> குருத்து: லாக்டவுன் கதைகள் - 4

May 23, 2020

லாக்டவுன் கதைகள் - 4

ரயிலில் சொந்த ஊருக்கு
செல்ல ஆசைப்பட்டான்.
உயிரற்று ஆம்புலன்சில்
சென்றடைந்தான்.


ஆசிப் இக்பால் மண்டல். வயது 22.
எர்ணாகுளம் மாவட்டம் கொடநாடு பகுதி.
செங்கல்சூளையில் வேலை.
ஊரடங்கால் சூளை மூடப்பட்டது.
செய்த வேலைக்கு
கூலியும் தரவில்லை.

ஊருக்கு செல்லலாம் என்றால்
ரயில் இல்லை. பேருந்து இல்லை.
நடந்தே செல்லலாம் என்றால்
மேற்குவங்கம் முர்ஷிடாபாத் வரை
செல்ல வேண்டிய தூரம் 2900 கிமீ.
தயங்க வைத்தது.

கையிலிருந்த சொற்ப பணமும்
கரைய ஆரம்பித்தது.
ஊருக்கு சென்றுவிட்டால்
மீண்டும் ஒரு போதும் திரும்பகூடாது என
முடிவெடுத்தான்.

இரண்டு முறை
ரயிலில் செல்ல விண்ணப்பித்தும்
ரத்தானது.
இனி ஒரு போதும்
வீட்டிற்கு போக முடியாது என நம்பத்துவங்கினான்.
பதட்டமும், பயமும் அதிகமானது.
மோடியின் ராஜ்ஜியத்தில் இருந்து
விடுதலை பெற்றார்.

உயிரோடு அனுமதிக்காத அரசு
உயிரற்று ஆம்புலன்சில் 2900 கி.மீ
செல்ல அனுமதித்தது!
செலவு ரூ.1,30,000.
சொந்த ஊர்காரார்கள் வசூலித்து
பணத்தைக் கொடுத்தார்கள்.

”எல்லாம் முடிந்துவிட்டது” என
பண்ணை விவசாயியான தந்தை கலங்கினார்.
மூத்த மகனை இழந்த செய்தி
கேள்விப்பட்டதிலிருந்து
அம்மா பலமுறை மயங்கி விழுந்தார்.

பணக்காரர்கள்
உலகத்தில் எங்கிருந்தாலும்
பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பிவிடுகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளிகளுக்கு
சொந்த ஊர் செல்வது கூட
கனவாகத்தான் இருக்கிறது!

Source : The Wire (13/05/30)

Photo : Asif's father, brother and mother

https://thewire.in/rights/migrant-bengal-suicide-trains

0 பின்னூட்டங்கள்: