆக்சன் ரசிகர்கள் பாருங்கள். ஆப்பிள் டிவியில் இருப்பதாக Just Watch தளம் சொல்கிறது. தமிழ் சப் டைட்டிலுடன் பார்க்க கிடைத்தது.   பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

February 19, 2025

Mehta Boys (2025) இந்தி தந்தை மகன் - டிராமா


நாயகன் கட்டிட பொறியாளர். பள்ளி படிக்கும் பொழுதே அப்பாவோடு முரண்பட்டு மும்பைக்கு வந்துவிடுகிறார். இப்பொழுது பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறார். அம்மா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு போகிறார்.


இறப்புச் சடங்கில் எல்லோரையும் வரவேற்பது போலவே, மகனையும் வரவேற்கிறார் அப்பா. இனி தனியாக இருப்பதும் சாத்தியமில்லை. மகனுடன் இருப்பதும் சாத்தியமில்லை. ஆகையால் மகள் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்க செய்யலாம் என்ற முடிவில் கிளம்புகிறார்கள். அவருக்கு தன் சொந்த வீட்டை, ஊரை விட்டு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை.

ஒரு வழியாய் அவரை கிளப்பி விமான நிலையத்துக்கு வந்தால், அவருடைய பயணச் சீட்டுக்கு இடம் இல்லாமல் இரண்டு நாள் தள்ளிப்போகிறது. நெருக்கடியில் மகனுடன் தங்குகிறார். இன்னொரு சிக்கலில் கூடுதலாகவும் சில நாட்கள் தங்க நேரிடுகிறது.

இரண்டு பேருக்கும் ஒத்து வரவேயில்லை. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

தந்தை மகன் குறித்த உறவு சிக்கல் குறித்து இந்திய அளவிலேயே வந்த படங்கள் குறைவு. அதிலும் நல்ல படங்கள் இன்னும் குறைவு. கடைசியாய் பிரான்சிலிருந்து மெக்காவிற்கு தன் இளவயது மகனுடன் தரை மார்க்கமாக காரில் பயணப்படும் Le Grand Voyage படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் நல்ல படம்.

இந்திய படங்களுக்கான வழக்கமான கதைச் சொல்லல் முறை இல்லை. மேற்கத்திய பாணியில் இருந்தது. ஏன் இந்த முரண்பாடு என எங்கும் பிளாஷ்பேக் காட்சிகள் இல்லை. படத்தின் நிகழ்வுகளின் போக்கில் நாமாக புரிந்துகொள்ள வேண்டியது தான். படம் நெடுகிலும் வசனங்கள் குறைவு. ஆங்கிலம் தான் அதிகம்.

யார் இயக்குநர் என தேடினால், முன்னாபாய், 3 இடியட்ஸ் புகழ் Boman Irani தான் தனது முதல் படமாக இயக்கியுள்ளார். 2014ல் Bird Man என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி ஆஸ்கார் வெற்றி பெற்ற ஒருவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். குளோசப் காட்சிகள் எல்லாம் வழக்கமான படங்களை விட இன்னும் நெருக்கமாக போயிருக்கிறார்.

ஏன் மகன்கள் அப்பாவோடு மோதல் போக்கு வருகிறது. இளவயதில் அப்பாவோடு நெருக்கமாக இருக்கிறார்கள். அதே போல குடும்பம் என ஆகி, தந்தையாக ஆன பிறகு தந்தையை பலர் புரிந்துகொள்கிறார்கள். இடைக்காலத்தில் மகனுடான விருப்பம், செயல்பாடுகளில் கொஞ்சம் ஆதிக்கத்தனத்தோடு தலையிடுவதால் முரண்பாடு வருகிறதா? ஒருவேளை நிதானமாக மதித்து நடந்தால் இந்த சிக்கல் வராதோ? இந்த நெருக்கடியான கட்டத்தில் அம்மா தான் இருவருக்கும் பாலமாக இருக்கிறார். அம்மாவும் இல்லாத குடும்பங்களில்?

Boman Irani தான் தந்தையாகவும் வருகிறார். மகனாக வரும் அவினாஷ் திவாரியும் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.

பிரைமில் இருக்கிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலம் தான் அதிகம். இடையிடையே தமிழ் வந்து வந்து போகிறது எனலாம்.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

February 17, 2025

Smile 2 (2024)


புன்னகையை பார்த்துவிடாதீர்கள்!

உங்களை துரத்தி பயமுறுத்தி கொல்லாமல் விடாது!

முதல் பாகம் பார்த்ததில் இருந்தே இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்தேன். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என வெளிவந்த சமயத்திலேயே தேடிப்பார்த்தால், வீட்டில் இருந்து மிக
தூரமான திரையரங்குகளில் வெளியானதில் பார்க்கமுடியாது போய்விட்டது.

***


ஸ்மைல் (புன்னகை) எப்படி வேட்டையாடும்? என முதல் பாகத்தில் தெறிக்க தெறிக்கப் பார்த்தோம். இந்த முறை இளம் வசீகரமான ஒரு பாப் பாடகி அதன் கோர கைகளில் சிக்குண்டுவிட்டாள்.

நாயகி ஒரு பாப் பாடகி இளம் வயதில் பிரபலமாகி, விருதுகள் பெற்று.. மேலே மேலே போய்க்கொண்டிருந்த பொழுது, போதைப் பழக்கத்தில் சிக்கி, தன் போதை நண்பனுடன் ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கி, பிழைத்து வருவதே பெரும்பாடாகிவிட்டது. இப்பொழுது இரண்டாவது வாழ்க்கை அவளுக்கு துவங்குகிறது.

அவள் பல மாகாணங்களில் தனது நிகழ்ச்சியை நடத்த ஒரு நீண்ட பயணம் செல்வதற்கான கடுமையான பயிற்சியில் இருக்கிறாள். போதை மருந்தை விட்டொழித்திருந்தாலும், விபத்தினால் அவளுக்குள் இருந்த வலி திடீர் திடீரென தாங்க முடியாததாக வெளி வருகிறது. அதற்கான விசேச மாத்திரையைத் தேடி தனது போதை நண்பனை தேடிப் போகிறாள். அங்கு ஏற்கனவே புன்னகை (Smile) அவனை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. புன்னகைக்கு தொடர்ச்சி தருவதற்காக இவள் வந்ததும், இவள் கண் முன்னாடியே கொடூரமாக தன்னைத் தானே வதைத்து கொன்றுவிடுகிறான்.

அங்கிருந்து புன்னகை இவளைத் துரத்த துவங்குகிறது. ஏற்கனவே பழைய துயரங்களில் மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஒரு இளம் பாடகி இதனால் தவித்துப் போகிறாள். திகிலான காட்சிகள் திடீர் திடீரென வருவதும், இவளை பயமுறுத்துவதும், அதனால் வரும் குழப்பங்களும்… பாவம் துவண்டு போய்விடுகிறாள். ஆனால் புன்னகைக்கு பலவீனமான மனது தானே வேண்டும். அவளை தொடர்ந்து விரட்டுகிறது. ஒரு கட்டத்தில் தனது உயிர் போய்விடும் என தெரிந்து… எப்படி அதனிடமிருந்து தப்பிப்பது என போராடுகிறாள்.

பிறகு என்ன ஆனது என்பது புன்னகையின் கொடூரத்துடன் சொல்லிமுடிக்கிறார்கள்.
***

முதல் பாகத்துக்கு இணையாக, இரண்டாவது பாகமும் வந்திருக்கிறது. முதல் பாகம் பிடித்திருந்தால், இந்தப் பாகமும் பிடிக்கும். பிடிக்கவில்லையென்றால், இதுவும் பிடிக்காது.

இளம் பாடகியாக வரும் Naomi Scott தனது பயத்தால், மிரட்சியால், ஸ்டைலான நடனத்தால் மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். கொஞ்சம் இந்திய சாயலும் இருப்பதால், பிடித்தமானவராகிவிட்டார். ஏற்கனவே அலாதீன் படத்திலும் வேறு சில படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

சில காட்சிகள் பார்க்க முடியாததாக கொடூரமாக இருக்கிறது. ஆகையால் குழந்தைகளை தவிருங்கள். இப்படி படத்தில் பார்க்க காண சகிக்காத காட்சிகளை Final Destination படங்களில் உணர்ந்தேன். அதற்கு பிறகு இந்தப் படம் தான்.

முதல் படத்தை இயக்கிய Parker Finn இந்த படத்தையும் இயக்கி, தயாரித்தும் இருக்கிறார்.

மொத்தப் படமும் நம்மை எங்கும் கவனம் சிதறவிடாமல் கைக்குள்ளேயே நம்மை வைத்திருக்கிறது.

பலகீனமானவர்கள் தவிருங்கள். ஆங்கிலத்தில் பார்த்தேன். இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பிரைமில் வாடகைக்கு இருப்பதாக சொல்கிறார்கள். வேறு வழிகளில் முயலுங்கள்.

February 16, 2025

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!


சென்னை வந்த புதிதில் தோழர் ஜவஹர் அவர்களின் ”தோழமை” குடும்பத்தில் திருமதி சுதா அவர்களும் ஒருவர்.   சந்திப்புகளில் மிகவும் அன்பாக பேசக்கூடியவர்.  மிகவும் அமைதியானவரும் கூட.


பிறகு தோழர்கள் எங்காவது விசேசங்களில் சந்திக்கும் பொழுது, சுதா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் சந்திப்பதுண்டு.  நலம் விசாரித்துக்கொள்வதுண்டு.

 

ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளியில் பி.எப்., இ.எஸ்.ஐ குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரோ, அவர் பள்ளியில் இருந்தோ அழைத்து சந்தேகம் கேட்பார்கள். பலமுறை பதிலளித்திருக்கிறேன்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏதும் அழைப்பு இல்லை.  கடந்த ஓராண்டில் புற்று நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்திருக்கிறது என பிறகு தான் தெரியவந்தது.


இடையில் மருத்துவமனையில்  இருக்கும் பொழுது தகவல் சொன்னார்கள்.   மீண்டுவந்துவிடுவார் என நம்பினோம்.  போய் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இன்று மதியம் இறந்துவிட்டார் என தகவல் சொன்னதும் அதிர்ந்து போனோம்.

 

கொரானா காலத்தில் நிறைய பேரை இறந்தோம். இப்பொழுது புற்று நோய், மாரடைப்பு என அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

 

53 வயது தான் என்பது மனம் ஆறமாட்டேன் என்கிறது.   அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரான திரு. முருகன், மகள் ஜனனிக்கும் எங்களது ஆறுதல்.

 

வில்லிவாக்கத்தில் அவருடைய இல்லத்தில், இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. நானும் துணைவியாரும் அஞ்சலி செலுத்திவந்தோம்.

 

”தோழமை” குடும்ப தோழர்கள், அப்ரோச் தோழர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். அவர் துவக்க காலத்தில் அப்ரோச் மையத்தின் நிர்வாக குழுவில் அவரும் சில ஆண்டுகள் பயணித்திருக்கிறார் என இன்று தான் தெரிந்தது.


சமூகம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து இருக்கிறது.

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!

 

-         சாக்ரடீஸ்


February 15, 2025

Kooman (இரவில் நடமாடுபவன்) 2022 மலையாளம்


நாயகன் உள்ளூரில் சாதாரண போலீசாக இருக்கிறான். உள்ளூர் என்பதால் மக்களால் மதிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில்… நடந்துகொள்கிறான். மேலாதிகாரி சாதகமாக இருக்கும் பொழுது பலன்களை தருகிறது. சாதகமாக இல்லாத பொழுது அவமானத்தைப் பெற்றுத்தருகிறது.


இப்படி அவமானப்படும் பொழுது, அவனுடைய ஈகோ கடுமையாக சிக்கலாகிவிடுகிறது. எதையாவது செய்து குடைச்சல் கொடுக்கவேண்டும் என நினைக்கிறான்.

புதிய அதிகாரி மாறும் பொழுது இவனை அலட்சியப்படுத்துகிறார். கூடுதலாக ஒரு சம்பவத்தால், அவன் காயப்படுகிறான். எப்படி பழிவாங்குவது? அவனே உள்ளூரில் வீடு புகுந்து இரவில் திருட துவங்குகிறான்.

அதில் பயங்கர ரிஸ்க் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மேலிருந்தும், மக்களிடத்தில் இருந்தும் தொடர்ந்து புகார்கள் வந்து, தடுமாறி போகிறார்.

இந்த சமயத்தில் திடீரென ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரித்தால் தொடர் கொலைகளாக இருக்கின்றன. இதற்கு பிறகு யார் இருக்கிறார்கள் என முழு நீளப்படமும் செல்கிறது.
***

கேரளாவில் திருடன் மணியன் பிள்ளை மிகப்பிரபலம். திருட்டு. தொடர் திருட்டு. கைது. சிறை. ஒரு சமயத்தில் தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, தொழில் செய்து, மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்று, கர்நாடகத்தில் அரசியல் கட்சியில் இணைந்து ஒரு பெரும்புள்ளியாக வரவேண்டிய ஆள். கடைசி நேரத்தில் கைதால் எல்லாம் நின்று போனது. மணியன் சொல்ல சொல்ல மனோராமாவின் ஆசிரியர் குழுவில் ஒருவர் எழுத அந்த தொடர் மிகப் பிரபலமானது.

இந்த படத்தின் முதல் பாதி கதை மணியனின் கதை தான். நாயகன் எப்படி திருடுவது என்ற நுணுக்கங்களை அந்த பாத்திரத்திடம் இருந்து கேட்டுத்தான் அறிந்துகொள்வான். படத்தில் அந்த திருடனின் பாத்திரத்தின் பெயர் கூட மணியன் தான்.

திருடுவதும் போதை தான். அதில் ஒரு திரில் இருக்கிறது. எப்படி குடிநோயாளிக்கு குடிக்காமல் போனால், பதட்டம் வருமோ! அதே போல திருடனுக்கும் பதட்டம் வரும். அதே போல ஆளில்லாத வீட்டில் திருடுவதில் என்ன கிக் இருக்கிறது? இருந்தால் தான் கிக்கே! என மணியன் பேசுவதாய் வசனம் வரும்.

இடைவேளை வரை சுவாரசியமாக இருந்த படம், பிறகு தொடர் கொலைகள் என படம் யூடர்ன் போடப்பட்டுவிட்டது. அது அத்தனை ஒட்டவில்லை. இறுதிகாட்சி எல்லாம் செம மொக்கை.

படத்தை மொத்தமாய் தாங்குவது ஆசிப் அலி தான். சில காட்சிகள் வந்தாலும், அந்த திருடனாக வரும் ஜாஃபர் இடுக்கியும் சிறப்பு. திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் தான் இயக்கியிருக்கிறார்.

பிரைமில் இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

February 14, 2025

Gyraa Gyraa (2024) இந்தி வலைத்தொடர் ஒரு விறுவிறுப்பான திரில்லர்


ஒரு சிறுமி தசரா திருவிழாவின் பொழுது, கடத்தப்படுகிறாள். மர்மமான முறையில் கொலையும் செய்யப்படுகிறாள். அந்த வழக்கில் எந்தவொரு துப்பும் கிடைக்காததால் வழக்கு கிடப்பில் போடப்படுகிறது.


திடீரென… ஒரு முடிவை அறிவிக்கிறார்கள். குற்ற வழக்குகளுக்கான கால வரம்பு 15 வருடங்கள் தான். அதற்குள் தீர்க்கப்படவேண்டும். இல்லையென்றால், வழக்கை ஊத்தி மூடவேண்டியது தான்.

குழந்தையை பறிகொடுத்த அந்த அம்மா, நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த அம்மாவிற்கு மொத்த நம்பிக்கையும் போகிறது. இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே இருக்க.. கதை துவங்குகிறது.

நடுத்தர வயது கொண்ட நாயகி போலீசு அதிகாரியாக இருக்கிறார். நாயகன் அவருக்கு கீழே வேலை செய்கிற இளநிலை அதிகாரி. அவன் சிறுவனாக இருந்த பொழுது தான் அவன் கண்முன்னே கடத்தப்பட்டாள். ஆகையால் அந்த வழக்கில் எப்படியாவது கொலை குற்றவாளியை கண்டுபிடித்துவிட வேண்டும் என விசாரிக்கிறான்.

இந்த சமயத்தில், அவனுக்கு ஒரு பழைய வாக்கி டாக்கி மூலம் கடந்த காலத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு போலீசு அதிகாரியோடு தொடர்புகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட நாட்களில்.. அதுவும் இரவு 11.11 (படத்தின் தலைப்பு) அளவில் ஒரு நிமிடம் மட்டுமே பேசமுடிகிறது. இப்படி பேசுவதன் மூலம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆனால் சில குழப்பங்களும் ஏற்படுகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக, இந்த வழக்கிற்கு பிறகு, இன்னொரு பழைய கேசையும் அந்த குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். அதையும் அவர்கள் தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலையாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
***

ஊரில் இருந்து அண்ணன் மகன் வந்து இந்த தொடர் நன்றாக இருக்கிறது என சொன்னான். அதனால் பார்க்க துவங்கினேன்.

துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், இறுதி வரை விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் முன்பாகவும், பின்பாகவும் மாறி, மாறியும் பயணித்திருக்கிறார்கள்.

இந்த 15 வருட விசயம் இந்தியா சார்ந்ததாக தெரியவில்லையே! கொரியாவோடு சம்பந்தப்படுகிறதே என தேடிப் பார்த்தால், 2016ல்ன் ”சிக்னல்” ஒரு சீரிஸ் உண்டு. அதன் தழுவல் தான் என்கிறது விக்கிபீடியா.

சிக்னலை அப்படியே எடுத்து வைக்காமல் இவர்கள் நிறைய மாற்றம் செய்திருக்கிறார்கள். அதனால் தான் முன்பே சிக்னல் பார்த்திருந்திலாலும், நினைவுக்கு வரவேயில்லை.

நாயகனான ராகவ் ஏற்கனவே Kill படத்தில் வில்லனாக கலக்கியிருந்தார். அவரை இந்த தொடரில் நாயகனாக உயர்த்தியிருக்கிறார்கள். நாயகியாக வருபவரான கிருத்திகாவை இப்பொழுது தான் பார்க்கிறேன். கடந்த காலத்தில் வரும் அதிகாரியான தைர்யா, என மூவரும் முக்கியப் பாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். Umesh Bist இயக்கியிருக்கிறார்.

ஜீ5ல் தமிழிலேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு செய்தி. ஆகையால் திரில்லர் ரசிகர்கள் தாராளமாய் பார்க்கலாம்.

February 9, 2025

அப்பாலே போ சாத்தானே!


தொடர்ந்து கைபேசித் திரையை ஸ்க்ரோல் செய்வது நம் சிந்திக்கும் திறனை எப்படி சிதைக்கிறது என்பதை விளக்கி இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.


அதன் சில துளிகள்:

1. டிஜிட்டல் ஊடகம் நீங்கள் எதனை விரும்புகிறீர்களோ அதனைத் தொடர்ந்து உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பொருளில் தொடர் கவனம் செலுத்தாமல், ஆழமாக சிந்திக்காமல் இருக்கச் செய்கிறது.

2. இதனால் நீண்ட ஒரு செய்தித்தாள் கட்டுரையை அல்லது ஆவணத்தைக் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

3. அது மட்டுமல்லாமல் நம் சிந்தனை வறண்டு போய் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, எதையும் முறையாகக் கற்றுக் கொள்வது போன்றவற்றிற்குத் தேவையான சக்தி இல்லாதவர்களாய் உணர்கிறோம்.

4. மூளைக்குள் ஏராளமான தகவல்கள் தொடர்ந்து செல்வதால் உடனடியாகத் தேவைப் படும் தகவலை மட்டுமே அது பதிவு செய்கிறது. ஸ்க்ரோல் செய்து கொண்டே இருப்பதால், தகவல்களைப் பகுத்தாய்ந்து உள்வாங்கும் திறன் குறைந்து அன்றாட வேலைகளைச் செய்யத் தேவையான சக்தி குறைந்து விடுகிறது.

5. சமூக வலைத்தளங்களிலிருந்து கிடைக்கும் பெரும்பாலான தகவல்கள் நீண்டகால நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைக்கத் தகுதியவற்றவை
இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?
இருக்கிறது.

1. உங்கள் தகவல் மற்றும் கேளிக்கைத் தேவைகளுக்கான ஆதாரங்களை (sources) பலதரப்பட்டைவையாக மாற்றுங்கள். நீண்ட மற்றும் குறுகிய உள்ளடக்கம் கொண்ட போட்காஸ்ட், செய்தித்தாள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுங்கள். அவசர உள்ளடக்கத்தினைத் (fast content) தவிர்த்தாலே 10 நாட்களில் உங்கள் மூளையின் நச்சுத்தன்மை (toxicity) குறைந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் கைபேசியை முடிந்தவரை தள்ளிவைக்க வேண்டும்.

2. மூளையிலிருக்கும் டோபாமைனின் அளவு குறைந்தாக் உடனடியாக திருப்தி தேடும் ஆவல் குறையும். மெதுவாக, நிதானமாக வேலை செய்யும் விதமாக உங்கள் மூளையை பழக்கப் படுத்தவும் - அச்சுப் பிரதிகளை படிப்பது, எழுதுவது, குறிப்பு எடுத்துக் கொள்வது போன்ற செயல்கள்.

3. நாம் தொடர்ந்து தகவல் அறிந்து கொள்ளவில்லையெனில் நமக்கு ஏதாவது தெரியாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தினால்தான் நாம் முடிவில்லாமல் scroll செய்கிறோம். இது தேவையில்லாத அச்சம்.

இதிலிருந்து தெரிய வருவது:

அதாவது, அப்பாலே போ சாத்தானே என்று கைபேசியை இயன்ற வரை தள்ளி வையுங்கள்.

இந்தப் பதிவே நீளமானது, அயற்ச்சி தருகிறது என்று நீங்கள் நினைத்தால் மனநல மருத்துவரை அணுகவும். 😊

- விஜயசங்கர் இராமச்சந்திரன்,
பத்திரிக்கையாளர்

இ.எஸ்.ஐ. பி.எப் குறித்த அறிமுக ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


இன்று (06/02/2025) நடைபெற்ற ஜூம் கூட்டத்தில் இ.எஸ்.ஐ, பி.எப் குறித்து ஒரு அறிமுக வகுப்பாக எடுத்தேன். கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்.

இனி அடுத்தடுத்த வகுப்புகளில் விரிவாக விளக்குகிறேன் என தெரிவித்தேன்.
50 பேர் வரை கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் நன்றி.
நன்றி.

February 4, 2025

கல... பிறந்தவர்கள்!


இந்திய வரலாறை நீங்கள் பறவைப் பார்வையில் பார்த்தாலே, பல சமயங்களில் ரத்த ஆறு ஓடுவதைப் பார்க்கமுடியும்.

 

1947ல் பிரிட்டிஷார் கைமாற்றி விட்டு போகும் பொழுதும், இங்கு அப்படி ஆறு ஓடியது.  காந்தி எல்லா இடங்களுக்கு ஓடி, ஓடி அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

 

காரணம்  அதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்து சனாதனாவாதிகள் தான்.   (கொஞ்சம் கோபமாய்,  சரியான வார்த்தைகளை பயன்படுத்தினால், பேஸ்புக் யாரும் பார்க்க முடியாத படி ஆழமான கிணற்றுக்குள் தூக்கி போட்டு அமுக்கி கொன்றுவிடுகிறான். ஆனால், காசு கொடுத்தால்,  எத்தனை மோசமாக எழுதினாலும் அவனே விளம்பரப்படுத்துகிறான். இது தான் பேஸ்புக் லாஜிக்.) அதனால் தான் இவங்களோட அக்கப்போராக தான் முடியும் என  சின்னா அவர்கள் தனியாக பிரித்துக்கொண்டு போனார்.

 

1980ல் பிஜேபியை துவங்கினார்கள்.  பிறகு உ.பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித்தை இடித்தது. தொடர்ந்து ரத்த ஆறு கூடுதலாக ஓடியதும் வரலாறு.    மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்காக எந்த போராட்டமும் இவர்கள் செய்தது கிடையாது.   கோயிலை பரமாரிக்கவேண்டும்.  அர்ச்சர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தவேண்டும்.  பூஜைக்கு அடிக்கும் கயிறு பழசாகி விட்டது.  ஆகையால் புதுசு வாங்கித்தாருங்கள் என்று தான் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தான் சின்ன கும்பலாக போராடியிருக்கிறார்கள். ஒரே ஒரு விதிவிலக்கு. ஒரு போராட்டம் கேஸ் விலையை எதிர்த்து அங்கு சுஷ்மா தெருவில் கோஷம் போட்டார். இங்கு தமிழிசை கோஷம் போட்டார்.  அதை வைத்துக்கொண்டு இன்றைக்கும் கேஸ் விலை உயர்வுக்கு ரிவர்சில் பயன்படுத்துவதால் அந்த போராட்டம் மட்டும் நினைவில் நிற்கிறது.

 

அவர்களின் வழக்கத்தின் படி தான் இன்று மதுரை திரு.குன்றத்தில் ஒன்று கூடி கும்மியடித்திருக்கிறார்கள். (அப்படித்தான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.)


இவர்களிடம் கவனமாய் இருக்கவேண்டும். விருந்தாளிக்கு பிறந்தவனே! என கேவலமாய் திட்டுவார்கள். இவர்கள் கல..த்திற்கு பிறந்தவர்கள் என தாரளமாய் சொல்லலாம். அதையும் அவர்கள் பெருமையாய் எடுத்துக்கொள்வார்கள்.


பாட்ஷா படத்தில் சொல்வது போல புத்தி, உடல் முழுவதிலும் ரத்த வெறி ஊறியவர்கள் இவர்கள்.

குடும்பஸ்தன் (2024)


நாயகன் தான் காதலித்த பெண்ணை கலாட்டாகளுடன் திருமணம் செய்கிறார்.  அளவான சம்பளம். அதையும் விட அதிகமான செலவுகளுடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது,  வேலை செய்யும் இடத்தில் ஒரு சிக்கல் எழ, வேலையை இழக்கிறார்.  துணைவியார் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்துவருகிறார்.

 

எப்பொழுதும் மட்டம் தட்டுகிற அக்கா வசதியான வீட்டுக்காரர், வேலை போன விசயத்தை வீட்டில் சொன்னால் சிக்கலாகும் என கடன் வாங்கி சமாளிக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏகப்பட்ட சிக்கல்களுக்குள் தள்ள.. சமாளித்தாரா என்பதை மீதி படத்தில் சொல்கிறார்கள்.

 

வாழ்க்கை சிக்கல்களை சொல்வதில், பாதி இயல்பாக இருக்கிறது என்பதை திருப்திப்பட்டு கொண்டால், பாதி செயற்கையாக இருப்பது துருத்தலாக நிற்கிறது.  படம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், நாயகன் ஏன் தன் வேலை போன விசயத்தைச் சொல்லலாம் அல்லவா! ஏன் சொல்லவில்லை? என்றாள் என் மகள்.  ஒரு வேலை போவது எல்லாம் இங்கு இயல்பான சமாச்சரமாகி பல வருடங்களாகிவிட்டது.

 

மச்சான்கள் குடைச்சல் இயல்பிலேயே நிறைய இருக்கிறது.  அதை சொல்லியிருக்கலாம். அவர் சீனா செல்கிறார். அதற்கான மெனக்கெடல்களை செய்கிறார் என்பது ஒட்டவில்லை.

 

ஒரு கட்டத்தில் நாயகன் மிகவும் காயப்பட்டு, களைப்படைகிறார்.  நம்மைச் சுற்றி உள்ள பெரும்பாலோர் தோற்கடிக்கப்பட்டு (Loosers) தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்.   இந்த கேள்வியில் இருந்து தான் படம் பார்ப்பவர் யோசிக்கவேண்டியது அவசியமாகிறது.  இந்த நாட்டில் உழைத்துக்கொண்டே இருக்கிற பலரும் ஏன் தோற்றுப்போகிறோம்?  சிலர் ஜெயிக்கிறார்கள் என்றால் எப்படி?

 

மொத்தப் படத்தையும் மணிகண்டன், சோமசுந்தரம் தாங்குகிறார்கள். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

 

நாயகன் பட்ட  பெரும் சிரமங்களை பழைய படங்களை போல சோகமாக எடுக்க முடியாது என சாப்ளின் கையாண்ட முறையில் எடுத்ததாக   சொல்கிறார்கள்.  இதுவே ஒரு முரண் தான்.  மிகைப்படுத்தல் தான் இங்கு பிரச்சனை. இயல்பாக சொல்லலாம்.

 

நீங்கள் பார்த்தீர்களா? என்ன உணர்ந்தீர்கள்?

I want to talk (2024) இந்தி

 


நாயகன் அமெரிக்கவாழ் இந்தியர். பொருட்களை சந்தைப்படுத்தும் தொழிலில் பிசியான ஆளாக இருக்கிறார்.  துணைவியாருடன்  முரண் என்பதால், விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.   அவர்களுடைய குட்டிப்பெண் இருவரிடமும் மாறி மாறி இருந்துகொண்டு வளர்ந்து வருகிறாள்.

 

திடீரென குரல் வளையில் நாயகனுக்கு புற்று நோய் தாக்குகிறது.   அதைச் சோதித்தால், அது வளர்ந்து உடலின் பல பாகங்களை ஆக்கிரமித்திருக்கிறது.  மருத்துவர்கள் இன்னும் 90 நாட்கள் இருந்தால் அதிசயம் என்கிறார்கள்.  முதலில் அதிர்ந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராகிறான்.

 

ஒன்றல்ல, இரண்டல்ல அடுத்தடுத்து 20 அறுவை சிகிச்சைகள்.  குட்டிப்பெண் என்பதால், மகளிடம் மறைக்கிறான்.  பிழைத்தானா, மாண்டானா என்பதை முழு நீள படமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***

உண்மைக் கதை என்பதால், ராவாக எடுத்திருக்கிறார்கள்.  ஆவணப்படம் போல இருக்கிறது. எடுத்தவர் அமெரிக்க வாழ் இந்தியரோ என நினைத்தால், சுஜித் சர்கார்.  ஏற்கனவே விக்கி டோனர், பிங் என சில படங்கள் இயக்கியவர், தயாரித்தவரும் கூட.

 

வாழ்வில் ஒரு அறுவை சிகிச்சை என்றாலே கலகலத்துப் போகிறோம்.  உடலின் சில பாகங்கள் புற்று அரித்து தின்ன பிறகும், ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால், அதுவும் நிஜ கதை என்றால், ஆச்சர்யத்துக்கு ஆச்சர்யமாயிருக்கிறது.

 

எனக்கு அபிஷேக் பச்சன் நடிப்பு ஏனோ ஒட்டுவதில்லை. இந்தப் படத்தில் ஏனோ கொஞ்சம் ஒட்டினார்.  அத்தனை அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அதே உடல், அதே தெம்புடன் என காட்டுகிற பொழுது கொஞ்சம் பிசிறு அடிக்கிறது.  (அதற்காக நிஜமாகவே உடல் இளைக்க முடியுமா என்ன!)  

நாயகனைப் பார்த்துக்கொள்ளும் அந்த பெண் நர்ஸ் அவன் உயிரை மாய்த்துக்கொள்ள போகும் பொழுது, தன் பேச்சால் காப்பாற்றுகிறாள். பின்னாளில் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொழுது, மனிதர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் என தோன்றுகிறது.

 

நாயகனின் மகள் நல்ல தேர்வு.  சிறு வயது பெண் தனது அப்பாவிற்கு புரிய வைப்பதற்காக, வட்டம் வட்டமாக வரைந்து, அம்மா முதல் வட்டம், நண்பர்கள், ஆசிரியர்கள் என சுட்டி, எட்டாவது வட்டத்தில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என சொல்லும் பொழுது… எனது மகளிடம் நான் எத்தனையாவது  வட்டத்தில் என கேட்க தோன்றுகிறது.   பிறகு இன்னும் கொஞ்சம் சரி நெருங்கிக்கொள்ளலாம். பிறகு கேட்கலாம் என தோன்றுகிறது.

 

நாயகனுக்கும், அவனுடைய துணைவியாருக்கும் என்ன பிரச்சனை என்பதை எங்குமே காட்டவில்லை.   இவனின் கதை என கறாராக முடிவு செய்துவிட்டார்கள்.  

February 2, 2025

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?


ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 

வணக்கம். விமர்சன உரை அல்ல! உறுப்பினர்கள் சார்பாக என் உரை.

 

தேவையில் இருந்து தான் ஒன்று உருவாகிறது.  இந்த புத்தகத்தின் தேவை?

 

நஜ்முதீன் அய்யா – ஜி.எஸ்.டி  எளிமைப்படுத்துவதற்காக வந்தது என சொல்லிக்கொண்டாலும், இடியாப்பத்தை போல சிக்கலானது.  இந்த சூழ்நிலையில் தான் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.

 

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 


ஹாரி பார்ட்டர் எட்டு பாகங்கள். அதை படமாகவும் எடுத்தார்கள். அதில் வரும் பிரதான பாத்திரம் வோல்ட் மார்ட்.  தன் உயிரை பாதுகாக்கும் விதமாக ஆறு இடங்களில் ஒளித்து வைத்திருப்பார்.

 

ஒரு புத்தகம் என சாதாரண நிலையில் பார்க்கிறோம்.  புத்தக உருவாக்கமும் பல படிநிலைகள் கொண்டது. அது உருவாகும் பாதை கடினமானது.

