> குருத்து: Tribhanga (2021) இந்தி

May 24, 2021

Tribhanga (2021) இந்தி


கதை. ஒரு பெண் எழுத்தாளர். எழுதுவதில் தீவிரமாய் இருக்கிறார். மாமியாரோ வழக்கமான ‘மருமகள்’ஆக இரு என நச்சரிக்கிறார். கணவனோ அம்மாவை மீறி பேச மறுக்கிறார். விருந்தாளிகள் வந்திருக்கும் வேளையில் மாமியார் அவமானப்படுத்த, இனி இங்கு வாழ்வதில் அர்த்தமில்லை என தனது மகள், மகன் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.


பிறகு வந்த வருடங்களில் புதிதாய் ஒருவனை திருமணம் செய்ய, அவனோ பாலியல் ரீதியாக சிறுமியை தொந்தரவு செய்கிறான். அவளோ அம்மாவிடம் சொல்லி இந்த பிரச்சனையை சொல்லாமல், ”சொந்த வீட்டிலேயே எனக்கு பாதுகாப்பு இல்லாமல் செய்துவிட்டாள்” என அம்மாவின் மீது கடுமையான வெறுப்பை வளர்த்துகொள்கிறாள்.

பின்னாளில் ஒடிசி நடனம் கற்றுக்கொண்டு, பாலிவுட் நடிகையாகிறார். ரசியாக்காரனோடு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமாகிறார். ஒரு பிரச்சனையில் அவன் வயிற்றில் அடித்தான் என சொல்லி, அவனை அடித்து துரத்தி விடுகிறாள். கடந்த கால கசப்பான அனுபவத்தில் வீட்டில் எந்த ஆணையும் தங்கவிடாமல் கவனமாக தன் பிள்ளையை பார்த்துக்கொள்கிறாள். அவளின் தம்பியோ ஆன்மீகத்தில் அடைக்கலமாகிறான்.

அந்த பெண் வளர்ந்த பிறகு, அம்மாவின் கசப்பான அனுபவத்தால் தனக்கு ஒரு ‘குடும்பம்’ வேண்டுமென ஆக பிற்போக்கு குடும்பத்தில் திருமணம் செய்துகொள்கிறாள்.

இந்த வேளையில் எழுத்தாளர் மயக்க நிலைக்கு (Coma) செல்ல, பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி முடிக்கிறார்கள்.
*****

அடுத்த பிறவியில் நம்பிக்கையில்லை. நமது பிள்ளைகள் தான் நமது அடுத்த பிறவி என நம்புகிறேன். ஆகையால், நாம் செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகள் நம் பிள்ளைகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை படம் அழுத்தமாய் சொல்லி சொல்கிறது.

பாட்டி, அம்மா, பேத்தி என மூன்று தலைமுறையின் கதை சொல்லல் மூலம் சமூகம் எவ்வளவு சிக்கலாக இருப்பதையும், அதில் தனிநபர்களின் பாத்திரங்களையும் அருமையாக சொல்லி செல்கிறார். அதன் மூலம் மூவருக்குள்ளும் ஒரு புரிதலை உண்டாக்குகிறார்.

மூவரின் நடிப்பும் சிறப்பு. அம்மாவின் மீது கடுப்பு. யாரைப் பார்த்தாலும் எரிச்சலும், கோபமாய் கஜோலுக்கு இந்தப் பாத்திரம் புதிது என நினைக்கிறேன். அருமையாக செய்திருக்கிறார்.

பார்க்க வேண்டிய படம். பாருங்கள். இப்பொழுது நெட் பிளிக்சில் கிடைக்கிறது.

0 பின்னூட்டங்கள்: