> குருத்து: 2025

June 26, 2025

பத்துக் கட்டளைகள்

 எனக்கு நானே விதித்துக் கொண்ட பத்துக் கட்டளைகள்! 


1) பசிக்காமல் அமிர்தமே ஆனாலும் உண்ணாதே. தினமும் பத்து நிமிடமாவது கையைக் காலை ஆட்டு. 


2) கழிப்பறையிலாவது சுவாசத்தைக் கவனி. 


3) எதிர்மறைகளில் இருந்து தப்பித்து விலகி, நெருப்பு வளையமிட்டு, அதற்கு நடுவே ஒளிந்து கொள். 


4) கேட்பது, பார்ப்பது, படிப்பது மூன்றிற்கும் சம அளவு முக்கியத்துவம் தந்து விடு. 


5) எதிலுமே மிதமான போதைக்கு உன்னைப் பழக்கு. 


6) உறவுகளிடம் காது என்கிற உறுப்பை அதிகம் பயன்படுத்து. 


7) யாராக இருப்பினும் தேவைக்கு அதிகமாக எதையும் சொல்லாதே. தேவைக்கு அதிகமான எதையும் கேட்காதே. 


8) நன்றாகப் பழக்கமான உச்சி என்றாலும் சிறு பிடிமானமாவது இல்லாமல் நிற்காதே. 


9) நீராய் உன்னைப் பாவனை செய்து கொள். வாய்க்கிற எந்தப் பாத்திரத்திலும் நிறைவாய் நிறைந்து கொள். 


10) நிதமும் இப்படி எதையாவது, மாடு எந்நேரமும், அசை போடுகிற மாதிரி எண்ணிக் கொண்டிருக்காமல், குறைந்தபட்சம் ஒரு தேநீரையாவது ரசித்துக் குடி.


- சரவணன் சந்திரன், எழுத்தாளர்

June 21, 2025

யோகா : கழுத்து வலி போயே போச்சு!


2014ல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் நாளை ஐக்கியநாடுகள் சபை சர்வதேச யோகா தினமாக கொண்டாட அறிவித்தது.  இதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்ததாக பதிவு செய்கிறார்கள்.

 

ஜூன் 21 ஏன் என்றால்… கோடை காலத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள். இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்டது. ஆகையால் இந்த நாள் நல்ல நாள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நாடு முழுவதும் யோகாவிற்கான சிறப்பு முகாம்களை அறிவிக்கப்பட்டு செய்திருக்கிறார்கள். ஆந்திராவின் ஒரு கடற்கரையில் முதல்வரும், இந்திய பிரதமரும் மூன்று லட்சம் மக்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

விவரம் தெரிந்த நாள் முதல், தினம் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துவந்திருக்கிறேன். சில காலம் ஓடியிருக்கிறேன். சில காலம் ஜிம்முக்கு போயிருக்கிறேன்.  ஒரு கட்டத்தில் யோகாவிடம் வந்து சேர்ந்தேன்.

 

ஒவ்வாமை பிரச்சனை உடலில் சில தொந்தரவுகளை, மூச்சு பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு இருந்தது. அதைச் சமாளிக்கவும் யோக ஆசனங்களும், மூச்சு பயிற்சிகளும் பெரிதாய் உதவியது.

 

கொரானாவிற்கு முந்தைய காலத்தில், விடிகாலை 5.30 முதல் 6.30 வரை வாரத்தில் ஐந்து நாட்கள்  அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எங்கள் பகுதியில் யோகா மையத்திற்கு தொடர்ச்சியாய் சென்று வந்தேன்.  அந்த அறையில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 15 பேர் வரை செய்யலாம். சில மாதங்களில் இடம் இல்லாமலும் போகிற அளவுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். ஒரு சில மாதங்களில் நான் மட்டுமே சென்று வருவதும் உண்டு.

 


யோகா செய்வது நாள் முழுவதும் உடலையும் சிந்தனையையும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.  சர்க்கரை, ரத்த அழுத்தம் என சிரமப்படுவர்களுக்கு அதை கட்டுக்குள் வைக்க உதவும். யோகா தரும் பலன்களை அனுபவித்தவர்கள் தொடர்ச்சியாய் வந்து கொண்டே இருந்தார்கள்.

 

சமீபத்தில் கூட பின்னங்கழுத்தில் வலி கடுமையாக இருந்தது. வலியை கூட பொறுத்துக்கொள்ளலாம். அதோடு தலைச்சுற்றலும் சேர்ந்து கொண்டது பெரிய பிரச்சனையாகிவிட்டது. மருத்துவமனை சென்றால், தலைச்சுற்றலை கட்டுப்படுத்த ஒரு மாத்திரையும், வலியை மறக்க ஒரு மாத்திரையும் தந்து அனுப்பிவிட்டார்கள்.

 

அதன் பிற்கு, சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு இயக்கும் மருத்துவமனையில் ஒரு பிரிவு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு இயங்குகிறது. உடம்பில் என்ன பிரச்சனையோ, அதற்கேற்ற யோக ஆசனங்களை கற்றுத்தருவார்கள். அக்குபஞ்சர் சிகிச்சை, எண்ணைய் தடவி விடுவது என அங்கு கொடுக்கப்படும் எல்லா சிகிச்சையும் மருந்தில்லா மருத்துவமாக இருப்பது தான் அதன் சிறப்பு.  இரண்டு மாதங்கள் தொடர்ந்து போனதில் கழுத்து வலி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 

யோக ஆசனங்கள் பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். அதை இன்னும் அறிவியல்பூர்வமாக மாற்ற வேண்டும்.

 

இன்னொரு விசயம். யோக ஆசனங்கள் என்றாலே பொதுவெளியில் சிரமமான ஆசனங்களை மட்டுமே சாசகமாக செய்துகாட்டுகிறார்கள். அது அபத்தம் என்பேன். பொதுமக்களை குறிப்பாக வயதானவர்களுக்கு மனதளவில் ஒவ்வாமையை உருவாக்கிவிடும். யோகாவில் எளிய ஆசனங்கள் பல நூறு கணக்கில் உண்டு. எல்லா வயதினரும் செய்ய முடியும் என்பது முக்கியமானது.

 

இந்தியாவில் பா.ஜ.க பல ஆண்டுகளாக தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் யோகாவை இணைத்திருக்கிறார்கள். பல பகுதிகளில் யோகாவை இலவசமாக சொல்லித்தருகிறேன் என தங்கள் இந்துத்துவ கருத்துக்களை பரப்புவதற்காக அதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் பா.ஜ.க பிடிக்காத பலருக்கும் யோகா மீதான ஒருவித ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. தினசரி நாம் செய்யும் எல்லா வித பயிற்சிகளையும் விட யோகா பல பலன்களை தரக்கூடியது. ஆகையால் அவர்களை ஒதுக்கிவிட்டு, யோகாவை கற்று பலன்களை அனுபவிப்போம். மக்கள் மத்தியில் பரப்புவோம்.

June 19, 2025

எழுதத் துவங்கு!

 சிறந்த எழுத்தாளனின் நல்ல பழக்கங்கள்!

எர்னெஸ்ட் ஹெமிங்வே

https://thaaii.com/2025/06/16/ernest-hemingway-thoughts-of-writers/


படித்ததில் ரசித்தது:



1 எழுதத் தொடங்கு, அசல் வாக்கியங்கள் சிலவற்றையாவது எழுது.


2 தினந்தோறும் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக காலையில் ஒரு மணி நேரமாவது எழுது.


3 எழுதாது இருக்கும்போது கதைபற்றி யோசிக்காதே. எழுத உட்காரும்போதுதான் உன் கதை உருவாக வேண்டும்.


4 ஒவ்வொரு நாளும் முதலில் எழுதியதை ஒரு முறையாவது படி.


5 உணர்ச்சியை விவரிக்காதே. அதை நிகழ்த்து. வாசகன் உன் உணர்ச்சியை உணரச் செய்.


6 பென்சிலைப் பயன்படுத்து.


7 சுருக்கமாக எழுது. நாவல் என்றால் வளவள என்று எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை.


நன்றி: இந்திரன் முகநூல் பதிவு


#Ernest_Hemingway #Author #writing #reading #story #எர்னெஸ்ட்_ஹெமிங்வே  #எழுத்தாளர் #எழுத்து #வாசிப்பு #கதை #நாவல்

June 17, 2025

புதுவீடும், மகிழ்ச்சியும்!



எங்களது வரி ஆலோசகர்கள் குழுவில் திருமதி செல்வராணியும் ஒருவர். அவர் செங்குன்றம் அருகே புதிதாய் வீடு கட்டியுள்ளதாகவும், வாருங்கள் எனவும் அன்புடன் அழைத்தார்.


இலக்கியாவோடு போயிருந்தேன். வீடு பெரிதாகவும், சூரிய வெளிச்சம் நன்றாக படும்படியும், காற்றோட்டமாகவும் இருந்தது. முகப்பேரில் வசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இப்படி ஒரு வீடு எத்தனை மகிழ்ச்சி தரும் என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாதது.

இங்கு எல்லோருக்கும் வீடு வேண்டும். அது ஒரு கனவாகவே பலருக்கும் இருக்கிறது. யாரேனும் வீடு கட்டினால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெரிய வீடு என சொல்லும்பொழுது, திருமதி செல்வராணியின் கணவர் வங்கி மேலாளர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. இப்படி பெரிய வீடு அவர் கட்டினால் தான்… வாடிக்கையாளர்களாகிய நம்மை போன்றவர்கள் கடன் பெற்று வீடு கட்டமுடியும். 🙂

வாழ்த்தும் பொழுது… சொன்னார். “உங்களுடைய பேஸ்புக் பக்கத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறீர்கள்” என வாழ்த்து தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகள் பேஸ்புக்கில் எழுதி வந்ததில்… நேரடி அறிமுகம் இல்லாத ஒருவர் இப்படி சொன்னதில் மகிழ்ச்சி.

June 15, 2025

நிதர்சனம்


எப்பொழுதும்

செய்வதற்கு
சிறிய
நடுத்தர
பெரிய
நூறு
முக்கிய வேலைகள்
காத்திருக்கின்றன.

"இந்த வேலையை உடனே செய்" என
மண்டைக்குள் அசரீரி ஒலிக்கிறது.

எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு..

பிடித்தப்படம் ஒன்றைப் பார்க்கிறேன்.

பிடித்தப் புத்தகம்
ஒன்றை வாசிக்கிறேன்.

சில சமயங்களில்
அபத்தமாய் ரீல்ஸ்
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

June 10, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) - புதிய மாற்றங்கள் - 17வது அத்தியாயம்




நிறுவனம் புதிய பணியாளரை இ.பி.எப் தளத்தில் பதிவு செய்ய நிறுவன முதலாளியின் DSC  பதிவு செய்வது இப்பொழுது முன்நிபந்தனை

 

தொழிலாளர்களின் அடிப்படை விசயங்களான ஆதார், வங்கி விவரம், பான் கார்டு (KYC) குறித்த விசயங்களை சரிப்பார்த்து, டிஜிட்டல் கீ கொண்டு ஒப்புதல் தரவேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.  ஆகையால் ஒரு டிஜிட்டல் கீ மிகவும் அவசியம்.  அதை பல நிறுவனங்கள் பதிவு செய்து வைத்துக்கொண்டு, உரிய நேரத்தில் தொழிலாளர்களின் ஆவணங்களுக்கு ஒப்புதல் தரவேண்டியது அவசியம்.   அப்படி ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதால், பல தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து, இ.பி.எப். நிதியை, ஓய்வூதியத்தைப் பெற முடியாமல் தடுமாறுகிறார்கள். நிறைய தாமதம் ஆகிறது. ஆகையால், நிர்வாகத்தை பதிவு செய்யவைக்கவேண்டும் என்பதால்,  ஒரு தொழிலாளியை புதிதாக தளத்தில் பதிவு செய்யவேண்டுமென்றால், இப்பொழுது டிஜிட்டல் கீ பதிவு செய்வதை முன்நிபந்தனையாக மாற்றிவிட்டது.  கடந்த மாதம் இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் சிலரும் கேட்டதால் அதை விளக்கமாக பார்க்கலாம்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் (Digital Signature Certificate)

 


நிர்வாகத்தின் பொறுப்பாளராக (Authorised Signatory)  யாரை பிஎப்பை பதிவு செய்யும் பொழுது கொடுத்தோமோ, அவருடைய பான் எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், அவருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து டிஜிட்டல் கீ பதிந்து (Register) தருகிறவர்களிடம் கொடுத்தால், உடனே பதிவு செய்து அடுத்த நாளே தந்துவிடுகிறார்கள்.

 

டிஜிட்டல் கையெப்ப சான்றிதழை பி.எப். தளத்தில் பதிவு செய்வது எப்படி?

 

டிஜிட்டல் கீயை பி.எப். தளத்தில் பதிவதற்கு.. நமது கணிப்பொறியில் சில அம்சங்களை இணையத்தில் இருந்து தரவிறக்கிகொள்ளவேண்டும்.  பையர்பாக்ஸ் (Firefox) குறிப்பிட்ட வெர்சன், ஜாவா (Java updated version), பி.எப் தளத்தில் DSC Signer Utility என ஒரு மென்பொருள் தருகிறார்கள். இதையெல்லாம் நமது கணிப்பொறியில் சரியாக (Installation) பொருத்திக்கொள்ளவேண்டும்.  இந்த வேலையை எப்படி செய்வது என்பதை இந்த சுட்டியில் உள்ள காணொளியைப் பாருங்கள்.  அவர் சொன்னதை கற்றுக்கொண்டு செய்யலாம். 

https://www.youtube.com/watch?v=4Pd_nbXkBOI

 

கூடுதலாக, டிஜிட்டல் கீ சம்பந்தமாக ஏதேனும் தொழில்நுட்ப உதவி வேண்டுமென்றால், தொழில்நுட்ப உதவி செய்வதாக பி.எப். தளத்தில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள். 

Screen Reader Access – Technical Help – 18001 18005 (Toll free) Timing : 9.15 AM to 5.45 PM

 

பிறகு பி.எப் தளத்தில் உள்ளே நுழைந்ததும், Establishment என்ற தலைப்பின் கீழ் வரும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் DSC/ESign என்ற இடத்தை கிளிக் செய்யவேண்டும்.   அந்த பகுதியில் நாம் நிர்வாகத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயரை, டிஜிட்டல் சான்றிதழில் கொடுக்கப்பட்ட பெயரை சரியாக எழுதவேண்டும். அவர் என்ன பொறுப்பு Proprietor/Partner/Managing Director  என்பதை குறிப்பிடவேண்டும். மொபைல் எண் கொடுக்கவேண்டும்.   அதற்கு பிறகு Register DSC என்பதை கிளிக் செய்து, மேலே சொன்னதன் அடிப்படையில் டிஜிட்டல் கீ கொண்டு பதிந்துவிடலாம்.

 

அதற்கு பிறகு, Request letter என்ற பிடிஎப் பைல் ஒன்று பி.எப் தளமே உருவாக்கித்தரும்.  அதை தரவிறக்கி, (Download) கொள்ளவேண்டும்.   அந்த கடிதத்தை நிறுவனத்தின் லெட்டர் பேடில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவேண்டும்.  அந்த கடிதத்தில், நிறுவனத்தின் பொறுப்பாளர் தனிநபர் என்றால், அவரே மூன்று முறை (Specimen Signature) கையெழுத்திட்டு, கீழே நிறுவனத்தின் முத்திரையை (For seal) வைத்து, அதிலும் கையெழுத்திட்டு, நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பி.எப் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.  கூட்டாண்மை (Partnership firm) நிறுவனமாக இருந்தால், பொறுப்பானவர் மூன்று முறை கையெப்பமிட்டு, முத்திரை வைத்து, இன்னொரு பங்குதாரர் (Partner) கையெழுத்திடவேண்டும்.

 

எங்கிருந்து அந்த தரவிறக்கி கொண்டோமோ, அங்கேயே தாக்கல் (upload) செய்யவேண்டும். நிறுவனத்தின் கடிதத்தை பெற்றுக்கொண்டு, அதில் உள்ள விவரங்களை சரிப்பார்த்து நிருவனத்திற்கென இருக்கும் பி.எப் அலுவலகம் ஒப்புதல் (Approve) தந்ததும் பி.எப் தளத்தில் அந்த குறிப்பிட்ட (DSC - Signature status) பகுதியில் ”Active” எனகாட்டும். அப்படி காட்டினால், முறையாக பதிவு செய்துவிட்டோம் என புரிந்துகொள்ளலாம்.  கடிதம் கிடைக்கப்பெற்று அவர்கள் ஒப்புதல் கொடுக்க அதிகப்பட்சம் ஏழுநாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை நிறுவனம் அனுப்பிய கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவர்கள் ஒப்புதல் கொடுக்கமாட்டார்கள். அதை நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தமாட்டார்கள்.   நாமாக புரிந்துகொண்டு அந்த பிழை என்னவென்று கண்டுபிடித்து,  சரி செய்து மீண்டும் தாக்கல் செய்த பிறகே ஒப்புதல் தருவார்கள். 

 

பி.எப். நிதியில் இருந்து முன்பணம் (Advance) பெறும் வசதி  - புதிய விதிகள்

 


கொரானா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு, பி.எப் கணக்கில் கடன் வாங்குவது என்பது திருமணம், மருத்துவ செலவுகள், வீடு கட்டுதல், வீட்டை புதுப்பித்தல், கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக என வரையறுக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதற்குரிய சான்று ஆவணங்களை சமர்ப்பிக்கும் பொழுது தான் பி.எப். கடன் வழங்கிக்கொண்டிருந்தது.

 

கொரானா பெருந்தொற்றால்  2020ல் அரசு ஊரடங்கு அறிவித்த பொழுது,  பல தொழிற்சாலைகள் முடங்கின. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.   நெருக்கடியான வாழ்நிலையை கணக்கில் கொண்டு,  எந்த ஆவணமும் இல்லாமல், தொழிலாளர்கள் அவர்கள் செலுத்திய பணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.  அவர்களுடைய பி.எப். நிதி இருப்பில் அந்த பணம் கழித்துக்கொள்ளப்படும்.  அதைத் திருப்பி செலுத்தவேண்டியதில்லை எனவும் அறிவித்தது.

 

கொரானா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையும் கொடூரமாக மக்களை தாக்கியது.  ஆகையால், முன்பணம் வாங்கும் காலத்தையும் நீட்டித்து அறிவித்தது.  நான்கு ஆண்டு காலம் ஆகிவிட்டபடியால், இப்பொழுது ஆவணங்களின்றி முன்பணம் தருவதை நிறுத்துவதாக அறிவித்தது..

இப்பொழுது முன்பணம் பெறுவது குறித்த புதிய நிபந்தனைகளையும், வழிமுறைகளையும் பி.எப். அறிவித்துள்ளது.


பி.எப். உறுப்பினருக்கான தளத்தில்  Online service என்ற பகுதியில் கிளிக் செய்தால், முதலில் வருவது Claim என காண்பிக்கும்.  அதில் முன்பணம் (Advance)  என்ற (Form 31)   விண்ணப்பத்தை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.    அதில் நாம் வேலை செய்த நிறுவனங்களை வரிசையாக காட்டும்.  பொதுவாக முந்தைய கணக்குகளை இப்பொழுதோ அல்லது கடைசியாக வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிக்கொள்வது நல்லது.   இல்லையெனில், மூன்று நிறுவனங்களில் வேலை செய்திருந்தால், மூன்று கணக்குகளுமே தனித்தனியாக நிற்கும். அதனால் நாம் நினைக்கும் முன்பணம் பெறுவதற்கான தகுதிகளை  அடைய முடியாது போகும்.

 

பிறகு என்ன காரணங்களுக்காக முன்பணம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்.  அதில் வரிசையாக இப்படி காண்பிக்கும்.

 

இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை.  (Non receipt of wages > 2 months)

இயற்கை பேரிடர் (Natural Calamites)

உடல்நலக்குறைவு (Illness)

மின்சாரம் துண்டிப்பு (Power Cut)

மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வாங்குதல் (Purchase of Handicap Equipment)

வீடு வாங்குவது/கட்டுவது/ மராமத்து செய்வது

 

இப்படி இன்னும் சில அம்சங்களும் இருக்கின்றன.    இதில் ஒவ்வொரு தலைப்பிற்கும் உரிய நிபந்தனைகள் இருக்கின்றன. சில ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.  அதே போல எவ்வளவு நிதி கொடுக்கப்படும் என்பதற்கும், பட்டியலில் உள்ள அம்சங்களுக்கு தகுந்தவாறு நிபந்தனை இருக்கிறது.  பி.எப். பணம் மொத்தத்தையும் எடுத்துவிட முடியாது.

 உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லை என்றால், நாம் கடைசியாக வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேலையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியேறியதை (Exit) பதிந்திருக்கவேண்டும்.


சம்பந்தப்பட்ட  பணியாளருக்கோ, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ உடல்நலக்குறைவு என்றால்… நிறுனத்தின் பொறுப்பாளரும் , மருத்துவரும் சான்றிதழ் சி வழங்கவேண்டும்.


வீடு வாங்குவது என்றால்…ஒரு பிரிவு விதி A  சொல்வது என்னவென்றால் வீட்டை யார் தொழிலாளிக்கு விற்பவர் என்கிற விவரத்தை கொடுக்கவேண்டும். பணம் நமக்கு வராமல், சம்பந்தப்பட்டவருக்கே சென்றுவிடும். வீடு வாங்குவது குறித்து A துவங்கி F வரைக்கும் நிறைய வழிகாட்டுதல்கள் தந்திருக்கிறார்கள். அதை முழுவதும் படித்த பிறகு விண்ணப்பியுங்கள்.


ஆகையால் விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் கவனமாக படித்து முன்பணத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும். இல்லையெனில், விண்ணப்பத்தை பி.எப். ஏற்காது. திருப்பி (Reject) அனுப்பிவிடும். கவனமாய் இருங்கள்.


பி.எப் முன்பணம் குறித்த விதிகளும், வழிகாட்டுதல்களும் (INSTRUCTIONS AND GUIDELINES FOR THE ADVANCES TO BE CLAIMED THROUGH FORM 31) இணையத்தில் மூன்று பக்கங்களில் PDF பைலாக எளிதாக கிடைக்கின்றன.  இல்லையெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அனுப்பி உதவுகிறேன்.


பி.எப். நிதியை பெறுவதில் தாமதமும், சரி செய்வதற்கான மாற்றங்களும்!


கடந்த மாதம் ஒரு தொழிலாளி “அழைப்பதற்கு ஒரு பெயரும்,  சான்றிதழில் இன்னொரு பெயரும் பல ஆண்டுகளாக  எனக்கு இருக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன்பு  நான் பணிபுரிந்த நிறுவனத்தில் அழைப்பதற்கான பெயரை பி.எப். பில் பதிந்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகள் பணம் செலுத்திவிட்டார்கள். இப்பொழுது பணி ஓய்வும் பெற்றுவிட்டேன். பி.எப் பணத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது .. என்னுடைய சான்றிதழ் பெயர் முரண்படுகிறது என பணம் தர மறுக்கிறார்கள்” என்றார்.  விசாரித்த பொழுது, அதற்கு நிர்வனத்தின் தரப்பில் இருந்து ஒரு விளக்க கடிதமும், ஒப்புதல் கடிதமும் கேட்கிறார்கள் என்றார்.  “உங்களை தனிப்பட்ட முறையில் பி.எப். அலுவலகத்திற்கு தெரியாது.   பணம் சம்பந்தப்பட்ட விசயம் என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.  ஆகையால் கேட்கும் ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுங்கள். நிதியை விடுவித்துவிடுவார்கள்” என தெரிவித்தேன்.


பிப்ரவரி 2024ல், 69 வயதான ஓய்வூதியதாரர் ஒருவர் ஒன்பது ஆண்டுகளாக தனது வருங்கால வைப்பு நிதி (PF) சலுகைகளை திரும்பப் பெற முடியாததால் கொச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி (PF) அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். பலமுறை சென்றும்,  கேட்கிற ஆவணங்களையும் சமர்ப்பித்த போதிலும், 'தொழில்நுட்ப' சிக்கல்கள் காரணமாக அவரது நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.


முழுக்க தாள்களில் இருந்து பி.எப் நடைமுறை கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் வடிவத்திற்கு  அனைத்தையும் மாற்றிக்கொண்டிருக்கிறது. சந்தாதாரர்களும் அதைப் புரிந்துகொண்டு மாற முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இந்த மாற்றத்தினை புரிந்துகொள்ள முடியாத, அவர்கள் கேட்கும் ஆவணங்களை நடைமுறையில் தரமுடியாத தொழிலாளர்கள்  புலம்பிக்கொண்டே பி.எப் அலுவலகத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். பி.எப். அலுவலகத்தில் அலைமோதும் கூட்டமே அதற்கு சாட்சி. 


இந்தியா போன்ற படிப்பறிவில் ஏற்றத்தாழ்வுள்ள நாட்டில்,  இந்த மாற்றம் இன்னும் வேகமாக நடைபெறவேண்டும் என்பது அவசியம் என்பதை தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கையாக முன்வைப்போம். கூடுதலாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், முழுக்க விதிகளைக் காரணம் காட்டி செலுத்திய நிதியை மறுக்கவும் கூடாது. மனிதாபிமானத்துடனும் அணுகவேண்டும்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

June 5, 2025

Monster (2023) ஜப்பான்

 


ஒற்றை பெற்றோரான தாய் பள்ளி செல்லும் தன் பத்து வயது பையனிடம் சமீபத்தில் சில விநோதமான செய்கைகளைப் பார்த்து பதட்டமாகிறாள். பள்ளியில் ஏதும் சிக்கல் இருக்குமோ என சந்தேகித்து… போய் விசாரித்தால் சந்தேகம் ”உறுதியாகும்படி”யான மனநிலைக்கு நிர்வாகத்தினர் தள்ளுகிறார்கள்.  என்ன செய்வது என அறியாமல் குழப்பமடைகிறாள். அவளுடன் நாமும் குழப்பமடைகிறோம்.

 

இதுவரை நடந்த விசயங்கள் எல்லாம் இப்பொழுது மகனின் கோணத்தில் படம் விரிகிறது. ஓ! விசயம் அப்படியா போகிறது என புரிந்துகொள்கிறோம்.

 

அந்த பையனின் வகுப்பு ஆசிரியர் விசயங்கள் ஒவ்வொன்றாக காட்சிகளை சொல்லும் பொழுது….   ஓ! பிரச்சனை இப்படி போகிறதா! என ஆச்சரியப்படுகிறோம்.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

****


படத்தின் பெயர் என்ன வகையான படம் என பார்வையாளனை கொஞ்சம் குழப்பிவிடும்.  இரண்டு பசங்க பேசி விளையாடும் பொழுது… பேச்சுக்குள் வந்து போகுமல்லவா அப்படி வருவது தான் ”மான்ஸ்டர்”.

 

துவக்கத்தின் அம்மாவின் பார்வையில் சொல்லப்படும் விசயங்களும், வந்தடைகிற முடிவுகளும், மற்ற கோணங்களில் காட்டப்படும் பொழுது,  நாம் பதட்டமாகிவிடுகிறோம்

 

நாம் வாழ்விலோ, பிறர் வாழ்விலோ ஒரு நடந்த நிகழ்வு குறித்து… முழுதான விவரங்களை கேட்டிருக்கிறோமா? மற்ற மற்ற கோணங்களில்  இருந்து யோசித்திருக்கிறோமா! அப்படியென்றால் அந்த தாயைப் போல எத்தனை தப்பும் தவறான முடிவுகளுக்கு வந்து சேர்ந்திருப்போம் என எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

 

குழந்தைகள், அவர்களிடம் பேசும் விசயங்கள், அவர்களை கையாள்வது என எல்லாவற்றிலும் கவனமாக இருக்கவேண்டும்.   ஒரு பிரச்சனையை சரியாக எதிர்கொள்ளாமல், பள்ளி பாதிக்கும் என்ற கோணத்தில் மட்டும் நிர்வாகத்தினர் சிந்திப்பது. அது எத்தனை கோளாறுகளை கொண்டு வருகிறது? 

 

படத்தில் வருகிற தாய், ஆசிரியர், இரண்டு பசங்க என அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  Hirokazu Kore-eda சிறப்பான இயக்கம் செய்திருக்கிறார். குழந்தைகளுக்கான இப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வரவேண்டும்.

 

பார்க்க வேண்டிய படம்.   அமேசானில் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

How to make a killing (2024) பிரெஞ்சு


பிரான்ஸ். எங்கும் வெண்பணி சூழ்ந்த ஒரு மலைப்பிரதேசம்.  ஒரு மாபியா கும்பல் போதை மருந்தை கைமாற்ற வருகிறார்கள்.    இரண்டு இடங்களில் ஒரு ஒற்றைக் கரடி குறுக்கிட… சீட்டு கட்டுகளை கலைத்துப் போட்ட மாதிரி ஆகிவிடுகிறாது.   இரண்டு குழுக்களில் மூன்று பேர் இறந்துவிட… மீதி உள்ள ஆட்கள் போலீசில் மாட்டிக்கொள்கிறார்கள்.

 

தன் மகனுடன் வாழ்ந்து வரும் கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் மரம் வெட்டி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலே நடந்த களேபரத்தில் அவர்களிடம் இரண்டு மில்லியன் யூரோ சிக்குகிறது.

 

இவர்கள் தடயங்களை அழிக்கிறேன் பேர்வழி என இருவரும் தடயங்களை விட்டுக்கொண்டே நகர்கிறார்கள்.

 

ஒரு பக்கம் போலீசு விசாரணை. இன்னொரு பக்கம் பணத்தை மீட்க கொலைகளுக்கு அஞ்சாத மாபியா கும்பல் முயல்கிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

 

****


ஒரு மலைப்பிரதேசம். இயல்பான மனிதர்கள். மந்தமான போலீசு.  அங்கு தீடீரென ஒரு களேபரம் நடந்தால்… என்ன நடக்குமோ அதை சரியாக எடுத்திருக்கிறார்கள்.

 

படத்தில் மெல்லிய அளவில் நகைச்சுவை இழையோடுகிறது.  இன்னும் சரியான விகிதத்தில் கவனமாக கலந்திருந்தால்… இன்னும் அருமையாக வந்திருக்கும்.

 

கொலை விசாரணையில் சிக்கும் அந்த காரில் தன் காதலனுடன் இருந்த அதிகாரியின் மகள். அவளிடம் விசாரணையும் செய்யவேண்டும்.  ஆனால் ஒத்துழைக்கவும் மறுக்கிறாள். இதற்காக மருகும் அதிகாரி.

 

கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,  மனதளவில் விலகியிருப்பவர்கள். திடீரென பெரும் பணம் கிடைக்கிறது.  இப்பொழுது இருவரும் இணைந்து மிக கவனமாக செயல்படவேண்டும். ஆனால் தனித்தனியே சிந்தித்து இயங்கும் பொழுது ஏற்படும் கலாட்டாக்கள்.

 

கரடியைப் பார்த்ததும்.. அந்த மாபியா கும்பலில் “அய்யோ கரடி!” என தமிழில் பயந்து அலறுவார்.  பிரெஞ்சு படத்தில் தமிழா என பார்த்தால்… போதை மருந்தை கடத்தும் கும்பலில்… போதை மருந்தை கேப்ஸ்யூலாக முழுங்கி கடத்துபவராக தமிழர் ஒருவரை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  அடப்பாவிகளா!

 

”ஜூராவில் ஒரு கரடி” என பிரெஞ்சில் இருந்த பெயரை பிற மொழிகளில் பிரபலப்படுத்துவதற்காக “கொலை செய்வது எப்படி?” என  அதிரடி பெயராக மாற்றியிருக்கிறார்கள். 1990களில் தெலுங்கு படங்களை இங்கு மொழி மாற்று செய்து வரும் பொழுது இப்படித்தான் பெயர் வைப்பார்கள்.

 

ஆஹோ ஓஹோ படம் இல்லை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

 

பிரைமில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பேசும் பொழி பிரெஞ்சு. இங்கிலிஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.

June 1, 2025

சிறார் இலக்கியம்



வீட்டில் அம்மா தேநீர் வாங்க கடைக்கு அனுப்புவார். அங்கு கிடக்கும் தினத்தந்தியில் படக்கதையான சிந்துபாத்தை எட்டு வயதில் படிக்க துவங்கினேன்.  பிறகு பள்ளி விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அம்புலி மாமா, பாலமித்ரா, படக்கதைகள் என 25 பைசா கொடுத்து.. இருட்டும் வரை படித்துவிட்டு வீடு திரும்புவேன்.

 

ஒரு முடிவெட்டும் கடையில் எதைச்சையாய் இராஜேஷ்குமார் அறிமுகமாக,  ப.கோ. பிரபாகர், சுபா என துவங்கி… சுஜாதா, பாலகுமாரன், ஜானகிராமன் என நகர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இடது சாரி தோழர்கள் அறிமுகமானார்கள்.

 

ஜெயகாந்தன், கார்க்கி, டால்ஸ்டாய் என வாசிப்பு உலகம் விரிந்து பரந்தது.  இன்றைக்கும் என்னைப் பாதுகாப்பது, அறிவூட்டுவது எல்லாம் தேர்வு செய்து படிக்கும் புத்தகங்கள் தான். 

 

சமீபத்தில் சிறார் இலக்கியம் குறித்து எழுத்தாளர் விழியன் விரிவாக பேசிய உரையை கேட்டேன்.

 

காணொளி உலகமாக உலகம் மாறிவிட்ட பிறகு, குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களை மட்டுமே படிக்கவேண்டும் என்ற நிலை மாறிய பிறகு, ஓய்வு என இல்லாமல் நகரும் குழந்தைகள்.

 

சிறார் இலக்கியத்தின் வரலாறு, எப்பொழுது அதன் பொற்காலம், இப்பொழுது எப்படி இருக்கிறது? எத்தனைப் புத்தகங்கள் வெளிவந்தது. இப்பொழுது கணிசமாக குறைந்து போயிருக்கிறது. என்ன செய்யவேண்டும்? எழுதுவதில் எது உள்ளடக்கமாக இருக்கவேண்டும்? என அவர் பேசிய ஒரு மணி நேர உரை முக்கியமானது.

 


புத்தகங்கள் ஒருபக்கம் குறைந்திருக்கிறது. வாசிப்பது குறைந்திருக்கிறது என்றால்…  ஆண்டுக்கு சில நூறு படங்கள் வெளிவரும் நம் நாட்டில், சிறார்களுக்கான திரைப்படங்களும் மிகவும் குறைவு. அதுவும் நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரியவர்களுக்கான படத்தைத் தான் குழந்தைகளும் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள் என்பது பெரிய துயரம்.

 

இந்த நிலைமை மாற நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்த உரையில் சொல்லியிருக்கிறார் என்பது முக்கியமானது. அவசியம் கேளுங்கள். அந்த உரையின் சுட்டியை கீழே பகிர்ந்திருக்கிறேன்.

May 30, 2025

ஆப்பிரிக்க இலக்கியத்தின் ஜாம்பவான் நுகி வா தியாங்கோ காலமானார்!


”எதிர்ப்பு தான்

உயிருடன் இறப்பதற்கு சிறந்த வழி”

   -  நுகி வா தியாங்கோ

 

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாவல் படித்தது இன்னும் நினைவின் இடுக்குகளில் தங்கியிருக்கிறது. அந்த நாவலின் பெயர் “சிலுவையின் தொங்கும் சாத்தான்”.  

 

ஏகாதிபத்தியங்கள் கென்யாவில் தங்களுக்கு ”சிறந்த” சேவை வழங்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு முன்னால்   கென்யாவின் மக்களை எப்படியெல்லாம் திறமையாக ஏமாற்றினோம் என்பதை ஒவ்வொருவராக வந்து தங்களின் கடந்த கால செயல்பாடுகளை விளக்கி நான் தான் ”சிறந்த சேவகன்” என வாதாடுவார்கள்.

 


கடைசியில் மக்கள் எழுச்சிக்கொண்டு எல்லோரையும் துரத்தி அடிப்பது போல முடியும்.   சில நாவல்கள் தான் காலம் கடந்தும் நினைவில் தங்கும்.  அப்ப்டி இந்த நாவல் என் நினைவின் இடுக்குகளில் தங்கிவிட்டது.

 

கென்யாவிற்கு எழுதப்பட்ட இந்த நாவல், அதன் வடிவத்தை எடுத்துக்கொண்டு அப்படியே இந்தியாவிற்கு பொருத்தமுடியும். 1990களில் எளிமையான வடிவத்தில் சிறு சிறு நாடகங்களாக நண்பர்களோடு இணைந்து மேடையேற்றிக்கொண்டிருந்தோம்.   அதன் வரிசையில் இந்த நாடகத்தையும் நிறைவேற்ற முயன்றோம். ஆனால் இயலாது போனது.


”கார்டியன்” இதழில்  அவர் இறந்த செய்தி நேற்று வெளியாகியிருக்கிறது. 1995ல் புற்று நோய் தாக்கி, 2019ல் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். 87 87 வயதாகிறது. நேற்று அவர் இறந்ததாக அவருடைய மகள் அறிவித்துள்ளார்.


1938ல் கென்யாவில் பிறந்துள்ளார். அவருடைய அப்பாவிற்கு நான்கு மனைவிகள். 28 குழந்தைகளில் ஒருவர் இவர். ”கிகி”யூ தான் தாய்மொழி. ஒரு பல்கலை கழகத்தில்  ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார்.  சிறுகதைகள், நாடகம், நாவல் என பல எழுதியுள்ளார்.   ஒரு நாடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றியதற்காக, சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

 

ஓராண்டு காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்த பொழுது தான் மலம் துடைக்கும் தாளில் ”சிலுவையில் தொங்கும் சாத்தான்” நாவலை எழுதியுள்ளார்.

 


1978ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, 1982ல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.  இங்கிலாந்துக்கு சென்றவர் பிறகு அமெரிக்காவிற்கு இடம் பெயர்கிறார். அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்காக தொடர்ந்து சிந்தித்தவர். எழுதியவர், செயல்பட்டவர்.

 

அவருடைய பிற நாவல்கள் அழாதே குழந்தாய் (Weep not child), இடைப்பட்ட ஆறு (The river between), கோதுமை தானியமணி (Grain of Wheat), இரத்த இதழ்கள் (Petals of Blood).

 

உலக நாடுகளை தன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆக்கிரமிப்பு செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து நிற்கும் மக்கள் போராட்டங்களில் நிச்சயம் இவருடைய படைப்புகள் முக்கிய ஆயுதம்.

 

அவருக்கு நமது அஞ்சலி!

 

#Ngugi wa thiongo (1938 – 2025)

 


”சிலுவையில் தொங்கும் சாத்தன்” நாவலை அமரந்த்தா – சிங்கராயர் தமிழில் அருமையாக மாற்றம் செய்துள்ளார்கள். பக்கங்கள் 432.