 

சட்ட அறிவு அவசியம்.  அதை புரிந்துகொள்வது மிக அவசியம். ஒன்றை காட்டும் பொழுது மூன்று பேர் மூன்று விதமான கருத்துகளை மெல்லிய மாற்றத்துடன் சொல்வார்கள்.  அதனால் தான் தனது உரையில் இது என்னுடைய புரிதல் என்பதை வலியுறுத்துவார்கள்.

 

ஆங்கில அறிவு அவசியம்.   அதுவும் சட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வது இன்னும் சிக்கலானது.  புரிவது போல இருக்கும். குழப்பும். தெளிவுபெற கற்றல் அவசியம்.

 

தமிழ் தெரிந்திருக்கவேண்டும்.  அதுவும் எழுதுவதற்கென ஒரு தொடர் வாசிப்பு இருக்கவேண்டும்.  அது போல தமிழ் தெரிந்த எல்லோராலும் எழுதிவிடமுடியாது.   தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் பயிற்சி வேண்டும்.  

 

ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதும் எளிதல்ல.  அதன் சாரம் குறையாமல், செய்வது அத்தனை எளிதல்ல.  பல பிரபலமான புத்தகங்களை தமிழில் மோசமாக மொழிபெயர்த்து அதன் சாரத்தை இழக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஒரு விசயம் நடைமுறையில் தான் உரசிப் பார்க்கப்படும்.  சாருக்கு பல ஆண்டுகள் ஒரு வரி ஆலோசகராய் வேலை செய்த அனுபவமும்,  பல கூட்டங்களில் ஆசிரியராய் வகுப்பு எடுத்த அனுபவமும், பலர் எழுப்புகிற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிய அனுபவம் உண்டு.

 

மாதம் மாதம் என்ன வேலை இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு கட்டுரை தருவதற்கு தன்னளவில் இராணுவ ஒழுங்கு இருக்கவேண்டும். பத்திரிக்கையாளர் சமஸ் சொல்லிய அனுபவம்.


 

ஏன் எழுதவேண்டும்? என்பதற்கு ஒரு உந்துதல் அவசியம்.   முதல் பட்டதாரியாக எழுந்து நிற்கும், மொத்த குடும்பத்தையும் தாங்க தன் தொழிலை நம்பும், ஆங்கில பரிச்சயம் நிறைய இல்லாத  ஒரு தலைமுறைக்கு தமிழில் தந்து உதவவேண்டும் என்ற மன உந்துதல் வேண்டும்.

 

ஒரு புத்தக உருவாக்கத்தில் நம்முடைய பொது புரிதல் என்பது நாம் எழுதியதை கொடுத்துவிடுவோம். பதிப்பகம் அச்சிடும். விற்கும். எழுதியவருக்கு ராயல்டி  தரும்.  இந்தப் புத்தகம் அப்படியில்லை.   சார் தான் பணம் கொடுத்திருக்கிறார். அதை அச்சிட்டு, அதை மக்களிடம் புத்தக சந்தை மூலம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறார்கள்.

 

மாறிவரும் சமூக சூழ்நிலையால், வாசிப்பது குறைந்துவிட்டது. புத்தகம் விற்பது குறைந்துவிட்டது என்ற சமூக நடைமுறை தெரிந்தாலும், கைக்காசை போட்டு புத்தகம் அடித்து தருவோம் என்ற  பெருந்தன்மை வேண்டும். 

 

ஐம்பது பக்கங்கள் கூட புதிதாய் எழுதிவிடலாம். தப்பில்லாமல் தரவேண்டும் என தப்பும், தவறுமாய் (First Copy) தட்டச்சு செய்து  தருவதை… நாட்கள் குறைவாக இருந்ததால், பல நாட்கள் இரவும், பகலும் சரிப்பார்க்கும் பொறுமையும், அதை பிழையில்லாமல்… நேர்த்தியாய் தரவேண்டும் என்ற அடம் வேண்டும்.

 


வெளியிடும் நாள் குறித்த பிறகு , புத்தகத்தை வரிக்கு வரி பொறுமையாக படித்து சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கி தருவதற்கு கோவை பெருமாள் அவர்களைப் போல ஒருவருடைய அருமையான நட்பு வேண்டும்.

 

அதே போல தமிழ் சூழலில் எழுதியவருக்கு பணம் எல்லாம் வராது.  அந்தப் புத்தகத்தின் அச்சுக் கூலியை தான் பணம் தருகிறோம் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஆக இப்படி  பல அம்சங்களை கடந்து தான் நம் கைக்கு ஒரு புத்தகம் வருகிறது.

 


ஆகையால், நமக்காக எழுதியவருக்கு, நமக்கு வழிகாட்டுபவருக்கு; நாளைய விழாவில் நன்றி தெரிவிப்போம். அவருக்கு நம்முடைய அன்பு வாழ்த்துக்களையும் தெரிவிப்போம். அவர் தொடர்ந்து நமக்காக எழுதவேண்டும்.  அதையும் புத்தகங்களாக நமக்கு தரவேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.