> குருத்து: ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

February 21, 2021

ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!


ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும்... உச்சநீதிமன்றம் திட்டவட்டம்- மறு ஆய்வு மனுக்கள் அதிரடி டிஸ்மிஸ்!

நலத்திட்டங்கள், மானியங்கள் பெயரைச் சொல்லி, ஆதாரை நைச்சியமாக திணித்துவிட்டது மத்திய அரசு. மெல்ல மெல்ல நலத்திட்டங்களை, மானியங்களை ரத்து செய்துக்கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் மான்யமோ, நலத்திட்டங்களோ இருக்கப்போவதில்லை. ஆனால், ஆதாரைக் கொண்டு நம்மையெல்லாம் வதைக்கப்போகிறார்கள்.
*****
டெல்லி: மத்திய அரசின் ஆதார் அட்டைகள் அரசியல் சாசனப்படி செல்லும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. ஆதார் அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 27 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 2018 பிப்ரவரி முதல் மே மாதம் வரை 38 நாட்கள் தொடர் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் 2018 டிசம்பர் 26-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், அரசியல் சாசனத்தின்படி ஆதார் முக்கியமானது. மத்திய அரசின் திட்டங்கள், சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்; அரசியல் சாசனப்படி ஆதார் அட்டை செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டிஒய் சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் டிஒய் சந்திரசூட் தவிர 4 நீதிபதிகளும் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்யலாம் என தீர்ப்பு வழங்கினர். ஆனால் நீதிபதி டிஒய் சந்திரசூட் மட்டும் ஆதார் சட்டத்தை பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது தொடர்பான வழக்கு அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நிலுவையில் உள்ளதால் மறு ஆய்வு மனுக்கள் மீதான உத்தரவை நிறுத்தி வைக்கலாம் என கூறியிருந்தார்.
இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அடிப்படையில் மத்திய அரசின் ஆதார் அட்டைகள் அரசியல் சாசனப்படி செல்லும் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் நீதிபதி டிஒய் சந்திரசூட், ஆதார் சட்டம் செல்லும் என்கிற 4 நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- Oneindia Tamil தளத்திலிருந்து…

0 பின்னூட்டங்கள்: