> குருத்து: கண்கள் தானம்

March 17, 2020

கண்கள் தானம்

நண்பரின் அக்கா சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று இராயபேட்டை மருத்துவமனையில் திடீரென இறந்ததாக தகவல் சொன்னார்கள். அடித்துப் பிடித்துப் போனேன்.

இறந்தவருடைய கண்களை தானமாக கொடுப்பதாகவும், அதற்காக ஏற்பாடு நடந்துகொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

ஏற்கனவே தானமாக தர எழுதி தந்திருந்தாரா? என கேட்டேன். இல்லை என்றார்கள்.

நண்பரின் குடும்பம் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். எளிய மனிதர்கள். இந்தியாவில் 10 கோடி பேருக்கு கண்கள் தேவை. அவர்களின் உலகம் இருள் சூழ்ந்ததாக இருக்கிறது. ஒருவர் தரும் கண்கள் இருவருக்கு பார்வை கிடைத்துவிடும். இந்த நிலைமையை மருத்துவர்கள் எடுத்து சொன்னதும் மனித நேயத்துடன் உடனே தர ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

சிறிது நேரத்தில் உடலை தந்தார்கள். எல்லோர் கண்களிலும் கண்ணீர். மாலை கொண்டு மரியாதை செலுத்தினேன்.

உறவினர்களோடு அந்த வேன் கிளம்பியது.

0 பின்னூட்டங்கள்: