> குருத்து: Kavaludaari (2019) கன்னடம்

May 3, 2020

Kavaludaari (2019) கன்னடம்

கதை. நாயகன் போக்குவரத்து காவல்துறை அதிகாரி. புலனாய்வு துறைக்கு மாற்றலாகி நிறைய சாதிக்கனும்னு ஆசைப்படுகிறார். ஆனால், மாற்ற மறுக்கிறார்கள்.

அவர் வேலை செய்யும் பகுதியில், பாலம் வேலைக்கு தோண்டும் பொழுது, ஆண், பெண், குழந்தை என மூன்று பேருடைய எழும்புக் கூடுகள் கிடைக்கின்றன. அவையெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முந்தவையாக இருக்கின்றன. போலீஸ் இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். நாயகன் தன் வேலையினூடாகவே ஆராய்கிறார்.

ஒரு பத்திரிக்கையாளர், ஒரு ஓய்வுபெற்ற போலீஸ்காரர் என தொட்டு... தொட்டு... அது எதிர்பார்க்காத ஒரு இடத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

கன்னடத்தில் லூசியா, யூடர்ன்க்கு பிறகு நான் பார்த்த மூன்றாவது கன்னடப்படம். புதியவர்கள் புது ரத்தம் பாய்ச்சுகிறார்கள். வாழ்த்துவோம்.

படத்தில் பிரதானமாக வருகின்ற நாயகன், போலீசுகாரர், பத்திரிக்கையாளர் என மூவருமே நன்றாக செய்திருக்கிறார்கள். இயக்கமும், தொழில்நுட்ப விசயங்களும் சிறப்பு.

படத்தின் முடிவில்... போலீஸ் யூனிபார்ம்க்கு விரைப்பாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். நமக்கு தெரிந்த கதை எல்லாம், சொத்து உள்ளவர்கள் எல்லாம் தனக்கென ஒரு அமைப்பை (Govt) உருவாக்கி, அதை பாதுகாக்க போலீசை உருவாக்கினார்கள். அதனால் தான் வசதி உள்ளவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் போலீசு விசுவாசமாக இருக்கிறார்கள். உடைமை இல்லாத பெரும்பான்மை மக்கள் மீது வள்ளென விழுகிறார்கள். எங்கேயாவது ஒரு 'நல்ல' போலீசைக் காட்டி, 'சூப்பர்ல' என சொன்னால், கையெல்லாம் தட்ட முடியாது.

படத்தில் முக்கியமான பாத்திரம் கிருத்துவர். காலப்போக்கில் இந்துவாக மாறிக்கொண்டார் என்கிறார்கள். கர்னாடக அரசியல் நிலைமையை இயக்குநர் பயன்படுத்திகொள்கிறாரோ!

இப்பொழுது தமிழில் சிபியை வைத்து எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சிறப்பாக எடுப்பார்கள் என நம்புவோம்.

மற்றபடி, ஒரு நல்ல திரில்லர். பாருங்கள். .

0 பின்னூட்டங்கள்: